இலங் கையில் தமக்கு எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை கொழும்பு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கும் “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ உண்மையிலேயே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துக் கொண்ட தேசமாக இருக்க இலங்கை விரும்புகின்றது என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டிய தேவை கொழும்புக்கு இருக்கிறது’ என்று மகுடமிட்டு இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அண்மித்து வருவதாக இலங்கை அரசாங்கம் நம்புகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்கும் யுத்தத்தில் அது தோல்வியை அண்மித்து வருவதாக கருத முடியும்.
இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளால் தமிழ் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது போராட்டத்தின் பின்னணியில் தமிழ் சமூகத்தின் துன்பங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சமாதானப் பொதியையும் கொழும்பு முன்வைக்க வேண்டும். போர் முடியும் வரையென இது தொடர்பாக காத்திருக்க முடியாது.
தொடர்ந்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த “சிங்களவர்களுக்கே பிரத்தியேகம்’ என்ற கொள்கைகளாலேயே தமிழர்களின் போராட்டம் தோன்றியது. தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்த குழுவினர் புலிகள் அல்ல. அதேசமயம், இனநெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அதற்குப் பரிகாரம் காணாவிடின் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் இறுதியான குழுவாகவும் புலிகள் இருக்கப் போவதில்லை. ஆதலால் தமிழ் மக்களின் அபிலாசைகளுடன் புலிகளின் அரசியல் இலக்குகளை ஒன்றுபடுத்தாமல் இருப்பது முக்கியமானதாகும்.
புலிகளின் முடிவானது தமிழ்ப் பிரிவினைவாதத்தின் முடிவாக அமையும் என பார்க்க முடியாது. புலிகள் மறைந்தாலும் சமாதானம் நழுவிச் சென்று விடும் என்பது நிரூபணமாகக் கூடும். புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சிறப்பான மாற்றீடாக இருக்குமென நிச்சயப்படுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இலங்கை அரசானது சிங்கள இனமேலாதிக்கவாதத் தன்மையைக் கொண்டிருப்பதாக தமிழர்கள் பார்க்கின்றனர். சிறுபான்மையினங்களின் உண்மைகளுக்கு அது அங்கீகாரம் வழங்காதென அவர்கள் கருதுகின்றனர். தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமானால் தனது சிந்தனைகளை அதிகளவுக்கு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானதாகும்.
இலங்கை ஆயுதப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் மரபு ரீதியான கட்டமைப்புக்கு அப்பால் இந்த மோதலைப் பார்க்க வேண்டிய வேளை வந்துள்ளது. பிராந்தியத்திற்கான புனர்நிர்மாண மீள் நல்லிணக்கத் தீர்வுத் திட்டம் குறித்து கொழும்பு அறிவிக்க வேண்டும். ஒருதலைப் பட்சமான சமாதான முயற்சிகள் கேள்விப்படாத ஒன்றாக அமையலாம். ஆனால், இலங்கை முன்நோக்கிச் செல்வதற்கு இதுவே ஒரேயொரு வழிமுறையாகும். இலங்கை உண்மையாகவே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துள்ள தேசம் என்ற நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை கொழும்புக்குள்ளது. அத்துடன், தமக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எல்லைகளுக்கான யுத்தத்துடன் இணைந்து மனங்களை வென்றெடுப்பதற்கான போரையும் முன்னெடுக்க வேண்டும்.