January

January

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை படையினரின் நடவடிக்கை தொடரும் – அனுர யாப்பா

yappa.jpgபுலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை படையினரின் தற்போதைய மனிதாபிமான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதும் கிழக்கைப் போன்று வடக்கிலும் மாகாண சபை நிர்வாகம் ஸ்தாபிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அரசியல் தீர்வு யோசனைகள் கிடைக்கப் பெறும் வரை, வடக்கிலும், கிழக்கிலும் மாகாணசபை நிர்வாகம் அமுல் படுத்தப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டை நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைச்சர் யாப்பா நடத்தினார். இதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் ‘இறுதி அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படும் வரை மாகாண சபை வலுப்படுத்தப்படும்’ என்று தெரிவித்ததுடன், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தயாரில்லை எனவும் கூறினார்.

படையினரின் மனிதாபிமான நடவடிக்கைக்கான காலவரையறையை இராணுவத்தினரே தீர்மானிப்பார்கள். அதனை வேறு எவராவது காலவரையறையை நிர்ணயித்தால் அது படையினருக்குச் செய்யும் துரோகமாகும். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு எமக்குத் தெரியாது. அவர்களின் தற்போதைய நிலைப்பாடு அழுத்தங்கள் காரணமாக விருக்கலாம். எனவே, ஐ. தே. க.வும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒதுங்கியிருந்தாலும், சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எமது இராணுவத்தினர் ஒழுக்கநெறிகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு டாக்டர்களோ, பொறியியலாளர்களோ அல்லது பயங்கரவாதிகளோ உபதேசம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கில் பஸ்சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை

bus.jpgகிழக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேலும் விஸ்தரிக்கும் வகையில் 26 பஸ்களை அரசாங்கம் வழங்கியுள்ளன. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிக் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துச் சேவை தற்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே புதிய பஸ்கள் வழங்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்.கே.ஏ.டபிள்யூ. குணவர்தன தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு விமானமும் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை -விமானப் படை பேச்சாளர்

air.jpgஎந்த ஒரு விமானமும் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை விமானங்கள் எதுவும் அத்துமீறி ஊடுருவவில்லை என்பது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. விமானப் படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், கடந்த 20ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தை தவிர வேறு எந்த ஒரு விமானமும் இருந்ததற்கான எது வித தடயங்களும் ராடர்களில் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஸ்வமடு வான்பரப்பில் 2100 அடி உயரத்தில் இரவு 8.00 மணியளவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எமது விமானம் ஆகாயத்தில் சிவப்பு நிற ஒளிக்கீற்றை அவதானித்தது. அதேபோன்று 8.50 மணியளவில் சுண்டிக்குளம் பிரதேசத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் அதே சிவப்பு நிற ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. அதேசமயம் கடற்படையினரும் இதனை அவதானித்துள்ளனர். ஓமந்தை, பலாலி ஆகிய பிரதேசத்திலும் கீழ் வானத்தில் இந்த ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. இது செய்மதியிலிருந்து கசியும் ஒளியென்பது எமது ராடர்களின் பதிவுகளிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற ஒளி, வான் பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து

surgery.jpgவவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களதும் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை காலை இதற்கான எழுத்து மூல உத்தரவு வவுனியா ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு இடம்பெற்றுவரும் கடும் ஷெல் தாக்குதலாலும் விமானத்தாக்குதலாலும் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் வருகின்றனர். எனினும், படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 80 க்கும் மேற்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படவேண்டியிருந்தும் வவுனியாவுக்கான பாதை மூடப்பட்டுள்ளதால் அவர்களை கொண்டு வர முடியாதுள்ளது. இவர்களை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றபோதும் இதுவரை அது சாத்திப்படவில்லை. இந்த நிலையிலேயே வவுனியா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், தாதியர்கள் உட்பட 450 க்கும் மேற்பட்ட ஊழியர்களதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் – வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் – ரவிகருணாநாயக்கா எம்.பி.

igpalaththas.jpgபாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு நான் வெட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அதிகாரம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடக்கூடியது. இன்று உங்களிடம் இருக்கலாம். அது நாளை எம்மிடம் வரலாம்.

பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு. ஆனால், எம்மை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் போலவும் தேசத் துரோகிகளாகவும் காட்ட அரசு முயற்சிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை பாராட்டியே தனது முதல் உரையை ஆரம்பித்தார். இதுதான் அமெரிக்காவின் முதிர்ச்சி. நாம் அவர்களின் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டவில்லை.

அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகையை நிறுத்த வேண்டும் – தயாசிறி ஜயசேகர

srilanka-parlimant.jpgநாட்டின் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகை நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர  செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே ஜயசேகர எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; “2007 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்கள் பலருக்கும் வீட்டு வாடகையாக மாதாந்தம் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்ததுடன், இந்தக் கொடுப்பனவு இம் மாதம் தொடக்கம் மாதமொன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவாக குறைக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 68 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேதனம் அல்லது கொடுப்பனவை வழங்குவது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். அரசியலமைப்பின் பிரகராம் பொது மக்களின் நிதி அலுவல்கள் தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உரியது.

இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி, தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாலுமே, பாராளுமன்றத்தினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  எனவே, இந்த கொடுப்பனவுகளை இடைநிறுத்த அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ‘ என்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற இந்த பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க.வின் எட்வட் குணசேகர எம்.பி.யும், ஜே.வி.பி.யின் விஜித ரணவீர எம்.பி.யும் பேசியதை அடுத்து, இறுதியாக பதிலளித்து பேசிய போது, நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கையில்; “அமைச்சர்களுக்கு அரசினால் வீடுகள் வழங்கப்படுவது சம்பிரதாயம். இருப்பினும் அமைச்சர்கள் எவரும் பணம் கேட்கவில்லை. ஒரு இலட்சம் ரூபாவையும் கோரவில்லை. எனினும் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையொன்று உள்ளது. எனவே, அமைச்சர்கள் அரச வீடுகளை கேட்டார்களே தவிர, பணம் கோரவில்லை, வீட்டிலிருந்து வரும் போது ரஞ்சன் விஜேரட்ன ,த.மு.தஸாநாயக்க போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் படுகெலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்’ என்றார்.

கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில் வடக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களுக்கென ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்.

மனிதாபிமான அடிப்படையில் எமது கட்சி பல்வேறு சமூக உதவிகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உறவுகள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவையாக உள்ள உதவிகளை நாம் வழங்குவதற்கு எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர் வாரியம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் கிழக்கில் இருக்கின்ற யாராக இருந்தாலும் தங்களது உதவிகளை வடபகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேசசபை செயலாளர்களிடம் ஒப்படைத்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந் நிகழ்வில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் (ஜெயம்) மற்றும் பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படாமைக்கு ஜனாதிபதி காரணமல்ல – அமைச்சர் டியூ குணசேகர

dew.jpgஅரசிய லமைப்புச் சபை ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை ஜனாதிபதியின் தவறு அல்ல. இது பாராளுமன்றத்தின் இயலாமையே என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் குணசேகர இதனைத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின்படி முதலில் 2002 மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாவது சபை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 2005 மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய சபை நியமிக்கப்பட வேண்டியிருந்தும், அது நடைபெறவில்லை. இது ஜனாதிபதியின் தவறு அல்ல. பாராளுமன்றத்தின் பலவீனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பர் 19 ஆம் திகதிதான் பதவியேற்றார். அரசியலமைப்புச் சபை நெருக்கடி அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது.

அப்போது சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய 10 வது உறுப்பினரைத் தெரிவு செய்வதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளால் முடியவில்லை. இரண்டு வருடம் இழுபறிபட்டார்கள். இதற்கிடையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் காலம் நிறைவடைந்து பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றுக்குத் தலைவர்களை ஜனாதிபதி நியமித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? என்ற அமைச்சர் குணசேகர, “அரசியலமைப்புக்கு முரணான ஆணைக் குழுக்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.

இப்போதும் இந்தச் சபையின் அங்கீகாரத்தின்படி ஆணைக்குக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது!” என்று மேலும் தெரிவித்தார்.

திருமலை மட்டக்களப்புக்கு இடையே “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் ஆரம்பம்

lanka-map-02.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளையடுத்து இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14 பஸ்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றை ரயில் தண்டவாளப் பாதை மீது ஓடக் கூடியதாக அவற்றின் ரயர்களை மாற்றி இரும்புச் சக்கரங்களையும் மற்றும் ரயில் பெட்டிகளுக்குரிய உபகரணங்களையும் பொருத்தும் வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பஸ்களை ரயில் பெட்டிகளாக மாற்றியமைக்கும் செலவு அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. 14 பஸ்களும் ஏழு ரயில் பஸ் யூனிட்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டும் இரண்டு பஸ்கள், என்ஜின்கள் முன்,பின்புறம் வரக்கூடியதாக அமைக்கப்படுகின்றன. ஒரு யூனிட்டும்80 பயணிகள் இருந்தும் 100 பயணிகள் நின்றும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணிக்கென்று மூன்று சேவைகளில் மூன்று ரயில் பஸ் யூனிட்கள் ஈடுபடும். இவை நண்பகலுக்குப் பின்னர் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும். இதேபோன்று மூன்று “ரயில் பஸ்’ யூனிட்கள் திருகோணமலையிலிருந்து காலை 6, காலை 8, காலை 10 மணி ஆகிய நேரங்களில் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும். பிற்பகலில் இவை மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வெவ்வேறு நேரங்களில் திரும்பும். மூன்று யூனிட் ‘ரயில் பஸ்கள்’ மட்டக்களப்பில் தரித்து நிற்கும். இதேபோன்று மூன்று ரயில் பஸ் யூனிட்கள் திருமலையில் தரித்து நிற்கும் ஒரு “ரயில் பஸ்’ யூனிட் ரிசர்வாக இருக்கும். மட்டக்களப்பு திருகோணமலைக்கு இடையேயான 200 கிலோ மீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக ரயில் பஸ் சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பஸ்களை ரயில் பஸ்களாக மாற்ற 75 மில்லியன் ரூபா செலவாகும். இந்த பஸ்களுக்கு இறக்குமதித் தீர்வை அறவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் மலேஷியாவில்?

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக  தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–