மீண்டும் ஒரு பொருளாதார நிதி நெருக்கடி தலைதூக்காமலிருக்க ஆசிய நாடுகளின் இணைந்த செயற்பாடு கள் அவசியமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம தெரிவித்தார்.
உலகின் 70 சதவீத வெளிநாட்டு நாணய மாற்று ஒதுக்கத்தைக் கொண்டுள்ள ஆசியா 2030ம் ஆண்டளவில் அபிவி ருத்தியடைந்து உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்தை விஞ்சியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான இணைந்த செயற்பாடுகள் அவசியமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச பயங்கரவாதம் நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் ஒரு பொது அச்சுறுத்தலாகியுள்ளது. உலக நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய செயற்பாடுகள் அவசியம் என்பதையும் அமைச்சர் வலி யுறுத்தினார்.
ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைச்சரவை மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் போகொல்லாகம தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைப்பின் நாடுகள் உலகின் மூன்றில் இரண்டு மனித வளத்தைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களாகிய எரிபொருள், நிலக்கரி, வாயு, அலுமினியம், செம்பு மற்றும் சுரங்க தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளன. இது அங்கத்துவ நாடுகளின் பொருளாதார ஆற்றல் திறனை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இவை ஆசிய நாடுகளுக்கான சிறந்த பொருளாதார வாய்ப்பைத் தெளிவுபடுத்துகின்றன.
ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை தொடர்பாடல் போதாமை கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். பெளதிக, உள்ளக கட்டமைப்பு, இலத்திரனியல் தொலைத் தொடர்புத் துறைகளின் மேம்பாடுகள் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.
கடந்த நூற்றாண்டில் ஆசிய பிராந்தியம் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப் படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் பொருளாதார வளர்ச்சிபெற வேண்டுமெனில் விரிவானதும் மேம்பாடு மிக்கதுமான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கூட்டு வர்த்தக முயற்சிகளில் உச்ச அளவில் கரிசனை செலுத்துவது அவசியமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.