February

February

புதுமாத்தளன் மருத்துவ நிலவரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு கடிதம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் பல்வேறு வசதியீனங்கள், மருந்துத் தட்டுப்பாடு, மன உளைச்சல்களுக்கு மத்தியில் அரச வைத்தியர்கள் பணியாற்றி வருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கி்ன்றார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட எறிகணை தாக்கதலில் இறந்துபோன பலரது உடல்களும், காயமடைந்தவர்கள் பலரும் புதுமாத்தளன் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மிகவும் குறைவான வைத்திய வசதிகளுடன், பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று தெரியாமல் தாங்கள் திகைப்படைந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் ஆகிய இடங்களில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் போர்ப்பதட்டம் காரணமாக கைவிடப்பட்டு, தற்போது புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமே இந்தப் பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வசதியீனங்களுக்கிடையில் இயங்கி வருவதனால், இந்தப் பிரதேசத்தின் வைத்தியசேவை நிலைகுலைந்து ஸ்தம்பிதமடையும் அபாய நிலைமை நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிறிய பாடசாலை கட்டிடத்தில் ஆரம்ப வைத்திய நிலையமாக இயங்கி வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையில் நாளாந்தம் 100 தொடக்கம் 200 வரையில் போர்க்காயங்களுடன் வருகின்ற காயமடைந்தவர்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு இடவசதியோ ஏனைய உட்கட்டமைப்பு வசதியோ இல்லாத நிலையில் வைத்தியர்கள் அங்கு போராடிக்கொண்டிருக்கி்ன்றார்கள் என்றும் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

மக்களின் தகவலறியும் உரிமையை இந்த அரசு பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் கண்டனம்

tamil_news_bulletin_.jpgபி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை அரசு மக்களின் தகவலறியும் உரிமையை பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஐந்து ஊடக அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில்; பி.பி.சி. தனது நாளாந்த தமிழ், சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புவதை இடை நிறுத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச அதிகாரிகளால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தும் தணிக்கை செய்யப்பட்டு வந்ததால் பி.பி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.

பி.பி.சி. நிகழ்ச்சியை தணிக்கை செய்தது மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிப்பதாகும். பி.பி.சி. நிறுவனம் இணையத்தளம் மூலம் உலகெங்கும் வாழும் எந்தவொருவருக்கும் நேரடியாக செவிமடுக்கக் கூடிய இந்த பி.பி.சி. நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளிலும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சிலரால் நிகழ்ச்சியின் சில பகுதிகளை தணிக்கை செய்து ஒலிபரப்பாக்குவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச “கோமாளிகளின்’ கோமாளித்தனமான செயற்பாடாகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் பி.பி.சி. நிகழ்ச்சியை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் பி.பி.சி. நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தின் படி அந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உள்ளபடியே ஒலிபரப்பப்பட வேண்டும். பி.பி.சி. இலங்கை அரசின் வானொலிச் சேவையின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் பங்களிப்புச் செய்வதென்பதே ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும். அந்த நிகழ்ச்சியை தணிக்கை செய்து ஒலிபரப்புவது ஒப்பந்தத்தை மீறுவதாகும். மக்களது தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

பி.பி.சி. நிகழ்ச்சி குறித்து ஏதாவது பிரச்சினை அரசுக்கு இருந்தால் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளாது பி.பி.சி.க்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்து இலங்கை மக்களுக்கு இலங்கை ஒலிபரப்புச் சேவையின் மூலம் முன்னரைப் போல் செவிமடுக்க வசதி செய்யும் படி இலங்கை மக்களுக்கு தகவல் அறிந்து கொள்வதற்கு அரசமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குவோருக்கு கடும் நிபந்தனைகள்

children-srilanka-02.jpgஇடம் பெயர்ந்து வந்துள்ள வன்னிப்பகுதி மக்கள் வவுனியாவில் தங்கியுள்ள நலன்புரிநிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குபவர்களுக்கு சில நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற, அளவு குறைந்த, பழுதடைந்த உணவு வகைகள் நலன்புரிநிலையங்களுக்கு விநியோகித்தால் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

உணவுப்பொதிகளில் ஈரம் வெளியே கசியாதவாறு கடுதாசியினால் பொதியிடப்படவேண்டும். விநியோகத்திற்கு முன்னர் உணவுப் பார்சலுடன் கச்சேரிக்கு தினமும் குறித்த நேரத்தில் சமூகமளித்து பரிசோதனையின் பின்னரே அவை விநியோகத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பிரிவு கிராமசேவையாளருடைய சிபார்சுடனேயே உணவு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுகின்றது. காலை உணவாக கௌப்பி, பாண், நூடில்ஸ் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவுப் பொதி 250 கிராம் கொண்டதாகவும் மதிய உணவுப் பொதி (சோறு) 600 கிராம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படையின் 25 முகாம்கள் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்சந்திர தெரிவிப்பு

sri-lanka-police.jpgவன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் விசேட அதிரடிப் படையின் 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான கே.எம்.எல். சரத்சந்திர கூறுகையில்;

தற்போது வன்னியில் 24 பிரதான முகாம்கள் உட்பட 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. “ஏ9′ வீதியில் ஓமந்தை முதல் மாங்குளம் வரை முகாம்களும், ஓமந்தை முதல் மணலாறு வரை 8 முகாம்களும், வவுனியா பூந்தோட்டப் பகுதியில் 8 முகாம்களும் , கனகராஜன் குளம் நெடுங்கேணி வீதியில் உப முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் இங்கு இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

நாயக்கர்சேனை வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு எதிராக தேர்தல் திணைக்களம் நடவடிக்கை

sri-lanka-election.jpgவடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் நாயக்கர்சேனை பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரிந்த தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புத்தளம் கச்சேரியில் இந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குப் பெட்டியை திறந்து வாக்குச் சீட்டுகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்ட போது 16 வாக்குச் சீட்டுகள் இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இது தொடர்பாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டிருந்தார்.  இதனையடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்களிப்பு மோசடியால் அதன் வாக்களிப்பை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்ததுடன், புத்தளம் மாவட்ட முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

இந்த வாக்களிப்பு நிலைய வாக்குப் பெட்டிக்குள் மோசடியான முறையில் வாக்குச் சீட்டுகள் காணப்பட்டதையடுத்து அந்த நிலைய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர் மதுரங்குளிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழ் மக்களின் துருவ அரசியல் ஏற்படுத்தும் பதட்டமும் மிரட்டல்களும் : த ஜெயபாலன்

Stop Voilenceபிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்ணணி அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் ‘அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லவும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று கணவரிடம் கூறும்படி எச்சரித்து உள்ளனர். ‘ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று திருமதி உதயகுமாரிடம் வந்த நபர்கள் எச்சரித்து உள்ளனர்.

இப்பயமுறுத்தல் தொடர்பாக டிரான்சி பொலிசில் முறையிட்டு உள்ளதாக உதயகுமார் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே ரிஆர்ரி தமிழ்அலைக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார் நேற்றைய பயமுறுத்தல் எல்ரிரிஈ தரப்பிலிருந்தே வந்துள்ளதாக தான் நம்புவதாகவும் பொலிஸில் அவ்வாறே முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் அரசியல் அரங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்ட போது இதுவரை அவ்வாறான முடிவுகள் எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் வழமைபோல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சம்பவதினம் மாலை 5 மணியளவில் உதயகுமார் வசிக்கும் அப்பாற்மன்ட் இன்ரகொம்மில் உதயகுமாரை அழைத்து உள்ளனர். அப்போது உதயகுமார் வீட்டில் இருக்கவில்லை. இன்ரகொம்மில் திருமதி உதயகுமார் உதயகுமார் வெளியே சென்றத்தைத் தெரிவிக்கவும் வந்தவர்கள் ‘நாங்கள் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளனர். அவர்களது குரலில் சந்தேகம்கொண்ட திருமதி உதயகுமார் தானே கீழே வருவதாகக் கூறிவிட்டு பிள்ளைகளை அப்பாட்மன்டில் பூட்டிவிட்டு கீழே சென்றுள்ளார். அங்கிருந்த மூவரில் ஒருவர் வாயிலுக்கு வந்து ” உதயகுமாருக்கு அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள் இல்லாட்டி பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று எச்சரிக்க பின்னாலிருந்து மற்றுமொரு குரல் ”ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உதயகுமார் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தது. ‘அதனை அவரிடமே சொல்லுங்கள்’ என்று திருமதி உதயகுமார் கேட்கவும் ‘சொல்ற விதத்தில் சொல்லுவோம்’ என்ற வகையில் பதில் அளித்துவிட்டுச் சென்று உள்ளனர். ‘வந்தவர்கள் தங்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அறமுகப்படுத்தி உள்ளனர்.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. அதேவேளை, எல்ரிரிஈ ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அந்த நிகழ்ச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம் ஒன்றை மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் “இனியொரு” இணையத்தளத்தில் சபா நாவலன் எழுதி இருந்தார். அதில் ‘இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!! இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.” என்று நாவலன் காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இறுதியில் ”மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பாவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்ப மக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக் குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!” என்றும் சபா நாவலன் குறிப்பிட்டு இருந்தார்.

சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.

ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வுகள் தற்போது மிகவும் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றின் ஒரு வெளிப்பாடாகவே கிங்ஸ்பரி விகாரைக்கு ஜனவரி முற்பகுதியில் சில விசமிகள் தீ வைத்துள்ளனர். அதிஸ்டவசமாக தீ கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும் லண்டனில் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கொலைப் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி பொலிஸில் முறையிடப்படும் வரை சென்றதுடன் சில நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இன்னுமொரு பாதுகாப்பான வீட்டில் தங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சி கவுன்சிலராக உள்ள போல் சத்தியநேசன் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன்ரிம்ஸ் ஊடாக ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியே இப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் எப்போதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதும் எப்போதும் மக்கள் அணுகக் கூடிய வகையில் செயற்படும் கவுன்சிலர் என்பதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில இளைஞர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் சிலரால் தூண்டப்பட்ட ஒரு அடையாளத்தை தேடும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 26 அன்று முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் வெளிப்படையாக தனது அரசியல் கருத்தக்களை வெளியிடுபவருமான லாபீர் என்றழைக்கப்படும் எஸ் பரமநாதன் ஈஸ்ற்ஹாமில் வைத்து மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டதுடன் மேலும் தாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்களிடையே இருந்து வந்த துருவ அரசியல் இந்த அவலமான சூழலிலும் மக்கள் சார்ந்ததாக இல்லாமல் தாங்கள் சார்ந்த அமைப்பை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அவற்றின் வெளிப்பாடாகவே இந்த மிரட்டல் சம்பவங்கள் அமைகிறது. மேலும் சில வன்முறைக் குழுக்களும் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்தி ஒரு அடையாளத்தை தங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முற்று முழுதாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். தமிழ் மக்கள் கடந்து வந்த அரசியல் பாதை இனித் தெரிவு செய்ய வேண்டிய அரசியல் பாதை தொடர்பான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள், மதிப்பீடுகள் அவசியம். வன்முறை மிரட்டல்கள் மூலம் இவற்றை நிறுத்தலாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க முற்படுவதற்கு ஒப்பானது.

”மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை” சிறிதுங்கா ஜெயசூரியா-; ஜே ஜே

Srithunga_Jeyasuriyaஇலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும் தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து கொல்லாதீர்கள், இலகுவான முறையில் கொல்லுங்கள் என்ற வகையில்தான் நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த பின்னனியில்தான் சிறிதுங்க ஜெயசூரியா அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

சிறிதுங்கா ஜெயசூரியா இலங்கை ஐக்கிய பொது உடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். தேர்தல் அறிக்கையிலேயே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தவர்.

இவரை அறிமுகம் செய்து வைத்தார் Committee For Workers International என்ற சோசலிச அமைப்பைச் சேர்ந்த லண்டனில் இருந்து வந்திருந்த ஈழத்தமிழர் சேனன். அவர் கூறுகையில் எத்தகைய கொலை மிரட்டல்களுக்கு எதிராக தனது கருத்தை ஜெயசூரியா முன்வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டர். மனித உரிமைகள் மீறல் இருக்கலாம் என்று கூறியதற்காக BBC, CNN, ஜெர்மன் தூதர் மற்றும் சுவிஸ் தூதர் போன்ற ஆனானப்பட்டவர்களையே நாட்டை விட்டு துரத்துவோம் என மிரட்டும் அரசு இயந்திரம், ”இனப்படுகொலையை நிறுத்து” எனக் குரல் கொடுக்கும் சிங்களவரை என்ன செய்வார்கள் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப்படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆழ்ந்த கவலை தரும் ஐ.நா.வின் போக்கு – புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

p_nadesan.jpgமனிதத்துவத்தின் அதி உன்னத நிறுவனமான ஐ.நா.வின் போக்கு ஆழ்ந்த கவலையையும் புதிரையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அப்பாவித் தமிழ் மக்களின் நலன்களையும் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்ளவில்லையெனவும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  என்ன நடக்கின்றது என்று நேரில் வந்து பார்க்காமல் தவறான பக்கத்தை குற்றம் சாட்டும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நடேசன் கூறியுள்ளதாக “தமிழ் நெற்’ இணையத்தளம் தெரிவித்தது.

யுத்தத்தை நிறுத்துவதே இந்த நேரத்தில் தேவைப்படுவதாகும். அதற்கு இடமளித்துக் கொண்டு பொதுமக்கள் துன்பங்களுக்காக கவலை தெரிவிப்பது தவறான கொள்கையாகும் என்றும் நடேசன் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் மற்றும் யுனிசெப் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக தமிழ் நெற்றுக்கு நடேசன் தெரிவித்திருப்பதாவது;

இடம்பெறும் யுத்தம் பொதுமக்களுக்கு சகல விதமான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கப்பட வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக உள்ளார்கள். ஆதலால் பொதுமக்களின் துன்பம் தொடர்பாக கரிசனையுடைய உலக அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோர வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக யுத்தத்துக்கு இடமளிக்கும் கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால், முழுமையாக தமிழருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது உண்மையாகும்.

கொழும்பின் யுத்தத்தை நியாயப்படுத்துவதும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலைப்படுவதுமான இரட்டைத் தனமான கொள்கை அடிப்படையில் தவறானதாகும். இந்தத் தவறான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஐ.நா. கடுமையாக உழைக்க வேண்டும். மனித உயிர் , கௌரவம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பவற்றை மோதல் வலயத்தில் மட்டுமல்லாது முழுத்தீவிலும் உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்.

வன்னியிலுள்ள பொதுமக்களின் உடனடிக்கவலைகள், தாக்குதல் பயத்திலிருந்தும் விடுபடுவதும் மருந்து , உணவு, நீர் மற்றும் தமது கிராமங்கள் வீடுகளுக்கு அச்சமின்றி திரும்பிச் செல்வதுமாகும். இந்தக் கவலைகளுக்கு எதிராக புலிகள் செயற்படவில்லை. தற்காலிக மோதல் நிறுத்தக் கோரிக்கையைக் கூட கொழும்பு செவிமடுக்கவில்லை என்பதை ஐ.நா. நன்கறியும். உணவு, மருந்து விநியோகத்திற்கும் அனுமதியில்லை. ஆதலால் பொதுமக்களின் கவலைகளுக்கு பரிகாரம் காணும் விடயத்தில் ஐ.நா. தவறான விதத்தில் குற்றம் சாட்டுகிறது.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த எவரையும் அமைப்பில் புலிகள் இணைத்துக்கொள்ளவில்லை. பொதுமக்கள் தமது சொந்த விருப்பத்திலேயே எமது பகுதிக்குள் இருக்கின்றனர்

உலகில் திறமை மிக்கவர்கள் படையினர் என்றால் ஏமாற்றுவதில் அரசு திறமை மிகுந்தது- கபீர் ஹாசிம் கூறுகிறார்

sri-lanka-parliment.jpgஅரச படையினர் பயங்கரவாதிகளை தோற்கடித்த உலகின் திறமை மிகு படையினர் என்றால், அரசாங்கமோ மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் நாட்டு மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற, சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழான இறக்குமதி தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரகாரமான கட்டளை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் எம்.பி.இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை, தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதற்கும் அரசாங்கம் பல உபாயங்களை கையாண்டது. எமது படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்த உலகின் சிறந்த படையினர் என்றால், அரசாங்கமோ, மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் பல வெற்றிகளை பெற்ற போதிலும், அரசியல் வாதிகளே மலர் மாலைகளை அணிந்து கொள்கின்றனர். இதேநேரம், காயமடைந்தவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் காலாவதியாகி விட்டமையால், தற்போது, அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டின் சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக இருக்கும் போதே நாட்டில் இந்த நிலைமை நிலவுகிறது.

நாட்டு மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடக்கிறது. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார எழுச்சிக்கான சிறந்த சந்தர்ப்பம் இது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதே என்றார்.

இடம்பெயரும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு நிதி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

red-cross.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நிதி உதவி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இப் பணிகளுக்காக நிதி உதவி வழங்க விருப்புவோர் கொழும்பு 10, ஹைட் பார்க், இலங்கை வங்கிக் கிளையின் 8860012 என்ற கணக்கிலக்கத்துக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியுமென சங்கம் அறிவித்துள்ளது.

இடம்பெயரும் மக்களுக்காக தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மேலும்; பொருள் உதவிகளை வழங்க விரும்புவோர் பால்மா, பிஸ்கட், குடிநீர், போத்தல்கள், துணிகள், சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், துவாய், சவர்க்காரம், பற்பசை மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கி உதவ முடியும்.

நீர்தாங்கி மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களின் வசதி கருதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட 50 நவீன மலசலகூடங்களுடன் புதிதாக 50 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மூன்று அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து வவுனியா செஞ்சிலுவைச் சங்கக்கிளை மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக 25 தொண்டர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைப்பணிகளுக்காக 60 ஆண், பெண் பணியாளர்கள் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சேவைகள் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன.

திருகோணமலை வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கமும் உதவிகளை வழங்கிவருவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது