இலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவிபுரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் B.B.C தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.