12

12

பிரிவினைவாத பிரசாரத்துக்கு தேசிய வானொலியில் இடமளிக்க முடியாது! – இ.ஒ.கூ. தலைவர் தெரிவிப்பு

hadson_samarasinghes.jpgபிரிவினை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, முழு நாட்டுக்கும் சாத்தியமற்ற செய்திகளை தேசிய வானொலியின் அலை வரிசைகள் மூலம் ஒலிபரப்புச் செய்ய முடியாதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழோசை மற்றும் பி.பி.சி. சந்தேசிய ஆகியவற்றை முன்னறிவித்தல் எதுவுமின்றி பி.பி.சி. நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பி.பி.சி. நிறுவன அதிகாரிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக அவர்களிடமிருந்து எமக்கு இது வரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைச் சோதனையிடுவதற்காக விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் அண்மையில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி.யின் சந்தேசிய சிங்கள செய்திச் சேவையில் ஒலிபரப்பான செய்தி உண்மையை மூடி மறைப்பதாக அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்

மத்திய, வடமேல் மாகாண பாடசாலைகள் தேர்தலை முன்னிட்டு வெள்ளி மூடப்படும் – கல்வியமைச்சு

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் நாளை வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படுமென கல்வி யமைச்சு தெரிவித்திருக்கிறது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெற விருக்கிறது.

இதற்கான வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பாடசாலைகளிலேயே அமைக்கப்பட விருப்பதாலும் ஏனைய தேர்தல் கடமைகளின் பொருட்டுமே தேர்தலுக்கு முன்தினமான 13 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரு மாகாணங்களினதும் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளரான எஸ்.யூ.விஜேரட்ன தெரிவித்தார்.

இதேநேரம், விடுமுறை வழங்கப்பட்ட இந்த பாடசாலை தினம் பின்னர் வசதியான பிறிதொரு தினத்தில் வைக்கப்படும் என்றும் விஜேரட்ன மேலும் கூறினார். தேர்தல்கள் செயலகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அரச பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு.

civilians-1002-09.jpgபுலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்கள் தற்காலிகமாக 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் ரஞ்சன் ஒஸ்வேல் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் மகாவித்தியாலயம், நெல்லுக்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வார காலத்திற்கு தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படும் இவர்கள் மெனிக்பாமில் அமைந்துள்ள நிரந்த நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இடவசதி குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைகளிலும் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதலை எதிர்க்கட்சியினர் கண்டிக்காமை கவலைக்குரியது -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவிப்பு

lakshman_yapa_abeywardena.jpgதமிழ் மக்களுககாகப்  போராடுவதாகக் கூறிக்கொண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி தமிழ் இனத்தையே அழிக்கும் புலிகளின் செயற்பாட்டை கண்டிக்காமல் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியினரின் நடவடிக்கை கவலைக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிந்துவிட்டது அதனால் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். யுத்தம் முடிந்து விட்டாலும் மற்றுமொரு யுத்தமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் யுத்தம் எம்மை எதிர்நோக்கி உள்ளது என்பதை மறந்த நிலையில் எதிர்க்கட்சி செயல்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான திட்டங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

புலிகளின் மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை உலக நாடுகள் உட்பட நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ள வேளையில் எதிர்க்கட்சியினர் கவலையோ கண்டனமோ தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது வருந்தத்தக்க விடயமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.அதேபோன்று நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி மற்றும் விநாயக மூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்),  சந்திரகாந்தன் (பிள்ளையான் ) போன்றவர்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை இதனைக் கண்டித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். உண்மையான தகவல் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றைப்பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் இந்தத் தாக்குதல் உண்மையானதென்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைத்த ஐக்கிநாடுகளுக்கு அரசாஙகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்

suvangi.jpgசிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்.சிம்பாபே ரொபேர்ட் முகாபோக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாங்கிராய்க்கும் இடையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பாதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையிலேயே இந்தப் பதவியேற்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் சிம்பாபேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை எதிர்த்துப் போட்டியிட்ட சுவாங்கிராய் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். எனினும், ஆட்சி துறப்பதற்கு ரொபேர்ட் முகாபே இணங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழுபறிநிலையின் பின்னர் முகாபேயுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க சுவாங்கிராய் இணங்கியிருந்தார். இதற்கமைய இரு தலைவர்களுக்கும் இடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“நான் ஏன் இவ்வாறு செய்தேன் இதனால் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில் போன்ற சந்தேகங்களுக்கு விரைவில் விடைகிடைக்கும்” என சாங்கிராய் கூறினார். “இந்த முடிவை நாங்களே எடுத்துள்ளோம். எந்தவிதமான அழுத்தங்களுமின்றி இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் அவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென சுவாங்கிராய் தனது பதவியேற்வு விழாவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜீவ் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும் கள்ளத் தோணியில் சென்று காரியத்தை கெடுத்தவர் வைகோ – ஸ்டாலின் தெரிவிப்பு

stalin.jpgஅரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணக் கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டுவிட்டது. ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.

1989 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.

இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இரண்டரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம் ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கோபாலசாமி எம்.பி. கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணியில் ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார். அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான் நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரத்தம் சிந்தி கொலையானார். அதனால் தான், இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது.

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதோ சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து இன்றுவரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

புலிகளின் பாரிய அச்சகத்தொகுதி விசுவமடுவில் நேற்று கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிசுவமடு, சுந்தரபுரம் பிரதேசத்தில் புலிகளின் பிரதான அச்சகம் உள்ளிட்ட பாரிய முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். பெரும்தொகையான புதிய ரக வாகனங்கள், நவீன அச்சக இயந்திரங்கள், புகைப்படக் கூடம், பிரபாகரனின் பெனர்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள், லெமினேடிங் இயந்திரங்கள், கமராக்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த முகாமை கைப்பற்றியுள்ளனர். விசுவமடு சுந்தரபுரம் பகுதியில் புலிகளுடனான கடும் மோதல்களைத் தொடர்ந்து முன்னேறிய படையினர் இந்த அச்சகப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 23 துப்பாக்கிகளும், புதிய ரகத்திலான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

புலிகளின் தலைவர்கள் இம் முகாமில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களுடன் பெருந்தொகையான சீடிக்களும் கைப்பற்றப்பட்டன. புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்ட சீடிக்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர். அச்சகத்தில் உள்ள நவீன உபகரணங்கள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவே தென்படுவதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரசார நடவடிக் கைகளுக்காக இந்த அச்சகத்தையே அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு தென்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் நான்கா வது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த வன்னியாராய்ச்சி தலமையிலான படைப் பிரிவினர் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு அச்சகம் ஒன்றையும், கட்டிங் இயந்திரம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் புகைப்படங்களும், புலிகளின் முக்கிய புகைப்படங்களும் அச்சிடப்பட்ட பெருந் தொகையான புத்தகங்களையே படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அச்சு இயந்திரங்களுடன் அவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான உபகரணங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாகனம் நீரினுள் பாய்ந்து விபத்து; இரு வெளிநாட்டு பிரஜைகள் கிண்ணியாவில் மரணம்

திருகோணமலை – மூதூர் கரையோரப் பாதையிலுள்ள கெங்கை துறையில் இடம்பெற்ற விபத்தொன்றில் அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை 10.30 மணியளவில் கெங்கை துறையை கடப்பதற்காக மிதவைப் படகில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தற்செயலாக கடலில் பாய்ந்ததில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டவரான குஜிவாரா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஆனோல்வலதே ஆகிய இருவருமே இறந்தவர்களாவர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சாரதி மற்றும் இலங்கை பொறியியலாளர் உட்பட நால்வர் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். மூதூருக்கும், கிண்ணியாவிற்கும் இடையிலுள்ள கெங்கை துறை மிதவை படகு பாதையில் வாகனத்தை ஏற்றிய பின் சாரதியும், பொறியியலாளரும் கீழே இறங்கி நின்றபோது, வாகனம் திடீரென கடலினுள் சரிந்துள்ளது.

இதனால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். வெளிநாட்டவர்களான இருவரினதும் சடலம் வாகனத்துடன் அரைமணி நேரத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது (நேற்று 1.30 வரை) கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுத்தீ அனர்த்தத்தை குற்றச்செயலென பிரகடனப்படுத்தியது அவுஸ்திரேலியா

forest_fire.jpg
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இத்தீ உண்டாவதற்கு காரணமாகவுள்ள சதிக்கும்பலைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வேறுபிராந்தியத்திலுள்ள மக்கள் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இக்காட்டுத்தீயில் பெரும்பகுதி வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டுள்ளவையென தெரிவித்துள்ள பொலிஸார் காட்டுத்தீ பரவியுள்ள பிரதேசங்களை குற்றவலயமெனவும் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

இக்காட்டுத்தீயினால் பெருந்தொகையான மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த சதிகாரர்களை அவுஸ்திரேலியப் பிரதமர் வன்செயல் புரிந்தவர்கள் என்றும் பாரிய கொலைகாரர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். காட்டுத்தீயினை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தும் ஒரு நபருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அதேநேரம் தவறுதலாக காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆகக்கூடியது15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை இராஜாங்க ஆணைக்குழு மேற்கொள்ளுமென விக்டோரியா மாநில பிரதமர் ஜோன் புறும்பி அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட இக்காட்டுத் தீயில் பெரும்பலானோரின் வீடுகள், கட்டிடங்களுக்குள்ளும் வாகனங்களுக்குள்ளேயுமே பலியாகியுள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிவரும் தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட அவசர உதவி அமைப்புகள் மேலும் பல உடல்களை மீட்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காட்டுத் தீயினால் இதுவரை 203 பேர் பலியாகியுள்ள அதேவேளை,750க்கும் அதிகமான வீடுகளும் 5 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலப்பரப்பும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்டது முதல் இதுவரை 450 பேர் உடலின் 30 வீதமான பகுதிவரை காயமடைந்துள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 3,400 தீயணைப்புப் படைவீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக் காட்டுத் தீயிலிருந்து தப்பியவர்கள் புதர்க்காடுகளின் ஊடாக தீச் சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தன என்றும் விண்ணிலிருந்து தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனக் கூறப்பட்டுள்ளது.

மாணவிகளுடன் பொலிஸார் நடந்த முறை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸார் மாணவிகளுடன் நடந்துகொண்ட முறை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த மோதலில் மூன்று மாணவர்களும் நான்கு பொலிஸாரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்களின் போது 40 மாணவர்கள் காயமடைந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதமும் இதேபோல் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தின் போது பொலிஸார் சில மாணவிகளை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது மற்றும் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது தள்ளிஏற்றியமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளதால் ஆண் பொலிஸார் மாணவிகளைக் கைது செய்யும் போது நடந்து கொண்டுள்ள முறைகள் தெரியவந்துள்ளன.