January

January

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணம்

r-venkatraman.jpg
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் இலட்சியத்துக்கு சாதி, மத, பிராந்திய வேறுபாடுகள் பெரும் தடை- பாரத ஜனாதிபதி

republic-day.jpgநாட்டு நலன்களுக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படும் அனைத்து குடிமக்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் எதிரிகளைத் தோற்கடித்து இந்தியாவின் இறைமையைப் பாதுகாக்கப் போராடும் படை வீரர்களுக்கு தனது விசேட ஆசிர்வாதங்கள் உண்டாகட்டும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் அறுபதாவது குடியரசு தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்கள், இடங்கள் என்பவற்றில் கடுமையான பாதுகாப்புகள் போடப்பட்டன. நாட்டின் ஜனாதிபதியென்ற வகையில் பிரதீபா பட்டீல் குடிமக்களுக்கு விசேட உரையாற்றினார். அதில் கூறியதாவது, நாட் டின் அறுபது வருடகால குடியரசு வரலாற்றில் நாம் சாதித்தவை ஏராளம். நீதி சுதந்திரம், சமத்துவம் என்கின்ற தார்மீகப் பொறுப்பில் இந்தியா தனது பயணத்தைத் தொடர்கின்றது. அன்னியர்களிடமிருந்து பெறப்பட்ட சுதந்திரத்தின் பூரண வடிவம்தான் குடியரசு தினம்.

வெளிநாட்டாரின் ஒருவித அழுத்தங்களின்றி முடிவெடுக்கவும், செயலாற்றவும் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தைக் கூறுபோடவும், ஒற்றுமைக்கு உலைவைக்கவும் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் படையினரை இந்தியர்கள் மறக்க முடி யாது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய் மண்ணுக்கும் பெருமை தேடித்தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் அரசுகள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அயல் நாடுகளில் அமைதியின்மையைத் தூண்டி உள்ளூர் அரசியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அரசுகளையோ, அமைப்புகளையோ ஜனநாயகவாதிகள் என்றழைக்க முடியாது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக் குதலில் அரசு சாராத தனி நபர்களுக்கே தொடர்பு உள்ளது என்றும் இதில் தங்களை குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறி கைகழுவிக் கொள்கிறது பாகிஸ்தான். அதன் இந்த நிலை ஏற்கத்தக்கதல்ல. உலகின் ஸ்திரத்தன்மைக்கு உலைவைப்வதாக உள்ளது பயங்கரவாதம். எனவே பயங்கரவாதத்தை இருக்கும் இடம் தெரியாமல் விரட்ட உலக நாடுகள் ஒன் றுபட்டு நின்று தெளிவான நடவடிக் கையை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்தின் மையம் நிலைகொண்டுள்ள பிராந்தியத்தில் இந்தியா அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாத கொடூரங்களுக்கு இந்தியா ஆளாகி வருகிறது. பயங்கரவாதம், வன்முறைகள், இயற்கைப் பேரிடர்கள், கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருள் விலையேற்றம், உலகப் பொருளாதாரத் தேக்க நிலை என கடந்த ஓராண்டில் நாட்டைத் துண்டாடும் நோக்கத்தில் சில சக்திகள் செயற் படுகின்றன. அவற்றை மக்கள் புரிந்து கொண்டு ஒரே இந்தியா, நாம் இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் செயற்பட வேண் டும். பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் நம்மிடம் இருக்கக் கூடாது. சுதந்திர இந்தியா என்ற இலட்சியத்தை நோக்கி நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். அந்த இலக்கை அடைய நாம் கையாளும் கொள்கைகளுக்கு பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் எதிரானவை.

சிவிலியன்கள் மத்தியிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் புலிகளிடம் யாழ். ஆயர் வேண்டுகோள்;

thomas-sawndaranayakam.jpgபாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் மத்தியிலிருந்து இராணுவத்தின் மீது புலிகள் ஆட்லறி தாக்குதல்கள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படியான செயல்கள் சிவிலியன்களின் மரணத்தை மேலும் மேலும் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் நன்மைகருதி முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் உருவாக்கியமைக்காக ஆயர் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் சிறிய கவனம் செலுத்தி அதனை விஸ்தரிக்க வேண்டும். மாதலான் வளையார் மடம், முள்ளிவாய்க்கால், இரணைபளை மற்றும் புதுக்குடியிருப்பின் கிழக்கு ஆகிய பகுதிகளை சிவிலியன் பாதுகாப்பு வலயத்தினுள் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வலயத்தினை மேலும் விஸ்தரிக்குமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.

பொதுமக்களின் நன்மைகருதி இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ‘நாங்கள் யுத்தத்திற்கு எதிரானவர்களல்ல. ஆனாலும் யுத்தப் பிரதேசங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும்’ எனவும் ஆயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த 25ம் திகதி எழுதிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யுத்தம் நடைபெறும் பகுதியில் சிவிலியன்களின் நலனில் அக்கறை செலுத்துவதை நாங்கள் நன்றியுடன் நோக்குகிறோம். பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஒரு சிறிய பிரதேசத்தினுள் கூடுதலானோர் தங்கியுள்ளனர்.

ஏராளமான மக்கள் தேவாலயங்களுக்குள் வந்து சேர்வதாக சில பாதிரியார்களும், அருட்சகோதரிகளும் எனக்குத் தெரிவித்த வண்ணமுள்ளனர். இவைகள் அனை த்தும் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியிலாகும். இவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், ஐ.சி.ஆர்.சியும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தஞ்சமடையும் அப்பாவிச் சிவிலியன்களைக் கருத்திற்கொண்டே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதியாகி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். எங்களது பங்குத்தந்தையர்களும், கன்னியாஸ்திரிகளும் மக்கள் செல்லும் இடங்களெல்லாம் சென்று அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கின்றனர். அவர்களைக் கைவிடவில்லை.

அதேநேரம், மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் புலிகள் தங்களது ஆட்லெறி நிலைகளை ஏற்படுத்தி அங்கிருந்து இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படியான செயல் மேலும் மேலும் உயிரிழப்புக்களையே ஏற்படுத்தும். சிவிலியன்களின் பாது காப்பில் இரு தரப்பும் அக்கறைகொள்ள வேண்டும். ஆகவே அதிகெளரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, முல்லைத்தீவின் மேற்குப் பிரதேசத்தையும் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆயர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

‘முல்லைத்தீவில் 26 பொதுமக்கள் பலி’- B.B.C தமிழோசைக்குவழங்கிய செவ்வியில் டாக்டர். டி. சத்தியமூர்த்தி

truck.jpgஇலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று  நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவிபுரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் B.B.C தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகை தர உள்ளார்.

pranab.jpgஇன்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி  கொழும்பு வருகை தர உள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பிற்கு வருகை தர உள்ளார் . அச்சமயம் ஜனாதிபதி ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இத்தகைய பின்னணியில், பிரணாப் கொழும்பு வருகை தரும்  செய்தி வந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

யாழ்., வன்னிக்கு விஜயம் செய்யுமாறு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

president.jpgமுல்லைத்தீவில் புலிகள் மனிதக் கேடயங்களாக உடயோகிக்கும் தமிழ் மக்களை விடுவிக்கவென சொந்த முறையில் வேண்டுகோள் விடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணைய தளத்துக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் மேற்கொள்ளும் விஜயத்தின்போது அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து உரையாட முடியுமெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த இரு இந்தியத் தலைவர்களும் ஜனாதிபதியின் அழைப்பு சம்பந்தமாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் சமயத்தில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது அவசியமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை வரமுடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவித்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது தொடர்பான சமரச பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தலைவர்கள் நடத்த முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாவிகளையும் அணைக்கட்டுகளையும் தகர்ப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களுக்கு புலிகள் இயக்கம் அளப்பரிய கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதென்றும் இந்த பேட்டியின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதென்றும் ஜனாதிபதி அதில் கூறியுள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனரெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு நோக்கி படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கை

mulli-town.jpgமுல்லைத் தீவை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினரின் அடுத்த இலக்கு புலிகளின் எஞ்சியுள்ள கோட்டையான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதாகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பையும், விசுவமடுவையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 4 படைப்பிரிவுகளும் 3 செயலணிகளும் மும்முனைகள் ஊடாக வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய முனைகளை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவை படையினர் கைப்பற்றியதன் மூலம் புலிகளின் கடல்வழி நடவடிக்கைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் கிழக்கு கடற்பரப்பு முழுவதையும் முற்றுகையிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அடுத்துவரும் சில நாட்களுக்குள் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை புலிகளுடனான படை நடவடிக்கையில் 95 சதவீத வெற்றியை படைத்தரப்பு கண்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா வெகு விரைவில் இறுதி வெற்றியை அடைய முடியுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து முன்னேறி பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள படையினர் தற்பொழுது அங்குள்ள தமது நிலைகளை பலப்படுத்தி வரும் அதேசமயம், புலிகளின் முக்கிய தளங்களை நோக்கி முன்னேறி வருவதுடன் ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்புக்கு வடபகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சகல மண் அரண்களையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் சுண்டிக்குளம் தெற்கு நோக்கி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம் 58வது படைப் பிரிவினர் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 57வது படைப் பிரிவினர் கிழக்கு முனையில் விசுவமடு பகுதியிலிருந்தும், 59வது படைப் பிரிவினர் தற்பொழுது சாளை பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜெயகாந்தனுக்கு -பத்மபூஷன் விருது

jayakandhan.jpg
இந்தியாவில் 2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்ம விபூஷன் விருதும், ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷனும், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றோர் ..

டாக்டர் அனில் ககோத்கர், டாக்டர் சந்திரிகா பிரசாத் ஸ்ரீவத்சவா, பேராசிரியர் டி.பி.சட்டோபாத்யாயா, கோவிந்த் நாராயண், பேராசிரியர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், டாக்டர் புருஷோத்தம் லால், சுந்தர்லால் பகுகுணா, மாதவன் நாயர், சகோதரி நிர்மலா, டாக்டர் ஏ.எஸ். கங்குலி.

பத்மபூஷன் விருது பெற்றோர் ..
வி.பி.தனஞ்செயன், வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி, சரோஜினி வரதப்பன், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட 30 பேர்.

பத்மஸ்ரீ விருது பெற்றோர் ..

நடிகர்கள் விவேக், திலகன், அக்ஷய் குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், பாடகி அருணா சாய்ராம், ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் டோணி, பங்கஜ் அத்வானி, ஆறுமுகம் சக்திவேல் உள்ளிட்ட 93 பேர்

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததும் அபிவிருத்திக்கான யுத்தம் காத்திருக்கின்றது – கரு ஜெயசூரிய

karu_jayasuriya.jpgவடக்கு மீட்கப்பட்டு போர் முடிவுக்கு வந்தாலும் அடுத்ததாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய யுத்தம் காத்திருப்பதாகத் தெரிவித்த ஐ.தே.க.பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜெயசூரிய, நாட்டின் பொருளாதார நிலையை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஐ.தே.க.வுக்கு மட்டுமே உண்டெனவும் தெரிவித்தார். வென்னப்புவத் தொகுதியில் உள்ள கட்டுநேரியவில் நடைபெற்ற ஐ.தே.க.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கருஜெயசூரிய அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இந்த நாட்டில் இடம்பெற்று வரும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்புவதற்குமான பாரிய யுத்தம் உள்ளது. இதனை எவ்வாறு சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்த வருட நடுப்பகுதியில் பொதுத்தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்ப்பதோடு அதனை எதிர்கொண்டு பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆளும் சக்தி எமக்குக் கிடைக்கும். அந்த நாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எமது நாட்டுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார முகாமைத்துவத்தை சரியான பாதையில் சரியான முறையில் திருப்பும் சக்தி ஐ.தே.க.கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. மாறாக எந்தக் கட்சிக்கும் பொருளாதார முகாமைத்துவம் இல்லை. இதனை அன்று முதல் ஐ.தே.கட்சி வெளிப்படுத்தி வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டது. குறுகிய இரண்டரை வருட காலத்திற்குள் அந்த நிலை அப்போதைய ஐ.தே.கட்சியினால் முழுமையாக மாற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

மீண்டும் இந்த நிலையை மாற்றுவதற்கு முதல் படிதான் மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றியாகும். இதனை நாம் உறுதிப்படுத்தியதோடு எமது கட்சியை ஆளும் பலத்தைப் பெற்றுத் தாருங்கள். எமது கட்சி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

பிரபாவின் வரட்டு கெளரவமும் பிடிவாதமுமே தமிழர்களுக்கு பேரழிவைத் தேடித்தந்தது – கருணா

karuna.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமுமே தமிழ் மக்களுக்கு அழிவைத் தேடித் தந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் வட பகுதியை புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களே நன்மை அடைவர்.  இதனூடாக சிங்கள மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தினரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர் புலிகள் இயக்கத்தினர் அழிவின் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார். ரன்பிம (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் அலரி மாளிகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாறுகையில், இலங்கையில் தமிழீழம் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிப்போம் என புலிகள் இயக்கத் தலைவருக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் அந்த யோசனையை நிராகரித்ததுடன், யுத்தத்தின் மூலம் தமிழீழம் அமைக்கலாம் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் நான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி னேன்.

புலிகள் இயக்கத்தில் 22 வருடகாலம் உறுப்பினராக இருந்த நான், அக்காலம் முழுவதும் யுத்தக் களத்திலேயே இருந்தேன். ஆனால் புலிகள் இயக்கத் தலைவர் ஒருபோதுமே யுத்த களத்திற்கு வந்திராதவராவார். அவர் ஒரு மாயை. அவரது வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமும்தான் தமிழ் மக்களுக்கு, அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்தது. அதனால்தான் அவரை தமிழ் மக்களில் 95 சதவீதமானோர் நிராகரித்துவிட்டனர்.

பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பயனாக அங்கு மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். பாரிய அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு உதயம் திட்டம் ஊடாக அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேளையில், வடபகுதியை வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதனால் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் அன்னாரின் கரங்களைப் பலப்படுத்துவது காலத்தின் அவசியத் தேவை யாகும்.

பொய்ப்பிரசாரம் செய்வதில் புலிகள் வல்லவர்கள். இதனை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தைப் போன்று மீண்டும் கெரில்லாப் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் இங்கு கிடையாது. ஆரம்ப காலத்தைப் போன்று புலிகள் இயக்கத்தினருக்கு இப்போது தமிழ் மக்களின் ஆதரவும் கிடையாது. அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்திருப்பவர்கள்.

இதே நேரம் பாதுகாப்புப் படையினர் தொழில்நுட்ப ரீதியாக இப்போது பாரிய வளர்ச்சி அடைந்துள்ளனர். கெரில்லா போராட்டத்தின் மூலம் இவ்வளர்ச்சிக்கு முகம் கொடுக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டுத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.