2010

2010

ஆலயச் சூழலில் தயாரிக்கப்படாத உணவுகளை விற்பதற்கு அனுமதியில்லை

யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக்களையொட்டி ஆலயச் சூழலில் அமைக்கப் படும் தேநீர்க் கடைகள், மற்றும் உணவுச் சாலைகள் என்பவற்றில் வைக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் உரிய இடத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென யாழ். மாநகர சபையின் சுகாதார குழுவின் தலைவர் மங்களேஸ்வர் தெரிவித்துள்ளார்.

வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் உணவகங்களில் விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவுகளை மீறி செயற்படுகின்ற உணவகங்களின் உத்தரவுப்பத்திரங்கள் யாவும் நீக்கப்படுவதுடன் உணவகங்கள் உடனடியாக பூட்டி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற வழக்கு அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் ரணில்

ranil-wickramasinghe.jpgஜெனரல் சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவம் மீது எச்சில் துப்பும் தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் திருத்தச் சட்ட பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளார். இவ்வாறான நிலையில் அரசினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து முறையாக அறிவித்து பதவி விலகிய பின்பே அரசியலில் ஈடுபட்டார். இராணுவ சேவையிலுள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்றுதான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர இராணுவ சேவையிலிருந்து விலகிய ஒருவர் போட்டியிடக் கூடாதெனக் கூறப்படவில்லை. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான சட்டவாக்கத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஆனால் இங்குள்ள நிலைமை என்னவென்பது கேள்விக்குறியாகவுள்ளது.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக இராணு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகார பொய் கூறினார். இந்தப் பொய்யை இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், சரத் பொன்சேகா மீது தேசத்துரோகம், சதித்திட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியும் அறிவித்தார்.

அன்றைய காலகட்டத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா, பொதுத்தேர்தலா என்ற எந்த அறிவிப்பையும் அரசு விடுக்காதிருந்தது. இதனால் நாமும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தாமதத்தை ஏற்படுத்தினோம். இது தொடர்பில் அப்போது நாம் எதனையும் கூறவில்லை.

இந்நிலையில் அதே மாதம் 26ஆம் திகதி நடந்த கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பதென எமது கட்சித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேரிலேயே நாம் சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம். அச்சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் எந்தப் பதவியிலும் இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகாரவினால் கூறப்பட்ட பொய்யை ஏற்றுக்கொண்ட இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவின் பதவிகளையும் பதக்கங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் விடயத்தில் உண்மையான நிலையினை கண்டறியாத இராணுவ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் இந்நாட்டின் இராணுவம் மீது எச்சில் துப்பப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா சி.டி.எம்.ஏ. தொலைபேசியூடாக தொடர்புகொண்டு பேசியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். அப்படியானால் அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சரத் பொன்சேகாவினுடையதுதானா என இராணுவ நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா மீது எப்படி இந்தத் தீர்ப்பினை வழங்க முடியும்?

பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கான ஒரு ஆரம்பமாகவேயுள்ளது.

இங்கு ஒருவர் பிரபாகரன் போல் நடக்கின்றார். பிரபாகரன் தனது தளபதி மாத்தயாவை கூண்டில் அடைத்து பின்னர் கொலை செய்தார். அதேபோன்று தற்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினையாகும். இது தொடர்பிலான விசாரணைகள் போலியாக அமையாமல் அதனை இந்தச் சபையில் விவாதிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவேண்டும். அத்துடன், பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசாரணைகளின் அறிக்கைகளையும் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

வட மாகாணத்திலிருந்து 4763 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கண்டறிய விசேட நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் கண்டறியும் நடவடிக்கையை அதிகார சபை இம்மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்சவின் அறிவுறுத்தலுக்கமைய நடைமுறைப்படுத்த ப்படவுள்ள இத்திட்டத்தின் நோக்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் உரிய முறையில் இனங்கண்டு கொள்வதும், இனங்காணப்பட்ட காணிகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கான முறையில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய, அத்துமீறிய குடியிருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே முறையாக விபரங்களை ஒன்று சேர்த்து வைக்காத காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்

காணிகளின் சகல விபரங்களும் இம் மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந் நடவடிக்கையானது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுவதுடன், அம் மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அக் காணியில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

பொன்சேகா மீதான தீர்ப்பு சபையில் பெரும் அமளிதுமளி

glp.jpgசரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிரணியும் கடுமையாகத் தர்க்கித்ததால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து சபை அலுவல்கள் 5 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.

பாராளுமன்றம் நேற்றுக்காலை செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று அதன்பின்னர் குடியியல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. நீதியமைச்சர் அதாவுடசெனவிரட்ன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தனதுரையில், சரத்பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாக தனது கருத்துகளையும விளக்கங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தவுடன் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திசாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். இதற்கு அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து அநுரகுமார திசாநாயக்க தனது பிரச்சினையை முன்வைத்தபோது அது ஒழுங்குப் பிரச்சினையல்லவெனக் கூறிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அமைச்சர் பீரிஸை உரையாற்ற அழைத்தார். ஆனால் பீரிஸைப் பேச விடாது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.

அப்போது எழுந்த அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சபாநாயகரின் தீர்ப்பு சரியோ பிழையோ அதனை விமர்சனத்துக்குள்ளாக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து பீரிஸ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான வகையில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிரணியினர் சபையில் விமர்சித்தனர் இராணுவ நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விமர்சிப்பதற்கு தனியான பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்படுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இராணுவ நீதிமன்றம் மற்றும் அதன் நீதிபதிகள், தொடர்பாக சபையில் எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது. இராணுவ நீதிமன்ற ஏற்பாடும் எமது அரசியல் யாப்பில் உள்ளதே. இராணுவ, கடற்படை கட்டமைப்புக்களின் சட்ட ஏற்பாடுகள் இன்று, நேற்று உருவாக்கப் பட்டவை அல்ல மாறாக அவை 1948ல் ஏற்படுத்தப்பட்டவை.

நாம் ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும் அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.  நீதிபதிகளை விமர்சிக்க முடியாது என்று நான் கூறவில்லை. அதற்கும் ஒழுங்கு உள்ளது அந்த ஒழுங்கு இங்கு மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 78வது பிரிவு தனியே நீதிபதிகள் குறித்து பேசவில்லை, மாறாக நீதித்துறையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான விடயம் நீதிமன்றங்கள், தொழில் மன்றுகள் என்பன இலங்கை சட்டத்திற்குள் உட்பட்டவையே. அதனுள் இராணுவ நீதிமன்றமும் அடங்கும்.

இராணுவ நீதி மன்றத்திற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற தீர்ப்புக்களை கூட வழங்க அதிகார முள்ளது. அதனால் அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான எதிரணியினரின் உரைகள் பாராளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுவது அவசியம்.

கூட்டமைப்பு எம். பிக்கள் மூவருக்கு மட்டு. நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேந்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் கே. ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமைகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாகைகளை ஏந்திய வாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதி மன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகளின் அரங்கம் அரசிடம் கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நேரடியாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் கடந்த 14ம் திகதி மட்டக்களப்பில் கூடியபோதே இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐந்தாவது தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி,  ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த இரா.தரைரத்தினம்,  சிறிரெலோ கட்சியின் பி.உதயராசா மற்றும் எஸ்.சந்திரகாசன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறத்தப்பட்டு. அhத்தமுள்ள மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல். சிவில் நிர்வாகத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல், போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடு வழங்குதல்,  வடக்கு கிழக்கின் இனப்பரம்பலில் மாற்றத்தை எற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும், இவை தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைள் தொடர்பான திட்டவரைவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன், அடுத்து நடைபெறும் சந்திப்புகளில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க. தமிழ் கட்சகிளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு எதவும் விடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதில் கலந்து கொள்வது குறித்து கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும். அவர் இந்தியா சென்றிருப்பதால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தர் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் தூதுக்குழு கூட்டமைப்பை நேரில் சந்தித்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பினை விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடுத்த வருடத்திற்குள் வீடமைப்பு நிறைவு பெறும் என அரச அதிபர்

imalda.jpgயாழ்ப் பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் அடுத்த வருடத்திற்குள் முழுமையாக மீள்நிர்மானம் செய்யப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2011ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் 2171 வீடுகள் மீள்நிர்மானம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 14 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். முன்னுரிமை அடிப்படையில், மீளக்குடியேறிய சகல குடியிருப்பாளர்களுக்கும் வீடு, சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 3இலட்சத்து 25 ஆயிரம் ரூபா ஐந்து கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டும் மீள்குடியமர்த்தப்படாமலுள்ள வன்னி மக்களின் அவலம்!

Namal_Rajaparksa வவுனியா மனிக்பாம் அகதி முகாம்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் தங்களின் சொந்தக் காணிகளில் குடிறேமுடியாத நிலை எற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்கு எல்லைகளிலுள்ள மயில்வாகனபுரம், குமாரசாமிபரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கபட்டுள்ளனர். மேற்படிக் கிராமங்களுக்கு அம்மக்கள் அதிகாரிகளால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட போதும், அங்குள்ள படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக  தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் அடிக்கடி வன்னிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவிற்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர் பகுதிகளிலும் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

”அம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!” TNA MP பியசேன

jj.jpgஅம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் எனக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

”அம்பாறை கரையோரத் தமிழ் பிரதேசங்களில் மட்டும் 15 இற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாகவும், சுனாமியினாலும் வன்முறைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் நலிவடையச் செய்ய இம் மதுபான சாலைகள் துணை போகின்றன எனவும், இவை மூடப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டங்களில் தமிழ் சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே மதுபான சாலைகள் அதிகமுள்ளன. தமிழ், சிங்கள தனவந்தர்கள் மட்டுமே இம் மதுபான சாலைகளை நடத்திவருகின்றனர். முஸலிம்கள் இவ்வாறான தொழிலில் ஈடுபடவில்லை. தமிழ் பிரதேசங்களை கருவறுப்பதற்காக அரசியல்வாதிகள் இதற்கான அனுமதியை வழங்கி வருகின்றனர்.

கல்முனையில் நகர மத்தியில் உயர்நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றம். ஆதார வைத்தியசாலை, உயர் கல்விநிலையம், ஆகியவற்றின் மத்தியில் மதுபான சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்துள்ளது. காரைதீவிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு, ஆகிய பகுதிகளிலும் மதுபான சாலைகள் உள்ளன.

ஆனால், ஒரு முஸ்லிம் கிராமத்திலும் மதுபான சாலைகள் இல்லை எனபது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் ஒரு தொழிற்சாலை உள்ளதா? அதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்றால் இல்லை. காரைதீவு கிராமத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க அனுமதி கேட்டு வருடக் கணக்காகின்ற நிலையில் இன்னும் அனுமதி இல்லை. ஆனால் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மதுபான சாலைகளால் தினமும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி வீதி விபத்துக்களும் எற்படுகின்றன. மதுவினால் பல குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.”

இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.