தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.