27

27

தாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சந்திரிகா நடந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் அதாவுட

athauda-senavi.jpgதாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடந்துகொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல பகுதியில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் வேளையில் சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் பாதகமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் காணப்படும் தனிப்பட்ட கோபம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களாகப் போற்றப்படும் பண்டார நாயக்கா மற்றும் சிறிமாவோ அம்மையாரின் புதல்வி என்ற ரீதியில் சந்திரிகா பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவிலிருந்து மேலும் 400 நோயாளர்களை திருமலை அழைத்துவர ஏற்பாடு

trico.gifமுல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த சிங்கள காதல் ஜோடி இலங்கை தூதரிடம் ஒப்படைப்பு

tamilnadu.jpgஅகதி களோடு வந்து கைதாகி தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கள காதலர்களை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க பொலிஸார் சென்னை அழைத்து சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 2008 டிசம்பர் 20 ஆ ம் திகதி படகில் வந்திறங்கிய வவுனியாவை சேர்ந்த அகதிகளுடன் இலங்கை கொழும்பு நகர் மகரகம பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர் துஷாரா சந்தனா (வயது 30) கடுவத்தை பகுதியை சேர்ந்த பெண் தாரகா தில்கானி (வயது 17) ஆகிய இருவரும் அகதிகளாக வந்தனர்.

சிங்கள மொழி தவிர வேறு மொழி தெரியாத இருவரையும் வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த வசந்தமாலா (49 வயது) அழைத்து வந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான பாடசாலை மாணவி தாரகா தில்கானியும், வாகன சாரதியான துஷாரா சந்தனாவும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் வவுனியா வந்து அங்கிருந்து படகில் அகதிகளாக வந்தனர்.

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக இவர்கள் இராமேஸ்வரம் வந்ததால் இருவரையும் பொலிஸார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க இராமேஸ்வரம் பொலிஸார் இவர்களை சென்னைக்கு அழைத்து சென்றனர்

சார்க் வலய நாடுகளின் கல்வி, உயர் கல்வி அமைச்சர்களது மாநாடு!

vishva-warnapala.jpgசார்க் வலய நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். தெற்காசிய உயர்கல்விக் கொள்கை மற்றும் நுட்பங்கள் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தவும் அதற்கென 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்!

rohitha-bogollagama.jpgஈராக்கின் தலைநகர் பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகத்தைத் மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கைக்கும் ஈராக்குக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் 2003 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஈராக்குக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.மீண்டும் தூதரகத்தைத் திறப்பதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலரை ஒதுக்கவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சரணடையுங்கள்: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஹசீனா எச்சரிக்கை

bangladesh-president.jpgவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு கிளர்ச்சியாளர்கள் சரணடைய வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

கலகத்தை கைவிடத் தவறினால் நாட்டின் நலன் கருதி எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டி வரும் என்றும் கிளர்ச்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில், கலகத்தில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மன்னிக்க முடிவு செய்துள்ளேன். வீரர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

கிளர்ச்சியை கைவிடுவதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு முகாமுக்கு திரும்புமாறு வீரர்களை வலியுறுத்துகிறேன். கிளர்ச்சியாளர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்காது. ஊதிய விகிதம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பாதையை மீள புனரமைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

railways-in-jaffna.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையை மீள புனரமைக்க சகல மக்களின் ஒத்துழைப்பையும் பெற போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக விசேட திட்டமொன்று முன் னெடுக்கப்பட உள்ளதோடு இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர் வமாக நாட்டு மக்களுக்கு வெளியிடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரி வித்தது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை மீள அமைப் பதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் நிதி உதவி, உழைப்பு என்பவற்றை பெறுவதற்காக இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாண ரயில் நிலையத்தையும், ரயில் பாதையையும் நிர்மாணிப்பதற்கு அம்பாந்தோட்டை மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். கிளிநொச்சி ரயில் நிலையத்தையும் ரயில் பாதையையும் அமைக்க மாத்தறை நகர மக்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பான தமது சகோதரத்துவ வாஞ்சையை பிரதிபலிக்கும் வகையில் தென்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களும் மலையக தமிழ் மக்களும் இணைந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் மீள அமைக்க உள்ளனர். இது இலங்கை மக்களின் சகோதரத்துவத்தையும், புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் காட்டும் குறிகாட்டியாக வரலாற்றில் பதியப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சேரிநாய்க் கோடீஸ்வரன் – (சிலம்டோக் மில்லியனர்) – வறுமை விற்பனைக்கு அல்ல!!! : சேனன்

Slumdog_Millionare_Protestசிலம்டோக் மில்லியனர் – இயக்கம்: டேனிபோய்ல்

ஐந்து விமர்சகத் தேர்வு விருதுகள் நான்கு தங்கப் பூகோள விருதுகள், பாஃப்ரா விருதுகள் மற்றும் பத்து அக்கடமி விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கோ அல்லது சிறிதளவேனும் சில ஊக்கமளிக்கக் கூடிய கருத்துகள் கொண்டிருக்குமென நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலம்டோக் மில்லியனர், அதைப் பற்றிய அதீத விளம்பரங்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளின் பரிமாணத்தைத் தாண்ட முடியவில்லை. அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனச் சொல்லலாம்.

Slumdog_Millionare_Protestஅதே வேளையில் இந்தியத் திரைப்பட ரசிகர்களையும் கவர்வதில் அது தோல்வியுற்று உள்ளது. உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 25 வீதமான இருக்கைகளே நிரம்பியிருந்ததாக ரைம்ஸ் மகசின் தெரிவித்திருந்தது. இந்திய மக்களுக்கு எப்போதுமே இவ்வகைப் பிரமாண்டமான கலைப் படைப்புகள் மீது சந்தேகமுண்டு. ஏனென்றால் இம்மாதிரியான கலைப் படைப்புகளைத் தயாரிப்பதன் முக்கிய குறிக்கோள் தங்களின் வறுமையை வியாபாரஞ் செய்து பணமாக்குவதே என்பதை அவர்கள் அறிவார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த அனில் கபூரின் வீட்டின் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதைத் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கைகளிலிருந்த அட்டைகள் பிரதிபலித்தன. அவற்றில் ‘வறுமை விற்பனைக்கல்ல” என்ற சுலோகம் எழுதியிருந்ததன் மூலமாக இதைப் பிரதிபலித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் சேரியும் சேரி மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதும் இப்படத்தின் தலைப்பில் சேரி என்ற சொல்லுடன் நாய் எனும் சொல்லும் உபயோகித்திருந்ததுமாகும்.

சிலம்டோக் மில்லியனர் எழுதப்பட்டதும் இயக்கப்பட்டதும் ஒருபுறம் மேற்கத்தைய சந்தை மறுபுறம் இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய மிகப் பெரும் திரைப்படத்துறை மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள இந்தியர்களையும் வைத்துப் பணம் கறக்கலாம் என்பதனாலாகும்.

சினிமாத்துறை மூலமாகப் பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்கள். ஆங்கிலமல்லாத இந்தித் திரைப்படங்கள் மூலமாக பிரிட்டனில் அதிக பணம் சம்பாதிக்கப்படுகிறது. சனரஞ்கமாகத் தயாரிக்கப்பட்ட ஐரோப்பியத் திரைப்படங்களை விட இந்தியத் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களை மிகவும் கவருகின்றது. பிரிட்டனில் பெருஞ் சனத்தொகை இந்தியர்கள் வாழுகின்றனர்.

பிரித்தானியக் கதாசிரியர்களும் முதலீட்டாளர்களும் தந்திரமான வழிமுறையொன்றைத் தேடினார்கள். வணிக ரீதியிலான சனரஞ்சகத் திரைப்படங்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பிரபல்யமாக ஓடுவதலிருந்து பெறும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து ஒரு பங்கை இந்தியத் திரைப்படத்துறையிலிருந்து பெற்றுக் கொள்வதே அதுவாகும்.

ஆனால் சிலம்டோக் மில்லியனர், சராசரி இந்தியர்களின் சனரஞ்சகக் கற்பனாசக்தியை மட்டுமல்ல சேரி மக்களையும் கூட அப்படம் கவரவில்லை.

எவ்வாறாயினும் இத்திரைப்படம் மேற்கத்தைய மனோபாவத்தைக் கவர முயற்சித்துள்ளது.

ஏமாற்றம்.

Slumdog_Millionaire_Sceneஎந்த உலகில, ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பதே துன்பங்கள் தீர ஒரே வழியெனத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதோ, அவர்கள் ஒவ்வொருவரது கனவும் கோடீசுவரனாவதாகவே இருக்கும். ஆனால் சிலம்டோக் மில்லியனர் திரைப்படம் இக்கேள்வியை வெறும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு உடனே மலிவான காதல் கதையில் இறங்கி நகர்கிறது. இந்தியா, யார் கோடீஸ்வரனாகப் போகிறீர்கள்? நிகழ்ச்சிக்குச் சேரியிலிருந்து பங்குபற்றப் போகும் ஒரு இளைஞன் உச்சத்தொகையான இருபது கோடி ரூபாய் வெல்கின்றான். அவனுக்கு எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிந்தது? என்ற புலன்விசாரணையின் போது அவனது வாழ்க்கைக் கதை வெளிவருகிறது.

சிலம்டோக் மில்லியனர் ஒரு சாதாரண கதையாகும். இந்தியப் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பதனால் வித்தியாசமான அசாதாரணமான பரிமாணங்களைப் பெற்றது. உச்சக் கட்ட வறுமையும் வன்முறையும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஐரோப்பியப் பார்வையாளர்களுக்கு இவை புதியவையாகத் தெரியும்.

இப்படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகின்றது. வேகமான கமராவின் நகர்வு, சேரிக்குள் ஓடும் சிறுவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதிலே நடித்த சிறுவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதை சேரிக்கு வரும் மத்தியதர வர்க்க உல்லாசப் பயணியின் பரிதாபப் பார்வையுடன் பார்க்கிறது. இந்நிலையில் கழிப்பறையிலிருக்கக் கூடியவை கூட பார்வைக்கு மிக அழகாகக் காட்டப்படுகின்றது.

ஒரு வேளை, இந்த இந்தியாவின் அதாவது பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் நாட்டில் நீண்ட காலமாக ஆழமாக இருக்கும் வறுமையை அழகுபடுத்தும் முயற்சி தான் இத்திரைப்படம். அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சினால் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. சேரியின் மாதிரியை வடிவமைப்பாகக் கொண்டு இப்போது மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே எவராவது இப்படத்தினைப் பார்த்துத் தான் இந்திய சேரிவாழ்க்கையை அறியச் சென்றால் ஏமாற்றமேயடைவார்கள்.

1988 இல் மீரா நாயரினால் இயக்கப்பட்ட ‘சலாம்பாம்பே’ திரைப்படம் இதைவிட ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகும்.

வன்னி நிலவரமும் – புலிகளும் – புலி எதிர்ப்பாளர்களும் – அடுத்த கட்ட அரசியல் நகர்வும் : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

Protest_Genevaமனித அவலங்களை அரசியல் இருப்புக்காக பாசீஸ்டுகள் பயன்படுத்துவதை உலகின் வரலாற்றில் காண முடிகின்றது. இவ்வழியே இலங்கை மண்ணிலும் மக்களின் அழிவை மூலதனமாக வைத்தே அரசியல் இருப்பை உறுதி செய்கின்றனர். மனிதத்தை இழந்த மானிடர்களுக்கு மக்களின் உதிரம் என்பது தமது இருப்பின் பசளையாக மாறுகின்ற போது மக்களின் உயிர்கள் என்பது நுண்ணுயிர்களை விட பெறுமதியற்றதாக இருக்கின்றது. யுத்தவெறியால் இழக்கப்படும உயிர்களுக்கு கணக்கு கொடுக்கும் நிலையை அனைத்து மக்கள் பிரிவினரது உதவியுடன் உருவாக்கப்பட வேண்டும். இவைகள் தான் நீண்ட கால குறிக்கோளாக செயற்பட வேண்டும். இழப்புக்கள் யுத்த வெறி மூலம் மறைக்கப்படுகின்றது.

இழப்புகள் தமிழ் மக்களை மாத்திரம் பாதிக்கவில்லை. இலங்கையின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ளது. சிங்கள உழைக்கும் மக்களின் வாரிசுகள் சில சொற்பசலுகைக்காக படைகளில் இழந்து தமது உயிரை விட்டுள்ளனர். இதனால் தமது சொந்தங்களை இழந்த சிங்கள தாய் தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தது தெரியாது இருக்கின்றனர். யுத்தவெற்றியானது தமது சொந்தங்களை தேடுவதை தற்காலிகமாக முயற்சிக்காதவர்களாக இருக்கின்றனர். யுத்த வெறி ஊட்டப்பட்ட நிலையில் இருக்கின்ற மனேநிலையானது சிங்கள உழைக்கும் வர்க்கம் தமது இழப்புக்களை பற்றி சிந்திக்க காலம் தாழ்த்தப்படுகின்றது. இழப்புக்களை உணர்வதற்கான காலம் தாழ்த்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் என்பது அவசியமானதாகும்.

வன்னியில் இடம்பெறும் அவலத்தை காரணம் காட்டி சர்வதேச நாடுகள் தலையிடும் நிலை தோன்றியுள்ளதை அவதானிக்கு முடிகின்றது. இந்தத் தலையீடு எப்போ? எவ்வாறு? நடைபெறப்போகின்றது என்பதை ஆரூடம் கூற முடியும். மக்கள் காப்பற்றப்படலாம். இவை அவசியமான முன்தேவையாகும். ஆனால் அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கப்போகின்றது. நாம் சர்வதேச நாடுகளின் சூழ்ச்சியை எவ்வாறு முறியடிக்கப் போகின்றோம் என்பது பற்றி அறிவுறுத்தல் நம்மிடம் மிக முக்கியமான தேவையாகின்றது. இவற்றிற்கான புரிதல் விடுதலைப் புலிகளிடம் உள்ளதா? மக்களிடம் உள்ளதா? ஏன் புலியெதிர்ப்பாளர்களிடம் இருக்கின்றதா?

சிங்கள மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சிக்கல் சிங்கள மக்கள் தம் இழப்பை அறியாத வண்ணம் யுத்த வெற்றிகள் அவர்களை இனப்பெருமிதத்தினுள் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. இதற்கு அடிப்படையாக பெரும்பான்மையினர் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும், வர்க்க உணர்வு அற்ற நிலையும் காரணமாகின்றது. இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தவல்ல மார்க்சீய லெனினிய சிந்தனை கொண்ட கட்சியாக தம்மை சுயவிளம்பரம் செய்யும் ஜே.வி.பியானது இனவாதிகளாக சிதைந்துள்ளனர். சிறுபான்மையினரை யுத்த வெறிகொண்டு ஒடுக்கும் எதிரியை பெரும்பான்மை இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையானது
அன்னியச் சக்திகளின் தலையீட்டு என்பது இன்று தவிர்க்க முடியாத நிலையை அடைந்துள்ளது. இவற்றை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு என்பது இலங்கை நாட்டிலேயே இல்லை. இவ்வாறான பிற்போக்குவாதிகளான ஜே.வி.பி, புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துரதிஸ்ர நிலையை மாற்றிக் கொள்வதற்கு குறுங்குழுவாத நிலைப்பாட்டை தகற்தெறிவது முக்கியமான செயற்பாடாகும்.

தமிழ் நாட்டில் ஆழும் வர்க்கம் போராட்டத்தை திசை திருப்பியிருந்தனர். அடக்குமுறைக்கு துணைபோகும் சக்திகள் அதனை எதிர்க்கும் சக்திகளின் கவனத்தை திசை திருப்பியிருந்தனர். இவ்வாற ஒரு செயற்பட்ட அடக்குமுறையாளனுக்கு எதிராக திருப்ப முடியாத நிலைதான் இலங்கையில் இருக்கின்றது.

சிறிலங்கா அரசின் யுத்தவெறியை எதிர்க்கொள்ள தேவையானது அனைத்து முற்போக்குவாதிகளிடமும், மனிதநேயவாதிகளிடமும் கடமை சுமத்தப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தத்திற்கான போராட்டமானது இலங்கை தேசத்தில் அனைத்து மக்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வெளியேற வேண்டும். யுத்த எதிர்ப்பிற்கான பரந்த போராட்டங்கள் எதனையும் நடத்தவில்லை அல்லது நடத்த முடியவில்லை. யாழில் நடைபெற்று வன்னி மக்களை விடுதலை செய்யும்படி இ.பி.டி.பியினரால் திரட்டப்பட்ட போராட்டமும், தமிழ் தேசிய கூட்டணியினரும் செய்த போராட்டத்தின் போது புலியெதிர்ப்பணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) யுத்த நிறுத்தத்தைக் கோரும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவைகள் எல்லாம் புலிகளின் என்ற எல்லைக்குள் சுருங்கி விட்டது.

த.தே.கூட்டமைப்பினரினர் கோரிக்கைக்கு மக்கள் இசையவில்லை எனக் புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் நிலை இருக்குமாயின் தம் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடுமையை எதிர்க்காமல் மக்கள் இருக்கமாட்டார்கள். மக்கள் தாம் தப்பிப்பிழைப்பதையேதான் முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனால் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் மக்கள் புலிகளுக்கும் – யாழில், கிழக்கில், கொழும்பில் வாழும் மக்களும் அரசுக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.

இன்று இளையோர் அமைப்பே போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இளையோர் தேசியத் தலைவர் பிரபா! புலிகளின் தாகம் தமிழீழம்! புலிகளே ஏகபிரதிநிதிகள்! என்பதை வைத்தே இன்றைய அவலத்தைத் போக்க போராடுகின்றனர். இளையோருக்கேயுடைய போர்க்குணம் என்பது விறுவிறுப்பாக செயற்பட முடிகின்றது. இவர்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. (இளையோரின் உழைப்பை உறுஞ்சும் தற்காலிகமாக தலைமை தாங்குவதில் பின்வாங்கியுள்ளது.) இந்தச் சமூக பொருளாதார அமைப்பின் நிமித்தம் ஒதுங்கிவிட்டனர். இளையோரே அதிகாரவர்க்கத்தின் உழைப்புச் சக்திகளாக உருவாகியிருக்கின்றது. இந்த இளையோரை எண்ணி ஆத்திரப்பட முடியவில்லை. அரசியல் உணர்வற்ற நிலையில் இருக்கும் மக்களை எண்ணி ஆத்திரப்பட முடியாதோ அவ்வாறுதான் இளையோர் மட்டிலும் நிலைப்பாடக இருக்கின்றது. இளையோர் மத்தியில் இருந்துவரும் வெறுப்பான வார்த்தை என்னவெனில் எவ்வாறு போராடினாலும் எந்தச் சக்தியும் எமது மக்களுக்கு சாதகமாக காரியமாற்றுகின்றார்கள் இல்லையே என்பதாகும். புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

ஆனால் இவற்றை உணராது ஜி-ரிவி கண்ணீர் துளிகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்களிடையே பல தாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது புலிகளின் அரசியல் போக்கை எவ்வித விமர்சனம் இல்லாது ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளைப் பற்றிய விமர்சனம் என்பது இன்றைய சோகமான நிகழ்வுகள் நடக்கும் காலமாகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனக் கூறுகின்றனர். தொலைக்காட்சியானது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றார்கள்.

தொலைக்காட்சியை திறந்தால் உணர்ச்சிப் பாடல்கள்
தமிழர்களின் ஒற்றுமை
அவலங்களை கொண்ட காட்சிகள்
இழப்புக்களினால் ஏற்படும் சோகம்

இவர்களின் நோக்கமானது இரத்தம் கொதிக்க வேண்டும். உணர்வு பெறவேண்டும் அவலங்களை வெளிக்கொணர வேண்டும். இவைகள் நியாயமானவையாகத் தோன்றினாலும் இது எதிர்வினையாற்றுகின்றது. தமிழ்மக்களின் குடும்பங்களிடையே உளவியல் பிரச்சனை என்பது உருவெடுக்கின்றது. ஏற்கனவே வன்னியில் தமது உறவினரைப் பற்றிய ஏக்கத்திலும், மக்களின் அவலங்களை பார்த்தும், கேட்டும் மக்கள் துயரத்தில் இருக்கையில் உளவியல் பிரச்சனை என்பது சமூகம் தழுவிய பிரச்சனையாக மாறுகின்றது. இழப்புக்களை வைத்தே தமது இருப்பை உறுதி செய்யும் அரசியல் இருக்கையில் இன்னும் இன்றும் மக்களின் துன்பம் துயரத்தை மறுவுற்பத்தி செய்து கொண்டேதான் போகவேண்டும். குறிப்பாக இங்கு உருவாகியிருக்கும் ஆதிக்க வர்க்க சிந்தனாசக்தி கொண்டவர்கள் இன்னும் இன்றும் ஆபத்தானவர்களாவர். புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே.

இன்றைய யுத்தத்தினால் இழக்கப்படுவது புலிகளின் அடிமட்டப் போராளிகள், தேசபக்தர்கள், புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், அங்கவீனமான போராளிகள் எனவும் பொது மக்களில் நோயாளிகள், வயோதிபர் என எந்த பேதம் இல்லாது பாதிக்கப்படும் மக்களே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் அரசிடம் சரணடைந்து சாவதை விட புலிகளுடன் இருந்தே சாவோம் எனத் திடத்துடன் இருக்கும் பொது மக்களும் இருக்கின்றார்கள். இந்த முடிவிற்கு காரணம் சிறிலங்கா அரசின் காரணமாக ஏற்பட்ட வடு என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் எதிரியிடம் போராளிகள் தமது சரணடைவது மாத்திரம் அல்ல. எந்தப் போராளிகளையும் எந்த அடக்குமுறையாளர்களும் தண்டனை கொடுக்க அதிகாரம் இல்லை. தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தமது இறைமைக்கு உட்பட்டதை அவர்களே செய்து முடிப்பர். புலிகளின் தவறுகள் கூட தமிழ் மக்கள் இறைமைக்கு உட்பட்ட நிலையில் விசாரணைகள் தமிழ் மக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை தவறென்று கூறுபவர்கள் ஈராக்கில் அமெரிக்க படை சென்று சதாமை கைது செய்த போது புலியெதிர்ப்பில் ஓரு பகுதினர் சதாமின் ஆட்சியை கவிட்டதற்கும், மரண தண்டனை வழங்கியதற்கும் எதிர்ப்புக் குரலை தெரிவித்திருந்தன. இதுசரியான நிலைப்பாடு இவ்வாறான நிலைப்பாடே தமிழ் மக்களின் போராட்ட சக்திகள் சம்பந்த பட்டமட்டில் பொருந்தும். ஆயுங்கள் உட்பட கையழிக்க முடியாது. இவைகள் ஒரு அரசியல் தீர்வு வரை முடக்கி வைத்திருக்க வேண்டும். நேப்பாளத்தில் நடைபெற்றது போன்றதான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தலாம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தல் என்பது துரோகம் இவைதான் சரியான நிலைப்பாடாகும். இன்றைய நிலையில் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பதைப் பற்றிய பிரச்சினை தான் எம்முன்னோக்கி இருக்கின்றது. இந்த நிலைப்பாடாது புலியெதிர்ப்பாளர்கள், ஒடுக்குமுறையாளர்களின் விருப்பத்திற்கு நேர்மாறானது. இவை மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகின்றது. புலிகளின் அதிகாரவர்க்க நிர்வாக கட்டமைப்பு அழிக்கப்படுகின்றது. ஆனாலும் புலிகளில் உள்ள தேசபக்தர்கள் அடிமட்டப் போராளிகள் எல்லோரும் எதிரிகளிடம் சரணடைகின்ற போது அவர்கள் துடைத்தெறியப்படுவார்கள். இவர்கள் சரணடைந்தாலும் இவர்களின் நலனைப் பாதுகாத்தக் கொள்ளத்தக்க ஒரு ஜனநாயக கட்டமைப்பு இல்லை. ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு என்பது ஒரு பேச்சுவார்த்தை மூலமாக உருவாக்கப்பட வேண்டியதாகும். இவற்றில் சாத்தியமானது சிறுபகுதியில் தன்னும் யுத்த நிறுத்தின் மூலம் இடைக்காலத்துக்கு வாழ விடுவதும். பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இந்த மக்களின் போராளிகளின் மக்களின் எதிர்காலம் பற்றி பேசி முடிவெடுக்கலாம்.

உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டியவை :

1. உடனடி யுத்த நிறுத்தம் – படைகளை தத்தம் இடங்களில் நிலைகொள்ளல்
2. நிவாரணம் வழங்கள்
3. உடனடி நீண்டகால தேவையை உறுதி செய்வது.
4. இடம் பெயர்ந்தவர்கள் தத்தம் உறவுகளுடன் மீளவும் இணைந்து கொள்வது
5. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது
6. புலிகள் ஏக பிரதிநிதித்துவ கோட்பாட்டை கைவிடல் வேண்டும்
7. எவரும் தமது ஆயுதங்களுடன் அரச அல்லது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லக்கூடாது.

அரசியல் தீர்வை நோக்கி :

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் மாத்திரம் அல்லாமல் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2. வட- கிழக்கு இணைப்பு.
3. வடக்கு -கிழக்கு என்னும் போது தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கான ஒரு அலகு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் தீர்வுத் திட்டத்தை ஆராய்வதற்கு முன்னர் சிறுபான்மையினருக்கான ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகளை சிறுபான்மையினரே தெரிவு செய்தல் வேண்டும். இதன் மூலம் இதில் அங்கம் பெறும் உறுப்பினர்கள் தற்காலிகமாக வடக்கு-கிழக்கிற்கு இடைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பர். இவர்களை தெரிவு செய்வதற்கான ஒரு தேர்தலை நடத்துவது.

இந்தத் தேர்தலில் புலிகள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போட்டியிட உரிமை கொடுக்கப்பட வேண்டும். (புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.)

இவ்வாறு தமிழ் மக்களே தமது அரசியல் பேச்சுவார்த்தைக்கான சபையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உள்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் எதேர்ச்சாதிகரமாக தீர்வை திணிப்பதை தவிர்க்க முடியும்.