வேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான “பவ்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் செயற்படுவதாக தெரியவில்லையெனவும் கூறியுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் (வெள்ளிக்கிழமை) வரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகூடிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் முறையே 11,2 இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளோம் . அதுபோல் மத்திய மாகாணத்தில் கண்டியில் 13 உம், மாத்தளையில் 5 உம் நுவரெலியாவில் ஒரு தேர்தல் வன்முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவு செய்துள்ளோம்.
இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படவில்லை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரளவு மக்கள் பங்குபற்றுகின்றபோதும் மத்திய மாகாணத்தில் இதனைக் காணமுடியவில்லை. எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் கிராமசேவகருடன் தொடர்பு கொண்டோ தபால் அலுவலகங்களில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாகாண தோட்டப்புற மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை பாவிப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.