இது என்னடா தலையங்கம் வித்தியாசமாய் இருக்குதென்று யோசிக்காதையுங்கோ. புலம்பெயர் மக்களிடம் வட்டுக்கோட்டையிலும் பார்க்க முள்ளிவாய்க்காலிலும் பார்க்க இதுதான் பொப்பியூலர். விடயத்திற்கு வருவம்.
பிரபாகரனோடை முடிந்தது இராணுவ மாயை மட்டும்தான். அரசியல் இன்னும் சாகவில்லை. ஆனால் அவர்கள் சிங்கள முற்போக்கு சக்திகளைப் பிரித்தார்கள், இந்தியாவைப் பிரித்தார்கள், உலக நாடுகளைப் பிரித்தார்கள் எம் மக்களிடமிருந்து. இதிலிருந்து தமிழ் சமூகத்தை விடுவிக்க வேண்டுமாயின் முதலில் அறிவு ஜீவிகள் தொடக்கம் பத்திரிகைகள் வானொலிகள் ரிவீக்கள் இன்ரநெற்றுகள் வரை உண்மையை பேசுவோம். உண்மையை எழுதுவோம். மனித உரிமைகளை மதிப்போம். சகிப்புத் தன்மையை வளர்ப்போம். அரசியல் நாகரீகத்தை வளர்ப்போம். விமர்சனங்களை செய்வோம். ஆக்கபூர்வமாக தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கி இல்லாமல் எதைப்பற்றியும் கதைப்போம். யாருடனும் கதைப்போம். இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்தது. இதனை வீணடிக்காமல் பயன்படுத்துவோம்.
நிமிர்ந்து வாழ்ந்த சமுதாயம் பிச்சைக்கார நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு உடனடித்தேவை பசித்த வயிற்றுக்கு உணவு, இருக்க இடம், வேலை, பிள்ளைகளின் கல்வி இதை புலம்பெயர் தமிழர்கள் உணருவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்கும் நீண்ட இடைவெளி கொண்டதான உறவு உண்டாகியுள்ளது. யதார்த்தத்தை புரியாமல் தேவையற்ற ஒன்றுகூடல், மறியல்ப் போராட்டம், கவனயீர்ப்புப் போராட்டம், வட்டுக்கோட்டைத் தேர்தல் இவற்றால் அம்மக்களுக்கு என்னத்தைச் செய்யப் போகிறோம்.
முகாமில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்தான் அதில் யாவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் உண்மையில் பல மக்களுக்க போக இடமில்லை. வேலை இல்லை பணம் இல்லை, அவர்கள் எங்கே போவார்கள். எப்படிச் சாப்பிடுவார்கள். அங்குள்ள சிலருடன் கதைக்கையில் முகாமில் உணவும் தங்க இடமாவது கிடைக்குதே என்ற நிலையில் இருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதல்ல உண்மைநிலை. எப்படித் தீர்ப்பது என்பதுதான் உணரப்பட வேண்டியது.
மகிந்தா மீது நாம் தற்சமயம் நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டியது அவசியம். இதுவரை யாருமே செய்யாத அதிரடி மாற்றங்கள் புலிகளில் இருந்து பாதாளக் கோஷ்டிவரை அடக்குகிறார்தான். முன்பிருந்த தலைவர்களுடன் ஒப்பிட்டால் இது சாதனைதான். ஓத்துக் கொள்ளத்தான் வேணும். அரசியல் தீர்வுகள் வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கினம். அப்படி இல்லையாயின் உலகின் சந்தேகப் பார்வை அரசின் மீது விழும். இதனை மழுங்கடிக்காமல் அவர்கள் கையில் பந்தைக் கொடுப்போம். அதை விட்டுவிட்டு ஈழநாடு பாலச்சந்திரனும் ஜிரிவியும் லங்காசிறீயும் ஜபிசியும் தங்களையே விக்கிற மாதிரி கட்டுரையும் செய்தியும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆரம்ப காலங்களில் பாலச்சந்திரன் நாட்டுப் பற்றுள்ளவர்தான். இயக்க பேரணிகளுக்கு உதவி செய்தவர்தான். ஆனால் இப்ப சீமானை மிஞ்சி கட்டுரை எழுதி தன்னையே விற்கக் கூடாது. ஜெகனும் தான் படித்த நல்ல கல்லூரியை நாறடிக்காமல் நடந்தால் நல்லது.
எல்லாவற்றையும் மீறி தமிழக சஞ்சிகைகள் (உதாரணமாக ஆனந்தவிகடன்) பத்திரிகை விற்பதற்காக பிரபாகரன் போய் இப்ப பொட்டு வாறாராம் மாவீரர் உரைக்கு. இதற்கு பேட்டி வேற. பொட்டருக்கு ஏன் பொட்டு பெயர் வந்ததென்றே தெரியாத இவர்கள் அடேல் புத்தகத்தை சாட்சிக்கு வைத்து கதை விடுகிறார்கள். பழைய கூட்டணிகாரருக்கு கையை வெட்டி இரத்தப் பொட்டு வைத்ததால்தான் அவருக்கு பொட்டு பெயர்.
இதைவிட வேடிக்கை வடபகுதி பத்திரிகையாளர்கள் யு என் பி கூட்டணி கூட்டாக முடிவெடுக்க இருக்கினமாம். இதில் உதயன் பத்திரிகை இந்தியாவையும் கருணாநிதியையும் தாழ்த்தி எழுதி எதைச் சாதிக்கப் போகிறார்கள். இவர்களால் 100 கோடி ரூபாய் கொடுக்க முடியுமா திரும்பத் திரும்ப ஏனைய்யா இடைவெளியைக் கூட்டிறியள். பார்ப்பதற்கு செய்தியா இல்லை. இலங்கையில் R K Hottelல் வடிவேலு வடை சுட்டார் என்று எழுதுகிற உதயன் ஏதும் ஆரோக்கியமாய் எழுதலாமே. கருத்து அறிவுப் பஞ்ஞமென்றால் நீங்கள் தேனீயிலிருந்து தேசம்வரை போய்ப் பாருங்களேன்.
எல்லோரையும் அரவணைப்பது என்பதை விட்டுவிட்டு விஜய் ராகுலோட கதைத்தா குற்றம் சூர்யா சிங்களப் படத்தில் நடித்தா குற்றம். (ஆனால் ஆங்கிலப் படம் நடிக்கலாம்.) அவர்கள் எல்லாம் எங்கள்பால் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த சீமான் நெடுமாறன் வைகோவிலும் பார்க்க. இந்த மூன்று பேரும் இந்தியாவில் ஒரு பிரச்சினைகளும் இல்லாத மாதிரியும் சேரியில் சனங்கள் சந்தோசமாக வாழ்கின்ற மாதிரியும் ஏனய்யா எங்களிட்டை வந்து எங்கடை பிரச்சினைகளுக்குள் தலையிடுகிறீர்கள்.
பத்திரிகைகள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும், எழுத வேண்டும். உதாரணமாக தற்போதைய சூழலில் டக்ளஸ் என்ன செய்கிறார் என்ன செய்ய வேணும் என்ன பிழை செய்கிறார் எப்படி அணுக வேண்டும் என்று எழுதலாமே, விமர்சனங்களை செய்யலாமே. புலத்தில் இருந்து அந்த மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது. அந்த மக்கள்தான் தங்களுக்கான தலைமையை தெரிவுசெய்ய வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தங்களாலான பங்களிப்பை செய்யலாம். தற்போதைய நிலையில் சூளைமேட்டு டக்ளஸ் அல்ல இப்ப இருக்கும் டக்ளஸ். 25 வருட அனுபவம் பாதிப்புக்கள் 13 தடவைகள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது மட்டுமல்லாது பங்கருக்குள் வாழவில்லை. தன்னால் முடிந்தவற்றை அங்குள்ளோரிலும் பார்க்க ஏதோ செய்கிறார். நேடியாக யாரும் கதைக்க முடிகிறது. பிரபாகரனையோ பொட்டரையோ அன்ரன் பாலசிங்கத்துடனோ நாங்கள் அணுகத்தான் முடிந்ததா. கனடா பாரிஸ் சுவிஸ் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள் போய் கைத்தொலைபேசியில் படம் எடுத்து இங்குவந்து புலுடா விட்டார்கள். இதைத்தானே இவ்வளவு காலமும் பார்த்தோம்.
லங்காசிறீக்கு செய்தி இல்லாட்டி (புதினம் இல்லைத்தான்) நிருபமாக்கு நாலு பேர் கொடி கட்டினார்கள், கடல்கன்னி கண்டுபிடிப்பு, மாவடிவேம்பு கிராமத்தில் அதிசயம் உங்களுக்கு சொரணையே இல்லையா. தயவுசெய்து இனியாவது மனச்சாட்சிப்படி உண்மையை எழுதுங்கள். உண்மையைப் பேசுங்கள்.
அந்த மக்களை மீண்டும் முகாமுக்குள் கொண்டுபோய் அடைக்காதேங்கோ. அவர்களும் சந்தோசமாக இருக்கட்டுமே. அவர்கள் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் மாதிரி படிக்கட்டுமே. அவர்களும் மானாட மயிலாட பார்க்கட்டுமே. நாங்களும் அதைப் பார்த்த பின்புதானே ஏதோவெல்லாம் எழுதித் தள்ளுறம்.
எங்களுக்கு வட்டுக்கோட்டையும் வேண்டாம். முள்ளிவாய்க்காலும் வேண்டாம். முதலில் கொசுவுக்கு மருந்தடிப்போம். பிறகு கொசோவா பற்றிக் கதைப்போம்.
