இலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் கடையடைப்பு நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் வரும் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.