மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா இன்று காலை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகிறது. சாஹித்திய விழாவினையொட்டி இந்தியாவிலிருந்து விசேட சொற்பொழிவாளர்கள் மூவர் கலந்து கொள்கின்றனர்.
வாணியம் பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் அப்துல் காதர், பெங்களூரைச் சேர்ந்த ‘புதுவிசை’ இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தஞ்சாவூர் பாரதிதாஸன் தமிழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமா வைத்தியலிங்கம் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். புதுவிசை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா “புலம்பெயர் கவிதைகளில் முன்னோடிகள் இலங்கை மலையக தமிழர்” என்ற தலைப்பில் உரையாற்ற வுள்ளார்.
இந்த சாஹித்திய விழாவில் 14 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கல்வித்துறை, சமூகசேவை, கலைத்துறை, இலக்கியத்துறை, ஊடகத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றிற்கான விருதுகள் பெறவுள்ளனர்.
“நூல்’ ஆக்கத்திற்கு 5 பேர் விருது பெறவுள்ளனர். சிறுகதை, நாவல், ஆய்வு, பிறதுறை ஆகிய வெளியீடுகளுக்காகவே விருதுகள் வழங்கப்படவுள்ளன.ஊர்வலம் காலை 9.00 மணிக்கு பாக்கிய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கின்றது. இதில் 5 ஊர்திகள் ஊர்வலத்தில் செல்லவுள்ளதோடு, திருகோணமலை ‘இனியம்’ தமிழ் இசை பாண்ட் வாத்தியமும் கலந்து கொள்ளவுள்ளது.
ஊர்வலத்தினை தொடர்ந்து விழா 10.30 மணிக்கு மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் மண்டபத்தில் மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆரம்பமாகிறது. கோயில் முற்றத்தில் 18 பாடசாலகள் கலந்து கொள்ளும் “நாளைய மலையகம்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் அமைச்சு திணைக்களங்களைச் சேர்ந்த இரண்டு கண்காட்சி கூடமும் அமைக்கப்படவுள்ளது.