இலங்கையில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதிகளை அளிக்கத் தயாரென தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவித் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கும் இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்; முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர்.
மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சகிச்சை வழங்கத் தயார். மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.
ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் 10.11.2008 இல் சேகரிக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
palli
நன்றி; நீங்கள் தயாராக இருப்பது மனித நேயம்; அரசு அதுக்கு அனுமது தருமா?? இதில் அவர்கள் எதிர்கால அரசியல் அடங்குமா??
Suthan
நல்ல ஏற்பாடு இதனை விரைந்து செய்யப்பட வேண்டும்.
மக்களுக்கு அத்தியாவசியமாக என்ன தேவைப்படுகின்றனவோ அதனை முதலில் செய்ய வேண்டும்.