2009

2009

நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்

omakuchi.jpgநகைச் சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று.

தமிழ் திரையுலகில் ஔவையார் படத்தின் மூலம்  பதிமூன்றாவது வயதில் அறிமுகமான இவர் எழுபத்து மூன்று வயதுவரை தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்கவைத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சூரியன்,முதல்வன் என சில படங்களில் தலைகாட்டிய இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி

batticaloa.jpgகிழக்கு மாகாணத்தின் வீதிகளை அபி விருத்தி செய்வதன் பொருட்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத் திற்கென 500 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கென 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக கிழக்கு மாகாண வீதி, கிராமிய மின்சாரம், வீடமைப்பு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல்வேறு குளங்களை புனரமைப்புச் செய்வதற் காகவும் 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் முரளிதரனின் அலுவலகம் மீது தாக்குதல் : நால்வர் பலி

karuna.jpgஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

‘புலிகளை அரசியல் ரீதியிலும் தோற்கடித்து. புதிய தமிழ்த் தலைமையை உருவாக்க வேண்டும்’

deu-guna.jpgபுலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததும் தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமையொன்றைக் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், மீண்டும் தலையெடுப்பார்களென்றும் எனவே அவர்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான அரசியலமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு இன்று ஒழுங்கான அரசியல் தலைமைத்துவம் இல்லை. அனைவரையும் புலிகள் கொன்றொழித்து விட்டார்கள். புதியவர்கள் உருவாகவும் இல்லை. எஞ்சியுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். புலிகள் சார்பு அல்லாத அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும். புலிகளின் கோரிக்கைகளையன்றித் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் மக்களை நாம் வெல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது”, என்று தெரிவித்த அமைச்சர் குணசேகர, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்க முடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து விலகியிருக்கும் அரசியல் கட்சிகள் அதில் இணைந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் குணசேகர, இந்தத் தருணத்திலாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் பாதையில் பயணிக்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

புதுமாத்தளனில் புயல் காற்றால் பெரும் சேதம் : இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு

flod-wanni.jpgமுல்லைத் தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 9, 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவர்கள் போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன், தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தமது அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார். 

யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் : ஷிவ்சங்கர் மேனன்

shiv-sankar-menon.jpgஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இன முறுகலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் யதார்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

உக்கிர யுத்தம் நடைபெற்று வரும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. சிறுபான்மை தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது முதன்மையானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்கம் சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இலங்கை விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்ததாக ஷிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்ஷுக்கு காலணி வீசிய செய்தியாளருக்கு மூன்று வருட சிறை

120309.jpgஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது. .

வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள். அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்கிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்

eu.jpg இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது..

அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் பயமுறுத்திவருவதாக கண்டனம் செய்துள்ளது.

நிவாரண நிறுவனங்களும், ஊடகத்தினரும் போர் பகுதிக்கும், முகாம்களுக்கும் தங்குதடையின்றி சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டிருக்கிறது

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினரின் கட்டுப்பாட்டில்

puthu-hos.jpgபுலிகளின் பிடியிலிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நேற்றுக் காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிய பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேணல் ரவிப்பிரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அரசாங்க வைத்தியசாலையை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டமை வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் இருந்த உபகரணங்களையும் புலிகள் வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்திலும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 37 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடிவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை இந்த வைத்தியசாலையிலிருந்த கட்டில்களிலிருந்து அகற்றி காயமடைந்த புலிகளை அங்கு வைத்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலையை புலிகள் பயன்படுத்தி வந்தனர். புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த படியால் அந்த வைத்தியசாலையை இராணுவத்தினர் கைப்பற்றாமல் இருப்பதற்காக படையினரை இலக்கு வைத்து இங்கிருந்து கடுமையான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இராணுவத்தினர் தாக்கியதாக புலிகளும், அவர்களுடன் தொடர்புடைய சில அமைப்புகள் சர்வதேச கவனத்தை திசை திரும்பும் வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களாக தாக்குதல் நடத்திய படையினர் வைத்தியசாலைக்கு எதுவித பாரிய சேதம் ஏற்படாத வண்ணமே கைப்பற்றியுள்ளனர் என்று இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வடக்கு பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றர் பரப்பை நோக்கி முன்னேறிய 58வது படைப்பிரிவினர் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு மதில்களையும் தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக படையினர் நடத்திவந்த கடுமையான தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

puthu-hos.jpg

ஐ.தே.க, த.தே.கூ, ஜேவியி சர்வகட்சிக்குழுவில் இணையத்தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும் – திஸ்ஸவிதாரண

this_vitharana_.jpgசர்வ கட்சிக்குழுவின் அழைப்பையேற்று ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி, த.தே.கூ ஆகியன தமது தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கவேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் ஏற்கனவே குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளிக்கும் என சர்வ கட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிக்குழுவின் தற்போதய செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிக்குழு தீர்வுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு இதுவரையில் 107 தடைவைகள் கூடி ஆராய்ந்துள்ளன. இதில் 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது தீர்வுத்திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு வெளியிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றோம். அவை தம்மை இதில் இணைத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.