இலங் கையின் வடபகுதியில் இடம்பெறும் படை மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காஸா விடயத்தில் செயற்படுவதுபோல, ஊடகங்களும், மனிதாபிமான அமைப்புகளும் சுதந்திரமாக செயற்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமானத் துயரம் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச் செய்திகள் வெளியாகும் தருணத்தில் இலங்கை அதிகாரிகள் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி மறுக்கின்றனர் என்றும் ஊடக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், வதந்திகளைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.