August

August

”வடக்கின் வசந்தத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கையில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அங்கு சகஜ நிலை திரும்பும் வரை நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என்று விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக எம்.எஸ். சுவாமிநாதனை அழைத்திருந்தார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இதற்காக சுவாமிநாதனும் கொழும்பு சென்று ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழர்கள் அனைவரையும் முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த நிலையில், நிலங்களைச் சீரமைத்து அங்கு யார் விவசாயம் பார்க்கப் போகிறார்கள். சிங்களவர்களுக்கு ஆதரவான திட்டம் இது. இதற்கு சுவாமிநாதன் உதவக்கூடாது. மீறினால் சுவாமிநாதன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார் சுவாமிநாதன். அப்போது அவர் கூறுகையில்;

இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் தன்மானம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 3 இலட்சம் பேர் வவுனியாவில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்குச் சென்றால் தான் விவசாயம் மற்றும் மீன்பிடிப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட முடியும். இலங்கைத் தமிழர்கள் நல்ல விவசாயிகள்.

இதற்கிடையே இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனரமைப்பு ஏற்படுத்த இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. உடனடித் தேவைக்கும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி பயன்படும். இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையில் வேளாண்மையையும் மீன்பிடிப்புத் தொழிலையும் மீண்டும் கொண்டு வரவும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழவும் வேளாண்மையில் சிறந்து விளங்கவும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட எண்ணியுள்ளது.

இது தொடர்பாக இந்த 2 தொழில்களையும் வளப்படுத்துவதற்காக உரிய பயிற்சியும் தொழில்நுட்ப உதவியும் செய்வதற்கு இந்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப உதவிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், மதுரை டான் நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் மாதம் இலங்கையில் தொடங்கவிருக்கும் மகா பருவத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்குத் தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்தக் குழு திரட்டித் தருவதுதான் இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். தற்போது இலங்கையில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே, இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை இந்தக் குழுவில் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த மாதம் சர்வதேச நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்குச் சென்றேன். வேறு எதற்காகவும் அங்கு செல்லவில்லை. இலங்கை அரசு அறிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை.

பாதாள உலகத்தாரை பாதுகாக்கும் கடப்பாடு பொலிஸாருக்கு இல்லை – ரஞ்சித் குணசேகர

ranjith-gunasekara.jpgபாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குக் கிடையாதென தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே ரஞ்சித் குணசேகர இவ்வாறு கூறினார்.

“பாதாள உலகத்தினர் பொலிஸாரினால் சட்ட ரீதியாகவே கொல்லப்படுகின்றனர். அதாவது பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் போது பொலிஸார் தற்பாதுகாப்புக் கருதி பதில் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அதில் மாற்று வழிக்கு இடமில்லை. தற்பாதுகாப்புக் கருதி தாக்குதல் நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.

அது மட்டுமல்லாது பாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்கப் பொலிஸார் கட்டுப்படவில்லை. மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பாதாள உலகத்தினரைப் பாதுகாத்து பொது மக்களை ஆபத்தில் தள்ள நாம் தயாரில்லை’ என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

மஸ்கெலியா நகர் வர்த்தகர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.எஸ். பத்திரனவின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மஸ்கெலியா பீ.எம்.டி. கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பொறுப்பதிகாரி சி.எஸ்.பத்திரன அங்கு உரையாற்றுகையில்;

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், சிறுவர்கள் மத்தியிலும், தற்போது பான்பராக், என்சி மேலும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடசாலை அதிபர்களினால் ஜனாதிபதிக்கு புகார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது சம்பந்தமாக இந்நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. ஆகையால் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சிறுவர்களிடம் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்து எதிர்கால சந்ததியை அழித் தொழிக்க வேண்டாம் என சகல வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் பான்பராக், என்சி போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவ்வாறு விற்பனை செய்வோரை இனம்கண்டு உடன் தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

கைதான பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும்: வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பற்றமை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.  மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

திரு.செல்வராசா பத்மநாதன் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டமை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையைத் தலைமைதாங்கி வழிநடத்தி  வந்த திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஓகஸ்ட் 5ம் நாள் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு  இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி  இலங்கை மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றதென்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் திரு பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்துக் கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட, தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புகளிடமிருந்து பெறாப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள ‘ரியூன்’ விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம். இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை, இலங்கையின் இராணுவப் புலனாய்வுத் துறையினரால், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதுகின்றோம்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் இயற்பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின் அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்

திரு.செல்வராசா பத்மநாதன் சித்திரவதைகளுக்கெதிரான சட்டமுறையின் மூன்றாம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படும் சாத்தியமிருந்தால் அந்நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடைசெய்யப்படுகிறது.

இவ்விடத்தில், அனைத்துலக நடைமுறைகள் தமிழர் விடயத்தில் மீளவும் சட்ட நியமங்களை மீறியதையே காண்கின்றோம். திரு.பத்மநாதன் அவர்கள் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள் காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போலியங்கி அவரைச் சிறைபிடிப்பதற்கு பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளின் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட  விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த போதும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிமட்டத்திலிருந்து உருவாகுமொரு சனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்களாட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதை அவர் ஆதரித்தார்.

திரு.பத்மநாதனை வழிப்பறிக் கும்பலினரது பாணியில் கைப்பற்றியவர்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் மீளுருவாக்க முயற்சியைத் தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசியச் செயற்றிட்டம் ஒரு தனிமனிதனின் ஆற்றல் அர்ப்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை என்பதால் எண்ணிலடங்காத பற்றுறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும்வரை தொடரும் என்பது உறுதி.

திரு.பத்மநாதன் அவர்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசாங்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம். மலேசிய அரசாங்கத்திடம் இது விடயத்தில் தகவலேதும் இல்லையெனில் நடந்தேறிய இச்சட்ட விரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாம் உறுதியாக வேண்டி நிற்கின்றோம்.

திரு.பத்மநாதன் அவர்கள் இலங்கை அரசாங்கம் கூறுவது போல் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கமைய அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டுமெனவும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை அரசு ஏலவே மூன்று இலட்சம் தமிழ் மக்களை நாசி முகாம் வகையிலான வதைமுகாம்களில் கால வரையறையின்றி தடுத்து வைத்திருப்பதையும் இது விடயத்தில் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். திரு.பத்மநாதன் அவர்களது உயிர்ப் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே இந்த மக்களது பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால் இம்மூன்று இலட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வுகாண்பதிலும் திரு.பத்மநாதன் அவர்கள் எல்லாவித அனைத்துலக  விழுமியங்களுக்கமைய பாதுகாப்பினை பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி நிற்கின்றோம்.

இவண்

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியும் வவுனியாவில் ரிஎன்எயும் வெற்றி

election000.jpg யாழ்ப்பாணத்தில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியாகவும் தேர்தல் நடைபெற்ற போதிலும் வாக்களித்தவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியும் அமைதியாகவும் நடைபெற்றதாகவும் வவுனியாவில் ரிஎன்ஏ 148 வாக்குகளால் 7ஆசனங்களையும், புளொட் 3 ஆசனங்களையும், இதர கட்சிகள் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

வவுனியாவில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் ரிஎன்ஏ 86 வாக்குகளையும், புளொட் 65 வாக்குகளையும், அரசஆதரவு கட்சிகளின் கூட்டணி 25 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 2 வாக்குகளையும் பெற்றிருந்தது தெரிந்ததே. இதே விகிதாசாரத்தில் மக்கள் வாக்களித்துள்ளதும்; மக்கள் அரசை திட்டவட்டமாக புறம்தள்ளியே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளததுமாக மக்கள் பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

Jaffna Municipal Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  10602      50.67%      13
 
     Ilankai Tamil Arasu Kachchi  8008      38.28%     8
 
     Independent Group 1  1175       5.62%      1
 
     Tamil United Liberation Front  1007       4.81%     1
 
     United National Party  83       0.40%      0
 
     Independent Group 2     47   0.22%      0
 
Valid 20,922     93.90%
Rejected 1,358        6.10%
Polled 22,280        0.00%
Electors      100,417

Vavuniya Urban Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     Ilankai Tamil Arasu Kachchi    4279     34.81%      5 *
 
     Democratic People’s Liberation Front     4136     33.65%     3
 
     United People’s Freedom Alliance     3045    24.77%      2
 
     Sri Lanka Muslim Congress      587     4.78%         1
 
     United National Party     228     1.85% 0
 
     Sri Lanka Progressive Front  10     0.08%     0
 
     Independent Group 1      6        0.05% 0
 
     Independent Group 3     1       0.01% 0
 
     Independent Group 2      0     0.00% 0
 
Valid 12,292       95.66%
Rejected 558       4.34%
Polled 12,850      0.00%
Electors 24,626

ராஜீவ் படுகொலை செய்யப்படவிருந்தமை பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும்? – இந்திய ஊடகம் ஊகம்

pathmanathan.jpgஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவிருந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைவர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்திய தலைமைத்துவத்தை விரைவில் இலக்கு வைப்பார்கள் என 1990 நவம்பரில் செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவருக்குத் தெரிவித்ததாகவும் ராஜீவ்காந்தியின் பெயரை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

1991 மே 21 இல் சென்னைக்கருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக இந்தத் தகவலை கே.பி. தெரிவித்திருந்ததாக எம்.ஆர்.நாராயண் சுவாமி “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கே.பி. மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்தக் கொலையில் அவர் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. காந்தி படுகொலை தொடர்பான பாரிய சதியை தற்போதும் விசாரணை செய்து கொண்டு வரும் பல் ஒழுங்கமைப்பு கண்காணிப்பு அதிகார சபையின் கண்களுக்கு இவர் ஒரு சந்தேக நபராக மட்டுமேயுள்ளார்.

படுகொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி. அறிந்திருந்தமை குறித்து இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் கவனம் செலுத்தியிருந்தன. காந்தியின் படுகொலை தொடர்பாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு கே.பி.க்குத் தெரியவந்தது என்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவின் முக்கியஸ்தராக கே.பி.யிருந்ததால் அவரில் புலிகள் முழுமையாக தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது என்று ஒரு தர்க்க ரீதியான விளக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மேயில் மரணமடைந்ததையடுத்து புலிகளின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையால் சர்வதேச ரீதயிலான ஆயுதக் கொள்வனவு மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி முன்கூட்டியே கே.பி. அந்த விடயம் குறித்து அறிந்திருக்கக் கூடிய தேவையிருப்பதாக புலிகள் கருதியிருக்கக் கூடும்.

ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக முன் கூட்டியே அறிந்திருந்த புலிகளின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் திருச்சி சாந்தனாகும். அவர் 1990 1991 காலப்பகுதியில் தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள், சிங்கப்பூர் கிரனேற் என்பவை தொடர்பாக கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவு பயனுள்ள தகவல்கள் கிடைக்கக் கூடும். எவ்வாறாயினும் கே.பி.யை விசாரணை செய்வது தொடர்பாக தனது பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் கேட்பதற்கு இந்தியா முடிவு செய்யுமானால் அந்த இலக்கிற்குத் தேர்ந்தெடுப்பவர்கள் விடுதலைப் புலிகளின் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தாழ்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று உள்ளது. அக்குழு சேவையாற்றிக் கொண்டும் இருக்கிறது. ஓய்வு பெற்றும் உள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தசாப்த காலம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கடந்த காலத்தில் தகுதிவாய்ந்த பலர் அடிக்கடி ஓரங்கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1983 இலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்புவதற்கு கே.பி. ஆற்றிய பங்களிப்பின் சிறிய பகுதியாகவே காந்தி கொலை தொடர்பாக அவரின் தொடர்பு காணப்படுகின்றது.

பிரபாகரன் இல்லாமல் விடுதலைப் புலிகள் இல்லை. கே.பி. ஒருபோதும் இராணுவ பயிற்சி பெற்றவர் அல்ல. அவர் இந்தியாவிலிருந்த போது 1984 இல் புலிகள் மட்டத்தில் யுத்த உபகரணங்களை உலகளாவிய ரீதியில் பெற்று அவற்றைக் கொண்டு செல்வதற்கு இரகசியக் குழுவொன்றை உருவாக்க பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அந்த வேலைக்கு கே.பி. தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் கே.பி. வளர்ச்சியடைந்தார். மோசடி மற்றும் மறைவாகச் செயற்படுதல் என்பனவற்றில் இயல்பாகவே ஆற்றலுள்ளவராக இருந்த இந்த மனிதர் விரைவில் பல்தரப்பு அடையாளத்துவங்கள் கொண்டவராக தன்னை ஏற்படுத்திக் கொண்டார். கடவுச் சீட்டுகளையும் (இந்தியா உட்பட) பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவைக் கட்டியெழுப்பினார். பல கம்பனிகளை உருவாக்கினார். (எஜமானன் அவரே) பல நாடுகளில் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தங்கம், போதைவஸ்து, கடத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தக் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவர் பயன்படுத்தினார். 1980 களில் இந்தியாவில் தமிழ் நாட்டில் பாற்பண்ணை ஒன்றை இரகசியமான முறையில் நடத்தி வந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்காக இரகசிய கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதன் மூலம் ஆயுதம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. முற்றிலும் இரகசியமான முறையில் அவர் இயங்கி வந்தார். பிரபாகரனுக்கு மட்டுமே விடயங்களைத் தெரிவித்து வந்தார். கே.பி.யின் மூலம் விடுதலைப் புலிகள் ஆயிரணக்கணக்கான தொன்கள் ஆயுதங்களைப் பெற்றது, நவீன பாதுகாப்பு நிலைமைகள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், சினைப்பர் துப்பாக்கிகள், மோட்டார்கள், ஆர்.பி.ஜி.க்கள், இரவில் பார்ப்பதற்கான உபகரணங்கள், கண்டு பிடிப்புக் கருவிகள், கண்ணாடி விலைப் படகுகள், நவீன வானொலி, கம்பியில்லா தொலைத் தொடர்புகள் போன்ற பல முன்னேற்றகரமான பாதுகாப்பு முறைமைகளும் இவற்றில் உள்ளடங்கும்.

கடந்த சில வருடங்களாக மலேசியாவிலே இவர் அறியப்பட்டவராக இருந்தார். 19801990 களில் இவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு அடையாளங்களுடன் இவர் லெபனான், தாய்லாந்து கம்போடியா கம்போடியா எல்லை, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், கொங்கொங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

2006 இல் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரிட்டனில் மரணமடைந்த போது, கே.பி. அங்கிருந்தார். விடுதலைப்புலிகள் தமது முதலாவது சிறிய ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டமை கே.பி.யின் மூலமேயாகும். எவ்வாறாயினும் கே.பி.யின் படிப்படியான வளர்ச்சி புலிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியது.

2003 தொடக்கம் பிரபாகரன் அவரை ஓரங்கட்டியிருந்தார். அவரின் இடத்திற்கு தனது மற்றொரு விசுவாசியான காஸ்ட்ரோவை கொண்டு வந்தார். ஆனால், கே.பி.க்குள்ள இயற்கையான ஆற்றல்களுக்கு அவர் பொருத்தமற்றவராக இருக்கவில்லை. ஆயினும் புலிகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததையடுத்து பிரபாகரன் நிலைமையை உணர்ந்து கே.பி.யை மீள பணிகளில் ஈடுபடுத்தினார். காலம் மிகவும் கடந்து விட்டதாக அமைந்தது.

கே.பி.யின் சிறகுகள் 6 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்படாதிருந்திருக்குமானால் பிரபாகரன் இப்போதும் இருந்திருக்கக் கூடும் என்று புலிகளின் அவதானிகள் பலர் நம்புகின்றனர்.

கனடிய அமைச்சர் இலங்கை வருகை

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்லே ஜே.ஒடா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கனடாவின் அபிவிருத்தித் திட்ட பங்காளிகளை சந்திப்பதற்காகவும் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யவுமே அவர் வருகைதந்திருப்பதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

கனடிய ஊடகவியலாளர்களையும் ஒடா நேற்று வெள்ளிக்கிழமை சந்திக்கவிருந்தார்

“பிரபாகரனின் தொலைபேசியே பத்மநாதன் பிடிபட உதவியது’

pathmanathan.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியே புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை இலங்கை வெற்றிகரமான முறையில் கைது செய்வதற்கு வழிவகுத்ததாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்தது. மே 18 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பிரபாகரன் மரணமடைந்த பின் அவரது சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியை இலங்கையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பிரிவினைவாதப் புலிகளையும் அவர்களில் மீதமாக இருப்போரையும் அழிப்பதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போராட்டத்திற்கு புலிகளின் புதிய தலைவரான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமை அண்மையகால பரிசு என்று ராய்ட்டர் செய்திச்சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கொழும்பில் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று குழுக்கள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனை தேடிச் செல்வதற்காக அனுப்பப்பட்டதாகவும் அவரைக் கைது செய்வதற்காக அல்ல என்றும் தம்மை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத சிரேஷ்ட இராணுவ வட்டாரங்கள் மூன்று தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு அவரைக் கொண்டு வரவேண்டுமென நாம் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு சூழ்நிலைகள் எமக்கு இடமளிக்கவில்லை என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் ஒத்துழைப்பாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் ஆகியவை அந்தத் திட்டத்தை நடைமுறைச்சாத்தியமற்றதாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்லாந்தில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் எந்த நாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துள்ளனர். அதேசமயம், தமது நாடுகளில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளும் மறுத்துள்ளனர். பத்மநாதன் தொடர்ந்து இடங்களையும் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களையும் மாற்றியிருந்ததாகவும் இது தாய்லாந்து, மலேசியா , இந்தோனேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருந்த தருணத்தில் பத்மநாதன் தொடர்ந்து பிரபாகரனுடன் தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருந்தார். “நாங்கள் இப்போது காஸ்ட்ரோ போன்ற விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களையும் மற்றைய முக்கியமான ஆட்களையும் ஏனைய நாடுகளில் தேடி வருகிறோம்’ என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புனைபெயரில் வெளிநாடுகளில் இயங்கும் சிரேஷ்ட புலி உறுப்பினர் காஸ்ட்ரோவாகும். அவர் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது. பத்மநாதன் மீது இன்ரர்போலின் இரு பிடியாணைகள் இருந்தன. அவர் பல கடவுச்சீட்டுகள் வைத்திருந்தார். அத்துடன், அதிகளவு பணமும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கடத்தல் மற்றும் நடவடிக்கைகள் மூலம் வருடாந்தம் 200300 மில்லியன் டொலர்களை புலிகள் சம்பாதித்ததாக நம்பப்படுவதாக ராய்ட்டர் மேலும் கூறியுள்ளது.

வடக்கில் கண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் நிதியூதவி

british_flag.jpgஇலங் கையின் வடக்கே யுத்தத்தின் போது அரசு மற்றும் புலிகளினால் புதைக்கப்பட்ட பெரும் தொகையான கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென பிரித்தானிய அரசு 5 லட்சம் பவுண்களை வழங்க முன்வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்து உள்ளது.

ஆனால்,  உலக வங்கி இலங்கைக்கு கடன் உதவியாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா இதற்கு ஆதரவு வழங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் இலங்கையில் யுத்தம் இடம் பெறுகையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் விலிபாண்ட் உடனடியாக யுத்த நிறுத்ததினை ஏற்படுத்துமாறு இலங்கை அரசினை வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில் தற்போது இல்லை என்பதினை உணரவேண்டும் எனக் கூறியும் இருந்தது.  மேலும் இலங்கைக்கென ஒரு விஷேட சமாதான தூதுவரை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த பொழுது அதனையும் இலங்கை நிராகரித்தது.

எனினும்  பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்திய படையினர் இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது. 

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.