இலங்கை யில் போரைநிறுத்த ஐ.நா.சபை தலையிட வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ச.ராமதாஸ் சென்னையில் திங்கட்கிழமை தொடக்கி வைத்தார். தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரை வலியுறுத்தி 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.
அதற்கான படிவங்களில் பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு அந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
இது குறித்து வைகோ கூறியதாவது; “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கையெழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களை சந்தித்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிரமாக ஈடுபடும். பின்னர் அனைத்து படிவங்களும் தொகுக்கப்பட்டு ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார் வைகோ.