29

29

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.

“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.

“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர்.  இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.

அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு

jaffna1.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டதாக தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடமொன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரெஜினோல்ட் குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை அளித்து வருவதுடன் தேசிய தகைமையுடைய சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.

நேற்றைய முன்தின நிகழ்வில் தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களில் திறமை காட்டிய 100 பேர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானில் அஞ்சலிக் கூட்டம் நடத்த எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

இரானில் கடந்த மாதம் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பலியானவர்களுக்கான நினைவு நிகழ்வை எதிர்கட்சியினர் நடத்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களான மிர் ஹுசைன் முசவி மற்றும் மெஹ்டி கரூபி ஆகியோரிடமிருந்து வந்த வேண்டுகோள், தேவையான சட்ட திட்டங்களை பூர்த்தி செய்யவில்லை என்று, உள்துறை அமைச்சகம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த நினைவு நிகழ்ச்சியின் போது உரையேதும் நிகழ்த்தப்பட மாட்டாது என்று தோல்வியடைந்துள்ள வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தேர்தலையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமை மூடும்படி நாட்டின் அதியுயர் மதத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற அனுமதி – ஒரு குழந்தை சட்டத்தில் மாற்றம்

chinaflag.jpgசீனப் பிரஜை ஒருவருக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது,  என்ற சட்டத்தில் சீன அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி இரண்டாவது குழந்தை பெற்று கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. தற்போது அங்கு 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு, “ஒரு குழந்தை’ திட்டத்தை சீன அரசு சட்டமாக்கியது. தவறி போய் இரண்டாவது குழந்தை உருவானால் கருச்சிதைவு செய்யும் படி பெண்கள் வற்புறுத்தப்பட்டனர்.சீனாவின் இந்த கடும் சட்டம் நல்ல பலன் கொடுத்தது. இதன் விளைவாக தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதே நிலை நீடித்தால் சீனாவில் ஓய்வூதியம் பெருகின்றவர்களின்; கூட்டமே அதிகரிக்கும் என்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்றும் கருதியே  சீன அரசு தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்துள்ளது. சீனாவின் வர்த்தக பகுதியான ஷாங்காயில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 21 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 2020ம் ஆண்டில் வயதானோர் எண்ணிக்கை 34 சதவீதத்துக்கும் அதிகமாகும்,  என கணக்கிடப்பட்டுள்ளது.

யாழ். நலன்புரி நிலையம் – 215 முதியவர்கள் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு

யாழ்.  குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

இதேவேளை, இந்த நலன்புரி நிலையங்களுக்குள் குடும்ப உறவினர்களை பிரிந்து வாழும் 245 நபர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளினாலேயே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரின் யாழ். பணிமனையோடு தொடர்புகொண்டு நலன்புரி நிலையங் களில் உள்ள தமது முதிய உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நலன்புரி நிலையங்களுக்குள் உறவினர்களை பிரிந்து வாழ்பவர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளையும் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் 245 பேரை ஒன்று சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர் களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.