2009

2009

சர்வகட்சிக்குழு இவ்வாரம் முக்கிய தீர்மானம்; ஐ.தே.கவுடன் பேசவும் முடிவு

Minister Tissa Vitharanaஇனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இவ்வாரம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இவ்வாரத்துடன் குழுவின் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் விதாரண, அதன் பின்னர் ஐ. தே. க. வின் கருத்தை அறிய, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறினார்.  சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெறவில்லை. எனவே, இந்த வார இறுதிக்குள் கூடி கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சு நடத்தப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச உள்ளதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற பொருத்தமான ஏற்பாடு வேண்டும்; உதவத்தயார் – டில்லி கொழும்புக்குத் தெரிவிப்பு

navy_rg.jpgஇலங்கையில் மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையூட்டுவதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கும் இந்திய அரசாங்கம் இதற்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியளிக்க வேண்டுமென்று சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விருப்பத்தைப் புலிகள் தெரிவித்திருப்பதாக செய்திகளில் நாம் பார்த்தோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையையும் அக்கறையுடைய ஏனையவர்களையும் இந்தியா கேட்டுக் கொள்கின்றது என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதை சர்வதேச நிறுவனங்களும் மேற்பார்வை செய்யும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு வலயங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறிய தொகையினர் கடல் மார்க்கமாக வெளியேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன் தரை, கடல்மார்க்கமாக அதிக எண்ணிக்கையானோரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை சாத்தியமானதாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புதுடில்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகவும் அத்துடன், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகளை வழங்கத் தயாரெனவும் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

sarath_f_jaffna.pngவிடுதலைப் புலிகள் தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தக் கூடுமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். படையினரின் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலை காரணமாகவே விடுதலைப்புலிகள் இந்தியாவை இலக்காகக் கொள்ளக் கூடுமென இந்திய தினசரி பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்மையில் கொழும்பு மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் முயற்சியின் போது விடுதலைப்புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, புலிகளின் வான் பலம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இந்திய இலக்குகளைத் தாக்கும் திறன் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் வழியில் நீண்டு இழுபட்டுக் கொண்டிராமல் தற்போது பொதுமக்களின் நிலைமைகள் பற்றி மட்டுமே பேசுவதால் விடுதலைப் புலிகளும் தென்னிந்தியாவிலுள்ள அவர்களது அனுதாபிகளும் ஆத்திரமடைந்துள்ளனர் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அவர்கள் (புலிகள்) இலங்கையின் வடக்கு, கிழக்கு முழுவதுமாக பறந்து வந்து கொழும்பிலுள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவிலும் இதையே செய்ய முடியும் என்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் 7 விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டுவிட்ட போதிலும் கூட அவர்களால் கொழும்பு மீது விமானத் தாக்குதல் நடத்த முடிந்தமையானது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் நம்பக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தாழப் பறக்கும் விமானத்தைக் கண்டறிவது கடினமென்பதுடன் அதற்கு இந்தியாவினுள் 150170 கிலோ மீற்றரை விட அதிகமான தூரம் சென்று இலகுவாகத் தாக்குதல்களை நடத்த முடியுமென்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இதேநேரம் அது தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கையாக இருந்தால் விமானத்துக்கு மேலும் நீண்ட தூரம் உள்ளே பயணிக்க முடிவதுடன் விமானம் திரும்பியும் வராது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களை மோதல்கள் நடைபெறும் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பதில்லையென குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவை இலக்கு வைப்பதால் விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் லெப். ஜெனரல் பொன்சேகா; ராஜீவ் காந்தியை (இந்திய முன்னாள் பிரதமர்) இந்திய மண்ணிலேயே படுகொலை செய்யுமளவிற்கு போதுமானளவு துணிச்சலோ அல்லது முட்டாள்த்தனமோ புலிகளுக்கு இருந்தது. அவர்கள் சமாதானத்தையோ அல்லது பேச்சுகளையோ நம்பவில்லை. தற்போது, அவர்கள் முல்லைத்தீவில் வெறும் சுமார் 35 சது கிலோமீற்றர் பரப்புடைய நிலப்பரப்பிற்குள்ளும் 20 சதுர கிலோமீற்றர் பரப்புடைய கடற்கரை பிரதேசத்திற்குள்ளும் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார்

Pranab_Mukherjeeஇலங்கையில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் இறுதி நேரத்தில் முகர்ஜீ அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜீக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈ.அஹமட் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

sampanthan.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணி நேரமாக  விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழப் போராட்டம் நிறைவடையாதென நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய்களை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை

navy_rg.jpgவவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் பொக்களிப்பான் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் ஐயப்பாடு தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; நிவாரணக் கிராமங்களில் தங்கி இருப்பவர்கள் எவராவது தொற்று நோய்க்கு உள்ளானால் அவர்களைத் தங்க வைக்கவென தனியான வார்ட்டு தொகுதியும் வவுனியாவில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆகவே, தொற்று நோய்கள் பரவுமென எவரும் அச்சப்படத் தேவையில்லை. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் மத்தியில் பொக்களிப்பான் தொற்று காணப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நோய்களின் பரவுகை வவுனியா நிவாரணக் கிராமங்களில் கிடையாது என்றார்.

சிவிலியன்களை விடுவிக்க சம்மதித்தால் உரிய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயார்

mahinda_samarasinghe.jpgசிவிலியன்களைத் தமது பிடியில் இருந்து விடுவிப்பதாக புலிகள் ஒரு தெளிவான அறிவிப்பைச் செய்வார்களாயின் அதற்காக அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயாரென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்கமும், சர்வதேச சமூகமும் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து புலிகள் ஒரு தெளிவான பதிலை அறிவித்தால், சிவிலியன்கள் எவ்வகையிலும் பாதிப்படையாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இருதரப்பும் மோதல்களை இடைநிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கைவிடுமாறும் அறிக்கையொன்றின் மூலம் இயக்கத்தைக் கோரியுள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரமசிங்க, ‘இந்தத் தருணத்திலாவது புலிகள் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புலிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் பிடித்த பிடியாய்த் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது படையினர் புதுக்குடியிருப்பை நெருங்கிவிட்டார்கள். அதனால், சிவிலியன்கள் இனி வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவிலியன்கள் வெளியேறினாலும் புலிகள் இயக்கத்தினரை எதிர்கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அவ்வாறான நிலைமையில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். நாம் மோதல்களை இடைநிறுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். புலிகள் அமைப்பு இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியுயோர்க்கில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அவர் :-

‘ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் மிகச் சிறப்பான ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் சிவிலியன்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கும் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறி விடுவிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மோதலை இடைநிறுத்த வேண்டும். இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மேலும் சிவிலியன் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் மிக அத்தியாவசியமானது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் பங்காற்ற வேண்டுமென்றும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோரை உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதி

red-cr.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை முகாமுக்கு வெளியே உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதிப்பதென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முகாமுக்கு வெளியே தமது உறவினர்களுடன் சுதந்திரமாக வசிப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்க முடியுமென்று வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எப் சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 31,504 பேர் உள்ளனர். இடம் பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தமது உறவினர்களின் உதவியின்றி தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு அவர்களது உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு அனுமதித்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுவித்துள்ளோம். இனங்காணப்பட்ட மேலும் 73 பேர் ஒரு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோரை தவறவிட்ட 4 சிறுவர்கள் மீண்டும் தமது உறவினரை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் தமது பெற்றோருடன் இணைந்துள்ளனர்.

இன்னும் சில சிறுவர்களின் பெற்றோரை தேடிவருகிறோம். இவ்வாறு உறவுகளை தவறவிட்டவர்களுக்கும் உதவும் வகையில் தேவையான தகவல்களை வழங்கவென நேரடித் தகவல் தொடர்பாடல் வசதியொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணிய தேவையில்லை – பிரதமர்

pm-srianka.jpgஇலங்கை இறைமையும் சுயாதிபத்தியமும் கொண்ட தனித்துவமான நாடு. எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் தலையிட இடமளிக்க முடியாதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.  சர்வதேச நாடுகள் சில யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் கொடுத்து வருகின்றன. இலங்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெற்று நீண்டகாலங்களாயிற்று.  தற்போது இந்நாடு ஜனநாயகம், கெளரவமிக்க சுதந்திரமான நாடு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசொன்றைக் கொண்ட நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை யெனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஹொரணை மக்கள் இராணுவத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் முக்கிய நிகழ்வொன்று நேற்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் நாம் ஏணியின் இறுதிப்படியில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது.  யுத்த நிறுத்தம் பற்றி பேசப்படுகிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அதுபற்றி யோசிக்க முடியும். ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்த நிறுத்தம் என்பது முடியாதது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் உறங்க முடியாது. இதனை நான் பிரதமராகப் பதவியேற்று முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன். இன்றைய அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்கத்துக்கும் இது பொருந்தும். பால் பொங்கி வரும்போது அதில் சாணத்தை இடுவது போன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் இறுதித் தருணத்தில் சிலர் யுத்த நிறுத்தம் பற்றி அழுத்தம் கொடுக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவாமல் அதற்கு ஆசீர்வாதம் வழங்க முற்படுபவர்கள் தேசத் துரோகிகாளவர்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதில் பெருமளவு புலிகள் பலியாவதைப் போன்றே இராணுவத்தினரும் பலியாகின்றனர். அதனை எவரும் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்குக்கான அர்ப்பணிப்பே இது. இந்த வகையில் நாம் படையினருக்கு தற்போது செய்வது போதாது. அவர்களுக்கு முழுமையாக உதவவும் ஆதரவு வழங்கவும் நாம் தயாராக வேண்டும். அவர்களைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமக்குள்ளது இலங்கை மட்டுமே. எமக்கு வேறு நாடு கிடையாது. நாம் வேறு எந்த நாட்டுக்குப் போவது? அதனால் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதனைப் படையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும்போது படையினரை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காக எம்மை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.  அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதுடன் ஒழுக்கம், பண்பாடு, தொழில்வாய்ப்புகள் நிறைந்த நாடாகவும் இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவப் பதவி நிலை உயரதிகாரி மேஜர் ஜெனரல் என். விஜேசிங்க உட்பட உயரதிகாரிகள் பலரும், ஹொரணை இங்கிரிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர். காயப்படுத்துகின்றனர்.’ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு : த ஜெயபாலன்

Frances HarrisonCharu Lata Hogg‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka – a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பிபிசி சிங்கள சேவைப் பணிப்பாளர் பிரியத் லியனகே இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவ்வுரையாடலில் இலங்கையில் பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய பிரான்ஸஸ் ஹரிசன், தமிழ் ஊடகவியலாளர் பேர்ள் தேவநாயகம், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடம்கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது உரையில் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை விளக்கியதுடன் இலங்கை அரசு மனித உரிமைகளையும் ஊடகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதைச் சுட்டிக்காட்டினர்.

ரிச்சட்டி சொய்சாவின் படுகொலை முதல் இதுவரை 37 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பேர்ள் தேவநாயகம், அண்மைய காலங்களில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரளவு பயமற்ற சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். இன்றைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடைப் பிடிக்கும் போக்கு இலங்கையர்கள் மனிதர்களுக்கு குறைவானவர்கள் என்ற எண்ணத்தில் இயங்குவது போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் தான் கலந்துகொண்டதன் ஊடகப்பின்னணியைக் கூறி ஆர் ஜெயதேவன் தன்னுரையை ஆரம்பித்தார். எல்ரிரியும் இலங்கை அரசும் மனித உரிமைகளை மீறுகின்றன என்றும் ஆனால் இலங்கை அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயறபடுவது அவசியம் என ஆர் ஜெயதேவன் தெரிவித்தார். இலங்கை அரசு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை வைத்து பொறுப்புடன் செயற்படாத வரை புலிகளும் இருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆர் ஜெயதேவன் இலங்கை விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.

நிர்மலராஜனின் படுகொலையைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸஸ் ஹரிசன் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனது அனுபவத்தினூடாகப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் எண்ணை வளம் இல்லை, அணுகுண்டுகள் இல்லை, இலங்கைக்கு பிராந்திய முக்கியத்துவமும் இல்லாததால் இலங்கைப் பிரச்சினை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் பிரான்ஸஸ் ஹரிசன் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகவியலாளராக ஆசியாவில் கடமையாற்றிய சாரு லட்டா ஹொக் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அரசுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கும் பொறுப்புடையவராக இருந்தவர். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளராக உள்ளார். இவருடைய உரையின் அடிப்படையே கேள்வி நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களை வன்னிக்குள் அனுமதிக்காதது, அங்கு நிலவும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட சாரு ஹொக், அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரச கட்டப்பாட்டுப் பகுதிக்குள் வருவோரைத் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த யுத்தத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 2000 பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பிய அர்சுனன் எதிர்வீரசிங்கம் பொஸ்னியா, சூடான் ஆகியவற்றின் உதாரணங்களைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ‘ஏன்? இனப்படுகொலை என்று குறிப்பிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வு ஏற்பாடானது முதலே புரொன்ட் லைன் கழகம், பிபிசி, மனித உரிமைகள் கண்காணிகப்பு அமைப்பு ஆகியன இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூற மறுப்பதாக எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. அதன் தொடர்ச்சி புரொன்ட்லை ஏற்பாடு செய்த நிகழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

அர்ச்சுனன் எதிர்விரசிங்கத்துக்குப் பதிலளித்த சாரு ஹொக் ”நான் 2000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டது இலங்கை இராணுவத்தினால் மட்டும் ஏற்பட்டது அல்ல. எல்ரிரிஈ யும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். காயப்படுத்தி உள்ளனர். இந்நிலைக்கு இரு தரப்புமே காரணம். ஆகையால் இதனை ஒரு இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது” எனத் தெரிவித்தார். சாரு ஹொக்கின் இந்தப் பதில் அங்கு வந்திருந்த எல்ரிரிஈ ஆதரவு அமைப்பினருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாரு ஹொக், ”100 000 பேர் வந்து சொன்னால் எதுவும் உண்மையாகிவிடாது. அதற்கு ஆதாரங்கள் வேண்டும். சர்வதேச விதிமுறைகள் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பு யுத்தத்தில் காயப்பட்டு வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அந்த அறிக்கையைப் (War on the Displaced – Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni : http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0209web_0.pdf ) படியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ, பிரிஎப், ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட், ரிவைஓ, தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது. அந்நிகழ்வின் ஓரிடத்தில் பிரான்ஸஸ் ஹரிசன் தனக்கு வந்த மிரட்டல்கள் அவமதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். தன்னை றோ ஏஜென்ட் என்றவர்கள் பலதையும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இடையிடையே இந்நிகழ்வை மீண்டும் பொது விவாதத்திற்கு பிரியத் லியனகே கொண்டு வந்த பொழுது ஏனைய சில கேள்விகளும் எழுப்பப்பட்டது. ‘இந்த யுத்தம் எல்ரிரிஈ இன் முடிவா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸஸ் ஹரிசன், ‘எல்ரிரிஈ நிலங்களை இழந்துள்ளார்கள். மிகக் குறுகிய நிலப்பரப்பிலேயே உள்ளனர். ஆனால் ஒரு உறுதியான இராணுவமாகச் செயற்பட்ட அவர்களுடைய கனரக ஆயுதங்கள் எதனையும் இலங்கை இராணுவம் கைப்பற்றவில்லை. அவர்களிடம் அதி விசேட கடற்படைக் கலங்களும் இருந்தது. அவையும் கைப்பற்றப்படவில்லை. புலிகளை அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது அவர்கள் வேறு வடிவத்தில் வெளிப்படுவார்கள்’ என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்டார்.

இதே கருத்தை வெளியிட்ட பிரியத் லியனகே அரசாங்கம் ஓடு பாதைகளைக் கைப்பற்றியதாகக் கூறிய பின்னரும் வான் புலிகள் கொழும்பிற்கு வந்துள்ளனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனுடன் பேசிய போது அவர்கள் வழமைபோல் முழுமையான மறுப்பையே வழங்குவதாகக் கூறி உண்மை நிலையைக் கணிப்பது கடினமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவற்றைவிடவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இரு மணி நேரம்வரை நிகழ்வு நீடித்தது.