தீபத் திருநாளான இத்தீபாவளித் திருநாள் எமது நாட்டிலிருந்து பயங்கரவாத இருளைப் போக்கி சமாதான ஒளியேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேனென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையையும் வெற்றிகொள்வதைக் குறிப்பதாக அமைகிறது.
உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உண்மையான போராட்டத்தில் மானிடர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறித்து நிற்கின்றது. இந்தவகையில், இது மக்களின் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு கொண்டாட்டமாகவும் உள்ளது.
இன்று எமது மக்கள் இந்தீபத் திருநாளை அவர்களை மிக நீண்டகாலமாகப் பிரித்து வைத்திருந்த இன, மத, மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் மத்தியில் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் ஐக்கிய உணர்வுடன் கொண்டாட முடிந்துள்ளது.
இலங்கை வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி பொங்கும் இத்தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றனர். இந்து சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்களையும் கடந்த காலத்தோடு மறந்து தங்களது சொந்த வீடுகளில் அமைதி, அன்பு, சுபீட்சத்தோடு வாழமுடியுமானதொரு புதியதோர் யுகத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.