01

01

வன்னி மக்களின் அவல நிலையை மூடிமறைக்க அரசு பெரு முயற்சி – ஐ.தே.க. குற்றச்சாட்டு

logo_unp.jpgயுத்தம் காரணமாக வன்னியில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.  அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவு, மருந்துவகை, குடிநீர் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதம், பிற்போக்கு வாதம் கொண்ட கட்சியோ, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கட்சியோ அல்ல, அதிகாரத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது நாம் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தையோ, யுத்த வெற்றிகளையோ ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இல்லை. எதிர்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை.

நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதும் நாட்டில் எவரும் எங்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதும் தான்.

எனினும், நாட்டின் ஒரு பகுதியான வன்னியில் இன்று எமது சகோதர இனத்தவர்கள் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெற்கில் மூடி மறைக்கின்றது. உள்ளூரில் மறைக்கப்பட்டாலும் சர்வசேத்துக்கு அவை கிட்டியுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் வரை இந்த விவகாரம் சென்றடைந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் அரசு வஞ்சகப் போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறும் அரசு, மறு

புறத்தில் தமிழர்களை முற்று முழுதாக புலிகளாகவே பார்க்கின்றது. இந்தப் போலி நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த அரசாங்க அதிபர்கள் வவுனியாவிலிருந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று புலனாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஏற்படுத்திய சிவில் நிருவாகம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இன்று முற்று முழுதாக செயலிழந்து போயுள்ளது தான். வடக்கிலும், வன்னியிலும் இன்று என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெற்கு மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சி பெறாது போனால் நாடு முற்று முழுதான சர்வாதிகாரத்துக்குள் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் – தமிழக டாக்டர்கள் அறிவிப்பு

surgery.jpgஇலங்கையில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதிகளை அளிக்கத் தயாரென தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவித் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கும் இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்; முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சகிச்சை வழங்கத் தயார். மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.

ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் 10.11.2008 இல் சேகரிக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் இன்று மாபெரும் மக்கள் பேரணி – தேச மக்கள் எழுச்சி பேரவை நடத்துகிறது

“வன்னி வாழ் எமது உறவுகளை மீட்க ஒன்றிணைந்து எழுவோம் வாருங்கள்” என்ற அழைப்புடன் யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப் பேரவை இன்று யாழ். குடாநாட்டில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்துகிறது.

யாழ். குடாநாட்டில் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

flag_logo_sl.jpgஇலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் கடையடைப்பு நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும்   தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் வரும் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதவாச்சி வரையே எதிர்வரும் 6 ஆம் திகதி வரை யாழ் தேவி சேவைகள்

train.jpgகொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை நடத்தப்படும்; யாழ். தேவி ரயில் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மதவாச்சி வரை மாத்திரமே நடைபெறும் என இலங்கை புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா- மதவாச்சி இடையிலான புகையிரதப் பாதை  புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தேர்தல் வன்முறை 32 ஆக அதிகரிப்பு

paffre.jpgவேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான “பவ்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் செயற்படுவதாக தெரியவில்லையெனவும் கூறியுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் (வெள்ளிக்கிழமை) வரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகூடிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் முறையே 11,2 இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளோம் . அதுபோல் மத்திய மாகாணத்தில் கண்டியில் 13 உம், மாத்தளையில் 5 உம் நுவரெலியாவில் ஒரு தேர்தல் வன்முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவு செய்துள்ளோம்.

இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படவில்லை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரளவு மக்கள் பங்குபற்றுகின்றபோதும் மத்திய மாகாணத்தில் இதனைக் காணமுடியவில்லை. எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் கிராமசேவகருடன் தொடர்பு கொண்டோ தபால் அலுவலகங்களில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாகாண தோட்டப்புற மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை பாவிப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வடக்கு மோதல் குறித்த செய்திகளை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்குக!

reporters.jpgஇலங் கையின் வடபகுதியில் இடம்பெறும் படை மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காஸா விடயத்தில் செயற்படுவதுபோல,  ஊடகங்களும், மனிதாபிமான அமைப்புகளும் சுதந்திரமாக செயற்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமானத் துயரம் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச்  செய்திகள் வெளியாகும் தருணத்தில் இலங்கை அதிகாரிகள் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி மறுக்கின்றனர் என்றும் ஊடக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், வதந்திகளைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

“தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சிமாற்றமொன்று அவசியமாகும்’

ballot-box.jpgதமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றமொன்று அவசியமாகும் என்று தெரிவித்துள்ள ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான, முரளி ரகுநாதன் எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மலையகத்தில் இரட்டை வேடம்பூண்டு வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களித்து ஏமாற்றமடையக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியையும் மலையக மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்று கட்சிமாறும் பச்சோந்திகளும் ஐ.தே.க.சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பிக்கையாக இருந்து சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? அல்லது கட்சி தாவும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? என்று மலையக மக்கள் சிந்திக்க வேண்டும். இன்று மலையக பெருந்தோட்டங்களில் க.பொ.த. உயர்தர கல்வி கற்றுவிட்டு வெளிமாவட்டங்களில் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அதேவேளை, இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் தலைநகரில் தொழில்புரிந்த இளைஞர்களும் தொழிலைவிட்டுவிட்டு மலையக பெருந்தோட்டங்களுக்கே திரும்பிவருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தேவைப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற வேண்டும். தலைநகரில் தமிழ் மக்களுக்காக தனி மனிதனாக இருந்து தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினரும், எமது தலைவருமான மனோ கணேசனின் தன்னலமற்ற சேவையை மலையக மக்களுக்கும் செய்வதற்காகவே நுவரெலியா மாவட்டத்தில் நானும் அவரது சகோதரருமான பிரகாஷ் கணேசனும் போட்டியிடுகின்றோம். தேர்தலில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்போம். நாங்கள் கட்சி மாறமாட்டோம். எனவே, மலையக மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஹிலாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

hilari.jpgஅமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.

பொத்துவில் காட்டில் கைதான 30 முஸ்லிம்களையும் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம்

pottuvil.gifபொத்து வில் காட்டுப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்களையும் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.

தினமும் விறகு வெட்டிப் பிழைத்து வரும் கூலித் தொழிலாளர்களான இவர்கள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதும் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்படுவதுமாக உள்ளனர். இது தொடர்பாக இவர்களின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் அவர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

இதனால், இவர்களின் குடும்பங்கள் எதுவித வருமானமும் இன்றி பட்டினி வாழ்க்கை வாழுகின்றனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவி எம்.பி. மல்லிகா உம்மா தெரிவித்தார். காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற போது அதிரடிப்படையினர் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.