வன்னியில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில் சிக்குண்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நிலை குறித்து இந்தியா, இணைத்தலைமை நாடுகள் உட்பட பிரித்தானியா, அமெரிக்காவும் விஷேடமாக பாப்பரசரும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வைத்திய வசதிகள் வழங்கப்பட வேண்டும். மக்களின் துயரங்கள் களையப்பட வேண்டும். அதற்காக தற்காலிகமாகவாவது போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுத்தும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் துயரங்கள் நீண்டு கொண்டே போகின்றன.
இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாது இலங்கையின் இளம் சந்ததியினர் அழிந்து கொண்டே போகின்றனர். தமிழர், சிங்களவர் உட்பட இந்த நிலை நீண்டு கொண்டு போகுமாக இருந்தால் இலங்கையின் வருங்கால சமுதாயத்திற்கு ஒரு கறை படிந்த சரித்திரத்தை ஏற்படுத்திய பொறுப்பை இன்று இந்த நாட்டை ஆளுகின்ற அரசாங்கம் உட்பட சகலரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
உண்மையை ஏற்க மறுப்பதும் பொறுப்புள்ளவர்கள் பேசுவதை நசுக்குவதும் மனித சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
ஒரு நாட்டில் அதன் சுதந்திர தினம் மிகவும் முக்கியமான தினம்.அத்தினத்திலேயே வன்னி மக்கள் இரத்தம் சிந்தினார்கள் என்றால் இதைவிட மோசமான விடயம் வேறு எதுவுமாக இருக்க முடியாது. இது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். மக்கள் தாங்கள் எங்கு வாழவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததே. ஆகவே இவ் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது ஒரு பொறுப்பற்ற செயலாகும்.
யுத்தப் பிரதேச தகவலின் படி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருப்பதாகவும் அறிகின்றோம். போர் நீடிக்குமானால் இத்தொகை நிச்சயமாகக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்நிலை தொடராமல் வன்னித் தமிழ் மக்களின் துயர் நீங்க யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் தாமதமின்றி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாங்களில் வாழ்ந்து வருகிறார்கள். மூதூர், சம்பூர், குடும்பிமலை போன்ற பிரதேசங்களில் இவர்கள் கூடிய விரைவில் மீளக் குடியமர்த்தப்பட்டு உரிய கொடுப்பனவுகளும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.