இன்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகை தர உள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பிற்கு வருகை தர உள்ளார் . அச்சமயம் ஜனாதிபதி ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.
இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இத்தகைய பின்னணியில், பிரணாப் கொழும்பு வருகை தரும் செய்தி வந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.