புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை படையினரின் நடவடிக்கை தொடரும் – அனுர யாப்பா

yappa.jpgபுலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை படையினரின் தற்போதைய மனிதாபிமான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதும் கிழக்கைப் போன்று வடக்கிலும் மாகாண சபை நிர்வாகம் ஸ்தாபிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அரசியல் தீர்வு யோசனைகள் கிடைக்கப் பெறும் வரை, வடக்கிலும், கிழக்கிலும் மாகாணசபை நிர்வாகம் அமுல் படுத்தப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டை நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைச்சர் யாப்பா நடத்தினார். இதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் ‘இறுதி அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படும் வரை மாகாண சபை வலுப்படுத்தப்படும்’ என்று தெரிவித்ததுடன், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தயாரில்லை எனவும் கூறினார்.

படையினரின் மனிதாபிமான நடவடிக்கைக்கான காலவரையறையை இராணுவத்தினரே தீர்மானிப்பார்கள். அதனை வேறு எவராவது காலவரையறையை நிர்ணயித்தால் அது படையினருக்குச் செய்யும் துரோகமாகும். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு எமக்குத் தெரியாது. அவர்களின் தற்போதைய நிலைப்பாடு அழுத்தங்கள் காரணமாக விருக்கலாம். எனவே, ஐ. தே. க.வும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒதுங்கியிருந்தாலும், சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எமது இராணுவத்தினர் ஒழுக்கநெறிகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு டாக்டர்களோ, பொறியியலாளர்களோ அல்லது பயங்கரவாதிகளோ உபதேசம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *