2009

2009

இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் – வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் – ரவிகருணாநாயக்கா எம்.பி.

igpalaththas.jpgபாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு நான் வெட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அதிகாரம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடக்கூடியது. இன்று உங்களிடம் இருக்கலாம். அது நாளை எம்மிடம் வரலாம்.

பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு. ஆனால், எம்மை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் போலவும் தேசத் துரோகிகளாகவும் காட்ட அரசு முயற்சிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை பாராட்டியே தனது முதல் உரையை ஆரம்பித்தார். இதுதான் அமெரிக்காவின் முதிர்ச்சி. நாம் அவர்களின் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டவில்லை.

அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகையை நிறுத்த வேண்டும் – தயாசிறி ஜயசேகர

srilanka-parlimant.jpgநாட்டின் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகை நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர  செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே ஜயசேகர எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; “2007 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்கள் பலருக்கும் வீட்டு வாடகையாக மாதாந்தம் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்ததுடன், இந்தக் கொடுப்பனவு இம் மாதம் தொடக்கம் மாதமொன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவாக குறைக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 68 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேதனம் அல்லது கொடுப்பனவை வழங்குவது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். அரசியலமைப்பின் பிரகராம் பொது மக்களின் நிதி அலுவல்கள் தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உரியது.

இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி, தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாலுமே, பாராளுமன்றத்தினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  எனவே, இந்த கொடுப்பனவுகளை இடைநிறுத்த அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ‘ என்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற இந்த பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க.வின் எட்வட் குணசேகர எம்.பி.யும், ஜே.வி.பி.யின் விஜித ரணவீர எம்.பி.யும் பேசியதை அடுத்து, இறுதியாக பதிலளித்து பேசிய போது, நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கையில்; “அமைச்சர்களுக்கு அரசினால் வீடுகள் வழங்கப்படுவது சம்பிரதாயம். இருப்பினும் அமைச்சர்கள் எவரும் பணம் கேட்கவில்லை. ஒரு இலட்சம் ரூபாவையும் கோரவில்லை. எனினும் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையொன்று உள்ளது. எனவே, அமைச்சர்கள் அரச வீடுகளை கேட்டார்களே தவிர, பணம் கோரவில்லை, வீட்டிலிருந்து வரும் போது ரஞ்சன் விஜேரட்ன ,த.மு.தஸாநாயக்க போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் படுகெலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்’ என்றார்.

கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில் வடக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களுக்கென ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்.

மனிதாபிமான அடிப்படையில் எமது கட்சி பல்வேறு சமூக உதவிகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உறவுகள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவையாக உள்ள உதவிகளை நாம் வழங்குவதற்கு எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர் வாரியம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் கிழக்கில் இருக்கின்ற யாராக இருந்தாலும் தங்களது உதவிகளை வடபகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேசசபை செயலாளர்களிடம் ஒப்படைத்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந் நிகழ்வில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் (ஜெயம்) மற்றும் பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படாமைக்கு ஜனாதிபதி காரணமல்ல – அமைச்சர் டியூ குணசேகர

dew.jpgஅரசிய லமைப்புச் சபை ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை ஜனாதிபதியின் தவறு அல்ல. இது பாராளுமன்றத்தின் இயலாமையே என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் குணசேகர இதனைத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின்படி முதலில் 2002 மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாவது சபை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 2005 மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய சபை நியமிக்கப்பட வேண்டியிருந்தும், அது நடைபெறவில்லை. இது ஜனாதிபதியின் தவறு அல்ல. பாராளுமன்றத்தின் பலவீனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பர் 19 ஆம் திகதிதான் பதவியேற்றார். அரசியலமைப்புச் சபை நெருக்கடி அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது.

அப்போது சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய 10 வது உறுப்பினரைத் தெரிவு செய்வதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளால் முடியவில்லை. இரண்டு வருடம் இழுபறிபட்டார்கள். இதற்கிடையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் காலம் நிறைவடைந்து பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றுக்குத் தலைவர்களை ஜனாதிபதி நியமித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? என்ற அமைச்சர் குணசேகர, “அரசியலமைப்புக்கு முரணான ஆணைக் குழுக்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.

இப்போதும் இந்தச் சபையின் அங்கீகாரத்தின்படி ஆணைக்குக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது!” என்று மேலும் தெரிவித்தார்.

திருமலை மட்டக்களப்புக்கு இடையே “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் ஆரம்பம்

lanka-map-02.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளையடுத்து இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14 பஸ்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றை ரயில் தண்டவாளப் பாதை மீது ஓடக் கூடியதாக அவற்றின் ரயர்களை மாற்றி இரும்புச் சக்கரங்களையும் மற்றும் ரயில் பெட்டிகளுக்குரிய உபகரணங்களையும் பொருத்தும் வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பஸ்களை ரயில் பெட்டிகளாக மாற்றியமைக்கும் செலவு அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. 14 பஸ்களும் ஏழு ரயில் பஸ் யூனிட்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டும் இரண்டு பஸ்கள், என்ஜின்கள் முன்,பின்புறம் வரக்கூடியதாக அமைக்கப்படுகின்றன. ஒரு யூனிட்டும்80 பயணிகள் இருந்தும் 100 பயணிகள் நின்றும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணிக்கென்று மூன்று சேவைகளில் மூன்று ரயில் பஸ் யூனிட்கள் ஈடுபடும். இவை நண்பகலுக்குப் பின்னர் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும். இதேபோன்று மூன்று “ரயில் பஸ்’ யூனிட்கள் திருகோணமலையிலிருந்து காலை 6, காலை 8, காலை 10 மணி ஆகிய நேரங்களில் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும். பிற்பகலில் இவை மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வெவ்வேறு நேரங்களில் திரும்பும். மூன்று யூனிட் ‘ரயில் பஸ்கள்’ மட்டக்களப்பில் தரித்து நிற்கும். இதேபோன்று மூன்று ரயில் பஸ் யூனிட்கள் திருமலையில் தரித்து நிற்கும் ஒரு “ரயில் பஸ்’ யூனிட் ரிசர்வாக இருக்கும். மட்டக்களப்பு திருகோணமலைக்கு இடையேயான 200 கிலோ மீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக ரயில் பஸ் சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பஸ்களை ரயில் பஸ்களாக மாற்ற 75 மில்லியன் ரூபா செலவாகும். இந்த பஸ்களுக்கு இறக்குமதித் தீர்வை அறவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் மலேஷியாவில்?

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக  தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவில் 35 ச.கி.மீ பிரதேசம் – துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு இராணுவம் அழைப்பு

safe-zone.jpgவிடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.

இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.

வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்

க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.