இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இன முறுகலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் யதார்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
உக்கிர யுத்தம் நடைபெற்று வரும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. சிறுபான்மை தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது முதன்மையானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு அரசாங்கம் சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இலங்கை விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்ததாக ஷிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.