எதிரணியை யுத்த முனைக்கு அழைத்துச் சென்று உண்மையை வெளிப்படுத்த அரசு முன்வரவேண்டும் – சஜித் பிரேமதாச

Sajitha Premadasaதற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தில் பெருமளவான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த யுத்தத்தின் உண்மை நிலையை எதிர்க்கட்சியினராகிய எம்மால் கூட அறிய முடியாமலுள்ளது. எனவே எதிர்க்கட்சியாகிய ஐ.தே.க. வினரையும் ஊடகவியலாளர்களையும் யுத்தமுனைகளுக்கு அழைத்துச் சென்று அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டக் கூடிய உறுதியானதும் நிலையானதுமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அது இந்த நாட்டின் ஏனைய சமூகத்தவர்களைப் பாதிக்காத வகையிலும் நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜட்டவத்தை எலக்கர சந்தியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மஹிந்தராஜபக்ஷவின் கள்ளச் சிரிப்பையும் கபட வார்த்தைகளையும் போலி வாக்குறுதிகளையும் அவர் நடத்தும் நாடகங்களையும் நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. அவர் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறியதிலிருந்து இன்றுவரை நடப்பவற்றை கவனத்தில் கொண்டே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

இந்த நாட்டின் வருமானத்தில் 50 சதவீதம் செல்வந்தர்களை சென்றடைகின்றது. 27 வீதம் அமைச்சர்களாலும் எம்.பி.க்களாலும் வீண்விரயம் செய்யப்படுகின்றது. மிகுதி 23 வீதம் மட்டுமே மக்களை சென்றடைகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை யுத்த மாயையில் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யுத்தத்தின்மூலம் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தத்தின் உண்மையான நிலை என்னவென்பது இந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய எங்களுக்கே தெரியாமல் உள்ளது.

எனவே யுத்தத்தின் உண்மை நிலையை நாம் அறிந்துகொள்ள எதிர்க்கட்சியாகிய ஐ.தே.க.வையும் ஊடகவியலாளர்களையும் அரசு யுத்த முனைகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அதேவேளை, தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தீர்வுத்திட்டத்தை அரசு முன்வைக்கவேண்டும். ஆனால், இந்தத் தீர்வுத்திட்டத்தினால் இந்த நாட்டின் ஏனைய சமூகங்கள் பாதிக்கப்படக்கூடாது. அத்துடன் நாட்டின் இறைமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக் காலத்தில் தான் இந்தநாடு பொருளாதாரரீதியில் வளர்ச்சிகண்டது. அதன் பின்னர் வந்த தலைவர்களால் அந்த வளர்ச்சி நிலையை தொடர முடியவில்லை. முறையான தலைமைத்துவம் இருந்தால் மட்டுமே நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய முடியும். எனவே மக்கள் உண்மைநிலையை உணர்ந்து ஐ.தே.க.வை மீண்டும் ஆட்சிபீடமேற்ற வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *