2009

2009

அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முத்துஹெட்டிகம நீக்கம்.

191009nisantha_muthuhetti.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த் முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.

இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தால் இவரை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் இடத்துக்குக் காலஞ்சென்ற அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் மகன் டாக்டர் ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் நடிகை அனார்கலியுடன் மோதல்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஏறாவூர் மாணவர் சுகவீன சம்பவம்: விசாரணைகளை துரிதப்படுத்தி அறிக்கை

ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை கோருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை ஏறாவூர் மாவட்ட வைத்திய சாலையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரின் அழைப்பின்பேரில் இங்கு நேடியாக வருகைதந்த முதலமைச்சர் சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச். எம். தாரிக், மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. சீ. எம். பbல், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் உட்பட பாடசாலை அதிபர் கே. காலிதீன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், வைத்தியசாலை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது விளக்கங்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு தலைமைவகித்த மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபையினரினால் இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆவண செய்யுமாறு கோரும் மகஜரொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போஷாக்கு மாத்திரைகளும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

இவற்றைப் பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் இது தொடர்பான தொடர் விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் அறிக்கை கோருவதாகவும், பாடசாலையை எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் பாட சாலையை சுமுகமான முறையில் வழமைபோன்று ஆரம்பிப்பது எனவும், மாணவர்கள், பெற்றோர் கள், மற்றும் ஊர்மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்ட நட வடிக்கை எடுப்பதெனவும் தீர்மானி க்கப்பட்டது.

கிண்ணியா – சீனக்குடாவை இணைக்கும் பாலம் நாளை ஜனாதிபதியால் திறப்பு

121009.jpgஇலங் கையின் மிக நீளமான கடல்மேல் பாலமாகக் கருதப்படும் கிண்ணியாவையும், சீனக்குடாவையும் இணைக்கும் பாலம் நாளை 20 ஆம் திகதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

495 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலம் சவூதிய அரேபிய அரசாங்கத்தின் 710 மில்லியன் ரூபா கடனுதவி மூலம் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்பாலம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கிண்ணியா பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்து பிரச்சினை இப்பாலம் திறக்கப்பட்டவுடன் தீர்த்து வைக்கப்படுகின்றது.

ஏ(எச்1 என்1) பீதி: லைசியம் சர்வதேச பாடசாலைகள் பூட்டு

பன்றிக்காய்ச்சல் என்கிற புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) நோய் காரணமாக லைசியம் சர்வதேசப் பாடசாலை அதன் நுகேகொடை மற்றும் வத்தளை கிளைப் பாடசாலைகளை உடனடியாக மூடியுள்ளது.

லைசியம் நுகேகொடை பாடசாலை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும், வத்தளை கிளைப் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையும் மூடப்பட்டுள்ளது.

கனடாவுக்குள் கப்பல் மூலம் பிரவேசிப்பதற்கு முயற்சித்த 76 இலங்கையர்கள் கைது

181009canada.jpgஇலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த “ஓசன் லேடி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார். எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வன்னி தேடுதலில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம்

வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

அக்கராயன் குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களில் 25 மிதி வெடிகள் மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. ரக குண்டொன்றும் 75 ரவைகளும் ரீ-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பகுதியில் நடத்திய தேடுதலில் 11 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தேடுதலை நடத்தியுள்ளன.

இதேவேளை திருகோணமலை மலையூற்று பகுதியில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

தெற்கு வசிர்ஸ்தானில் சண்டை தொடர்கிறது

181009taliban.jpgதெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.

சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.

இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சத்திர சிகிச்சை நிபுணர் மஹ்பூப் திடீர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எம். எம். மஹ்பூப் (52) நேற்றுக்காலை மாரடைப்பால் காலமானார்.

நேற்றுக்காலை 8 மணியளவில் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வேளை அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாணம்: புதிய அமைச்சர்கள் தெரிவு பூர்த்தி

11upfa.jpgதென் மாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார்.

இவர்கள் விரைவில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தென் மாகாண சபை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரே மீண்டும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறின.

வாகன விபத்துக்கள் – 24 மணி நேரத்தில் ஐவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கடவத்தை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். கடவத்தை 13 ஆவது மைக்கல் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினரின் டிபெண்டர் ரக, வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் போதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி இறந்துள்ளார்.

விபத்துக்குள்ளான டிபெண்டரின் மீது பின்னால் பயணித்த லொறியொன்றும் காரொன்றும் மோதியதில் ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை ஹெட்டன், நோட்டன், பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி, குடிபோதையில், வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதோடு சாரதியின் மனைவியும் மற்றொரு பெண்ணுமே இறந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை கட்டான பகுதியில் வைத்து டிரக்டர் ஒன்றில் மோதி 3 வயதுச் சிறுவர் ஒருவன் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

வீதியை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். களுத்துறை மக்கொனை பகுதியில் ஆட்டோ ஒன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்றது.

இதேவேளை களுத்துறை பகுதி கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்தவர் பயாகலை, மொரகொட பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.