2009

2009

இடிமின்னலுடன் பலத்த காற்று வீசும்; நிக்கவெரட்டியவில் 10 வீடுகள் சேதம்

climate.jpgநீரேந்து பகுதிகள் உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடியும் கடும் காற்று வீசும் எனவும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

கடும் காற்று வீசியதன் காரணமாக நிக்கவெரட்டிய பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டு கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வரட்சியான காலநிலை காணப்பட்டதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளில் போதியளவு மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடும் காற்று வீசும் அபாயம் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இணையத்தளங்கள், பத்திரிகைகளை அழித்தொழித்துவிடும் சாத்தியம்

computer.jpgபத்திரிகை கள் இணையத்தளத்தில் தமது பதிப்புகளை வெளியிடும் நிலைமைக்கு தம்மை மாற்றிக்கொள்ளாவிடின் நாளடைவில் அழிந்தொழிந்துவிடும் சாத்தியமுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியரான அலன் நையிற்றால் நடத்தப்பட்ட இணையத்தளமூடான ஆய்வொன்றின் பிரகாரம் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக பேராசிரியர் அலன் நைற் தெரிவிக்கையில்; இருநூறுக்கும் மேற்பட்ட முதலாண்டு ஊடகவியல் மாணவர்கள் சர்வதேச ரீதியிலான இந்த இணையத்தள ஆய்வில் செய்தித்தாள் வாசிப்பது தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த இளம் ஊடகவியலாளர்கள் 21 வயதிற்கு குறைவானவர்களாக இருப்பதுடன் அவர்களில் 90 வீதமானோர் பத்திரிகை வாசிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களாவதற்கு விரும்புகின்றனர். அத்தொகையில் 60 வீதமானவர்கள் வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது அதற்குக் குறைவாகவோ பத்திரிகை வாசிக்கின்றனர்.

ஆனாலும் 95 வீதமானவர்கள் செய்திகள் தொடர்பில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வர்த்தகத் தொலைக்காட்சிச் சேவைகளின் செய்திகளே மூலமாக உள்ளதுடன் 50 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் தொலைக்காட்சிச் செய்தியை பார்க்கின்றனர்.  தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு அடுத்தபடியாக இணையத்தளங்களூடான செய்தியினை இம்மாணவர்கள் விரும்பிப்பார்க்கின்றதுடன் கூகுள் (Google) நைன்ஸ்மென் (Ninesmen) பேஸ்புக் (Face book) விக்கி பீடியா (wikipedia) ஆகிய தளங்கள் பிரபலமானவையாகவும் உள்ளன.

computer.jpgஇதன் மூலம் ஊடகவியல் கற்கைநெறியைப் பயிலும் மாணவர்கள் கூட பத்திரிகைகளை வாசிப்பதில்லைபென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, இணையத்தளங்களில் பிரசுரிப்பதற்கான விளம்பர வருமானங்களின் இழப்பு ஆகியவற்றால் பத்திரிகைக்குள்ள அச்சுறுத்தலைவிட இவ்விடயம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்களே எதிர்காலத்தில் பத்திரிகைகளை வாசிக்காவிடில் பத்திரிகைகளை வாசிப்பது யாரென அலன் நைற் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளவத்தையில் ஆசிரியை வெள்ளை வானில் கடத்தல்

white-van.jpg
வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் வைத்து தமிழ் ஆசிரியை ஒருவர் நேற்று (மார். 10) மாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸிலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறையிட்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் தம்மிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேற்று  மாலை 4.30 மணியளவில வெள்ளவத்தை  பஸல்ஸ் ஒழுங்கையில் தனது வீட்டுக்கு முன்பாக பெண்ணொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்தோர் அவரை பலாத்காரமாக ஏற்றிச் சென்றனர். ராஜகிரியவிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே கடத்தப்பட்டவரென மனோ கணேசன்  தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை

tamil_nadu.jpgதமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

-வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
 
-ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 
-மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும்.
 
-தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
 
-இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
 
-அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.

தரைவழிப் போக்குவரத்து ஆரம்பித்ததால் யாழ்.குடாவில் பொருட்கள் விலை வீழ்ச்சி

lorries.jpgயாழ்ப்பாண குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையூடாக அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதையடுத்து குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் குறைவடையத் தொடங்கியுள்ளன. அத்துடன், தட்டுப்பாடு ஏற்பட்டுவந்த பொருட்களும் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து குடாநாட்டுக்கு கப்பல் மூலம் இதுவரை சகல பொருட்களும் எடுத்துவரப்பட்டன. இதனால், அதிகளவு விலை கொடுத்து மக்கள் பொருட்களை வாங்கிவந்தனர்.

அத்துடன், கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் பொருட்கள் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்தே விற்கப்படுகின்றன. கப்பல்கள் மூலம் பொருட்களை கொண்டுவரும்போது கொழும்பில் கடைகளில் இருந்து லொறிகளுக்கு ஏற்றப்பட்டு பின்னர் துறைமுகத்தில் இறக்கப்பட்டு மீண்டும் கப்பலில் ஏற்றப்படுகின்றன.

குடாநாட்டில் பருத்தித்துறை அல்லது காங்கேசன்துறைமுகத்தில் இறக்கி லொறிகளில் ஏற்றப்பட்டு பின்னர் கடைகளில் இறக்கப்படுகின்றன. இதனால், ஏற்றி இறக்கும் கூலிகள், கப்பல் கட்டணம் என்பவற்றுடன் இலாபத்தையும் சேர்த்து வர்த்தகர்கள் பொதுமக்களிடம் அறவிடவேண்டியிருந்தது.

இதுவே, குடாநாட்டில் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணமாகும் என யாழ்.செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, குடாநாட்டில் தடைப்பட்டுள்ள நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தரைப்பாதையூடாக சிமெந்தை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் வீஜேசேகரவின் உடல்நிலை குறித்து எதுவும் கூற முடியாது : தேசிய வைத்தியசாலை பணிப்பாளர்

mahinda-wijayaratna.jpgஅக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டுள்ள போதிலும், அவரது உடல் நிலை குறித்த சரியான தகவலை வெளியிட முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

அமைச்சரது தலையின் இடது பக்கத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, அமைச்சர் மஹிந்த விஜேசேகரவைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குத் திடீரென விஜயம் செய்திருந்தர். அமைச்சரின் உடல் நிலைமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் பாராட்டினார்கள் என்று ஜெயலலிதா சொல்லிக் கொள்ளவில்லை. – கருணாநிதி அறிக்கை

jayalalitha.jpg இலங்கை பிரச்சனைக்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.  உண்ணாவிரதம் முடிந்ததும் ஜெயலலிதா ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்தியஅரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது’ என்று தெரிவித்தார்.இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை  வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டிலிருந்து தூங்கி விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009 ஆம் ஆண்டிலேதானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.
 
karunanithi.jpgஅது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

இதற்கு முன்பே இலங்கைப் பிரச்சினைக்காக மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு ஒரு முறை வந்ததும், அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைப் பார்த்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து,

அவர் இலங்கை செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தமிழகச் சட்டபேரவையில் இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் நானே ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றதும், அதன் பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும்-எல்லாமே எப்படி நடந்தது?

அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா? மேலும் ஜெயலலிதா அவரது அறிக்கையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக-மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
 
மத்திய அரசுதான் நேற்றைய தினம் மருந்து பொருட்களை அனுப்பியது. தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்த நாட்களில் – 2008-ம் ஆண்டு நவம்பர் திங்களிலேயே முதல் கட்டமாக 2000 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணி யும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய நிவாரணப் பொருட்கள் சுமார் 80 ஆயிரம் குடும்பங் களுக்கு வழங்குவதற்காக தனித்தனியே சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டதே, அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? இவர் மார்ச் 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?
 
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமே செய்யாமல் இருந்தபோது தான் 22-2-2009 அன்று பிரதமருக்கு நான் அவசரக் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனைவரும் உடனடியாக மறுவாழ்வு உதவிகள் செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது இலங்கைக்கு உடனடியாக மத்திய அரசு மருத்துவ உதவிகளை அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
மத்திய அரசு எடுக்கும் இவ்வகை நடவடிக்கைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிடவும், அனுபவ மிக்க மருத்துவர்களையும் தேவையான மருந்து பொருட் களையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறது என்று எழுதியுள்ளேன். அது ஏடுகளிலும் வந்துள்ளது.
 
இன்னும் சொல்லப்போனால் இந்த 2000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு, கப்பலிலே செல்லக் காத்திருந்த நேரத்தில் நானே நேரில் சென்று இவைகளையெல்லாம் பார்த்தேன்.

அப்போது செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அலுவலர் தாமஸ்ரீஸ் என்பவரும், மத்திய அரசின் வெளி உறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டேவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் உடன் இருந்தார்கள்.

அந்த நிவாரணப் பொருட்களை நேரில் பார்த்த தாமஸ் ரீஸ், அந்தப் பொருட்கள் எல்லாம் நல்ல தரமுடன் உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து, அந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது.
 
இந்த நிவாரணப் பொருட்கள் 100 கண்டெய்னர்களில் சுங்க அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் ஏற்றப்பட்டு 13.11.2008 அன்று இரவு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, 15.11.2008 அன்று காலை 7 மணி அளவில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.

அந்தப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததோடு மாத்திரமல்லாமல், அவைகள் முறையாகவும், ஒழுங்காகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங் கையிலே உள்ள இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை யெல்லாம் செய்து – அந்தப் பொருட்கள் முறையாக விநி யோகிக்கப்படுவதாகவும், தமிழர்கள் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தபோது ஜெயலலிதா எந்த உலகத்திலே இருந்தார்?

யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதத்தில், இந்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தது. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்கள் அதில் இருந்தன. சயைலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

தமிழக மக்களிடமிருந்து போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் வந்த இந்த நன்கொடை பொருள்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்ட துணிகளைக் கொண்ட லாரிகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்ததை நானே நேரில் கண்டேன். கடைகளின் மூலமாக வாங்குவதற்கு வசதியற்ற நிலையிலே உள்ள மக்களுக்கு இவை அனைத்தும் மிகவும் தேவையானவையாகும் என்று தெரிவித்து நாளேடுகளில் வந்ததை ஜெயலலிதா எப்போதும் போல படிக்கவில்லையா?
 
இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதி கலங்கி ஆடிப்போயிருப்பதையே அவருடைய அறிக்கை உணர்த்துகிறது. -ஜெயலலிதா

ஆம். கதி கலங்கித்தான் போய் விட்டேன். உலக அளவில் வரவேற்போம். முதலில் இப்படித்தான் உலகஅளவில் தனக்கு விருது கொடுப்பதாக ஒரு புரளியைக் கிளப்பினார். நல்ல வேளை, ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும், விடு தலைப்புலிகள் பற்றி ஜெயலலிதாவிற்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணா விரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதிகலங்கி விட்டேனாம். என் செய்வது? “கதாநாயகி நடிகை”காமெடி நடிகையாக ஆகிவிட்டார். கஷ்டகாலம்.
 
உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்தப் பணத்திற்கும் வரைவோலை எடுக்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும். -ஜெயலலிதா அறிக்கை.
 
அமெரிக்காவிலிருந்து யாரோ வரைவோலை அனுப்பினார்கள் என்றும், யார் அனுப்பியது என்றே தனக்கு தெரியாது என்றும், இருந்தாலும் அதனை தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டதாகவும் உலகத்திற்கு சொன்ன யோக்கிய சிகாமணி அல்லவா ஜெயலலிதா- தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக்கூட தெரிந்து கொள்ளாமல், இவர் அறிக்கை விடுத்து உண்டியல் வசூல் செய்துள்ளார்.

எப்படியோ போகட்டும். நாம் அரசின் சார்பாக தொகையாக கூட அல்ல, வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறைதானா என்றுதான் நாம்  கேட்டிருந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

முத்துக்குமார் மரணம் உள்ளத்தை வலிக்க செய்தது!: கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgமருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்

ஓமந்தையில் நேற்று பொலிஸ் நிலையம் திறப்பு

sri-lanka-police.jpgவவுனியா ஓமந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை புதிதாகப் பொலிஸ் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது. வன்னிக்கான இராணுவச் சோதனை நிலையமாக ஓமந்தை முன்னர் விளங்கிய நிலையில் தற்போது அங்கு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இந்தப் பொலிஸ் நிலையத்தைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ் நிலையங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏ9 வீதியில் ஓமந்தை முதல் முகமாலை வரையும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக 49 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர் -மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா

hisbullah.jpgகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஒலுவில் மஹாபொல நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வெலைத்திட்டம் பற்றி அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; இந்த நாட்டிலுள்ள எந்தவொரு மாகாண சபையிலும் இல்லாத பெரும் சாதனையொன்று இம் மாகாணத்தில் நிகழ்ந்து வருகின்றது. மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களினதும் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்காக ஒரே கருத்தில் செயலாற்றி வருகின்றோம்.

கடந்த 20 வருடத்திற்கும் மேலாக யுத்த மேகம் சூழ்ந்திருந்த இந்த மாகாணத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க வாய்ப்பளித்த எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் நடந்த யுத்த சூழ்நிலைகாரணமாக 49000 விதவைகள் உள்ளனர் இதில் யுத்தம் காரணமாக 24,000 பேர் கணவனை இழந்துள்ளனர். இவற்றுள் 19,000 பேர் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள், 12,000 பேர் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதை பற்றியும் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண சபை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் அரிசி உற்பத்தியில் மிகவும் முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கு மாகாணம் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகாரணமாக அரிசி உற்பத்தியில் 12 வீதத்தையே பூர்த்தி செய்கிறது.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் பல ஆண்டு காலமாக பயிர் செய்யப்படாத நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுவதற்காக மானிய அடிப்படையில் உரம், வயலை உழுவதற்கு ஏக்கருக்கு 2000 ரூபா நன்கொடை, இலவச விதை நெல், என்பனவற்றை வழங்கியதன் மூலம் கடந்த ஆறுமாதங்களில் ஒரு இலட்சத்து முப்பத் தோராயிரம் ஏக்கர் நிலம் மேலதிகமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டதனால் 30 வீத நெல் உற்பத்தியை கண்டுள்ளது.

இது கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த வெற்றிகளுள் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.