அரசிய லமைப்புச் சபை ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை ஜனாதிபதியின் தவறு அல்ல. இது பாராளுமன்றத்தின் இயலாமையே என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
“அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின்படி முதலில் 2002 மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாவது சபை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 2005 மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய சபை நியமிக்கப்பட வேண்டியிருந்தும், அது நடைபெறவில்லை. இது ஜனாதிபதியின் தவறு அல்ல. பாராளுமன்றத்தின் பலவீனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பர் 19 ஆம் திகதிதான் பதவியேற்றார். அரசியலமைப்புச் சபை நெருக்கடி அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது.
அப்போது சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய 10 வது உறுப்பினரைத் தெரிவு செய்வதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளால் முடியவில்லை. இரண்டு வருடம் இழுபறிபட்டார்கள். இதற்கிடையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் காலம் நிறைவடைந்து பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றுக்குத் தலைவர்களை ஜனாதிபதி நியமித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? என்ற அமைச்சர் குணசேகர, “அரசியலமைப்புக்கு முரணான ஆணைக் குழுக்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.
இப்போதும் இந்தச் சபையின் அங்கீகாரத்தின்படி ஆணைக்குக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது!” என்று மேலும் தெரிவித்தார்.