41 அரச நிறுவனங்களுக்கு ரூ. 204 கோடி குறைநிரப்பு பிரேரணை – அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் சமர்ப்பிப்பு
வரவு-செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொதுக் கருத் திட்டத்தின் கீழ் 41 அரசாங்க நிறுவனங்களுக்கென 204 கோடியே 13 இலட்சத்து 95 ஆயிரத்து 532 ரூபாவுக்கு குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் குறை நிரப்பு பிரேரணையை ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அமைச்சர் இந்தக் குறை நிரப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரசாங்க திணைக்களங்கள் அடங்கலான 41 அரச நிறுவனங்களுக்காகவே இக்குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தைத் திருத்துவதற்கென ஒரு கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 882 ரூபாவும் இக்குறைநிரப்பு பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.