2009

2009

“அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும்” : உலகைப் பொருத்தமட்டில் இது ஒரு கோசம் மட்டுமே – புன்னியாமீன்.

little_boy.jpgஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி  2009 ஆகஸ்ட் 6ஆம் திகதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945 ஆவணி (August) 06ம் நாள் காலையும் வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்கின்ற B-29 ரக விமானத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை அண்மித்துக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியினைத் தாண்டி விட்டிருந்தது. சரியாக காலை 8.15 இற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரைநோக்கி முதலாவது அணுகுண்டு மனிதகுலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.

அணு குண்டு அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு புணர்வு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துளை ஒப்பிட்டு நோக்கும்கால், அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின் போது சுயாதீனமான நியூத்திரன்களும் ‘காமா’ வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன. பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும் பொழூது யுரேனியம் நியூத்திரன்களால் தாக்கப்படும் பொழுது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை அவதானித்தனர். 200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும்,  இரண்டாம் உலகபோரின்போது “Manhattan Project” என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும்,  ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது பிரயோக படுத்தபட்டது

சின்னப்பையன் (Little Boy)  தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற சேதியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் அனர்த்தத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீற்றர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 சதம பாகைக்கு உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 செக்கன்களில் 12 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு இராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு இல்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. ஹிரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 சதவீதமானவை சாம்பலாகின.

மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 முற்பகல் 11.02 மணிக்கு “குண்டுமனிதன்’ (Fat Man)  என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீற்றர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர். இரு அணுகுண்டுத் தாக்குதல்களினதும் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒருவருடத்திற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர். ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல தசாப்தங்கள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள். இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள்.

எப்படியோ இரண்டாவது உலகமகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்திலே கெடுபிடியுத்தம் தீவிரமடைந்த போது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற சில சந்தர்ப்பங்களில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தின் விளிம்புக்கு உலகம் சென்றபோதிலும் கூட கடந்த 64 வருடங்களாக அணுவாயுத அனர்த்தம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகளுக்கு  மேல் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும்,  சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்ய நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது.

ஜப்பானில் 2009 ஆகஸ்ட் 6ஆம் திகதி  64 ஆவது ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர், அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எங்கும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்று குறிப்பிட்ட ஹிரோஷிமா மேயர், வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இது கைகூட உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ஒரு நினைவு நாள் சொற் பொழிவு என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோசம்.உலக நாடுகளில் சமாதனத்திற்கு விடுக்கப்படும் அழைப்பானையாகும். ஆனால் ஹிரோசிமா,  நாகசாகியின் கொடுமைகளைக்கண்டு கண்டும் அணுஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.இன்று அந்நாடுகள் அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் படி அணுஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 10,240 பரிசோதனை நடந்த ஆண்டு 1945 : ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்) வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 8,400 பரிசோதனை நடந்த ஆண்டு 1949 : சீனா வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 390 பரிசோதனை நடந்த ஆண்டு 1964 : பிரான்ஸ் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 350 பரிசோதனை நடந்த ஆண்டு 1960 : ஐக்கிய இராச்சியம் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 200-300 பரிசோதனை நடந்த ஆண்டு  1952 : இந்தியா 60-90 வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை பரிசோதனை நடந்த ஆண்டு 1974 : பாகிஸ்தான் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 30-52  பரிசோதனை நடந்த ஆண்டு 1998 : வட கொரியா வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 0-18 பரிசோதனை நடந்த ஆண்டு 2005

அதே நேரம்  இன்று உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணுவாயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து நோக்கும் போது அணுஆயுதங்களின் போட்டி குறையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.  அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கும் பேணுவதற்கும் செலவிடப்படுகின்ற நிதிபற்றிய மதிப்பீடுகள் அதிர்ச்சி தருகின்றன.அமெரிக்கா 2008 ஆம் ஆண்டு மாத்திரம் அணுவாயுதங்களுக்காகவும் அதனுடன் தொடர்புடைய செயற்திட்டங்களுக்காகவும் 5240 கோடி டொலர்களைச் செலவிட்டிருக்கிறது. அணுவாயுதங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா வருடாந்தம் 2900 கோடி டொலர்களை செலவிடுகிறது. இது இந்தியாவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானதாகும். அணுவாயுத தளபாடங்களை உற்பத்தி செய்வதற்கு வல்லாதிக்க நாடுகள் பல பதினாயிரம் கோடி டொலர்களை செலவிட்டிருக்கின்றன.

உலக வரலாற்றில், அணுஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதத்தை பரிசோதனைகள் எச்சரிக்கை சிமிக்கைகள் போல் பயன்படுத்தபட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT)  உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியகையாதலால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.

2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வள்ர்ந்த நாடுகள்டையே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோசம் இன்று முன்வைக்கப்படுகின்றன. உலக நாடுகளில் சமாதானத்திற்கு விடுக்கப்படும் அழைப்பானையாகும். ஆனால் ஹிரோசிமா,  நாகசாகியின் கொடுமைகளைக்கண்டு கண்டும் அணுஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் இந் நிலையில் இது ஒரு கோசம் மட்டுமாகவே இருக்கப் போகின்றது.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0807-no-escape-from-nightmare.html

இலங்கை-பாகிஸ்தான் மோதும் 4வது போட்டி இன்று கொழும்பில்

0308mahela.jpgஇலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல்-இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதல் வெற்றியைப் பதிவாக்கும்.

தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் வென்று சாதனை படைக்கும். இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் களத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

‘மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது’ – அமைச்சர் முரளிதரன்

karuna000.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போலிப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வவுனியாவில் தெரிவித்தார். மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் முரளிதரன் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ,“மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது.  அவசரப்பட்டு மக்களைக் குடியமர்த்தியிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.

இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும்” என்றார்.

40,000 இலங்கையர்களுக்கு இத்தாலியில் வதிவு அனுமதி – சட்டவிரோதமாக சென்றோருக்கு மனிதாபிமான அணுகுமுறை

rohitha.jpgசட்ட விரோதமாக இத்தாலியில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வதிவு அனுமதியை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. “நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலத்தின் ஊடாக இவ் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக சுமார் 4,000 முதல் 40,000 இலங்கையர்கள் நன்மையடையவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார். இத்தாலியில் இவ்வாறு தங்கியிருக்கும் இலங்கையர் புதிய சட்ட மூலம் அமுலுக்கு வரும் போது தமக்கு புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதன் காரணமாக சட்ட மூலம் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு 2009 ஓகஸ்ட் 3 ஆம் திகதி இத்தாலிய ஜனாதிபதியினால் கைச்சாத்தும் இடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமாக சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் 15 நாட்களில் அமுலுக்கு வரும்.

இச் சட்டத்தின் பிரகாரம் இத்தாலியின் வீட்டுப் பணி உதவியாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு வயோதிபர்களுக்கு பராமரிப்பு உதவிகளைச் செய்வோர் போன்றோரை மட்டுமே உள்ளடக்குகிறது. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வதிவு அனுமதியை நீடிப்பதற் கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் இத்தாலிய அரசு தீர்மானித்துள்ளது.

இத்தாலிய வீடுகளில் பெருமளவிலான இலங்கையர்கள், வீட்டுப் பணியாளர்களாகவும், உதவிச் சேவை வழங்குவோராகவும் உள்ளனர். இத்தாலிய தொழில் வழங்குனர்களின் நம்பிக்கையை யும் பெற்றுள்ள நிலையில் இவர்களை தொடர்ந்தும் தொழிலுக்கு அமர்த்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை இச் சட்ட மூலத்தின் ஊடாக இலங்கையர்கள் நன்மையடைவர்.

இத்தாலியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் றொபேட்டோ மரோணி மற்றும் பொதுநலசேவை அமைச்சர் மொறிசியோ சக்கோணி ஆகியோர் இத்தாலியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சகல வெளிநாட்டவர்களும் குற்றவியல் தவறை புரிந்துள்ளார்கள் என “நெருக்கடித் தவிர்ப்பு” சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

சட்ட மூலத்தில் உள்ள சில சரத்துக்கள் ஐரோப்பிய அரசியல் யாப்புக்கு ஒவ்வாதது என்ற கருத்துபட இத்தாலிய வெளிநாட்டமைச்சுக்கு ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் எடுத்துக் கூறியிருந்தது. இத்தாலிய ஜனாதிபதி ஜியோர்ஜியோ நபோலிரானோவின் இசைவிற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது மேற்படி கருத்துகள் காரணமாக மேல் மற்றும் கீழ் சபைகளின் மீளாய்வுக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

வயது முதிர்ந்தவர்களையும், வலது குறைந்தவர்க ளையும் பராமரிப்புக்க அரசு மாற்று வழிவகைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாகையாலும், இது இத்தாலிய பொருளாதாரத்திற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் சில அரசியல் கட்சிகளிலும் எதிர்ப்புகள் இருந்தன.

அரசியல் கட்சிகளினதும், தூதரகங்களினதும் எதிர்புகளினாலும் முதியோருக்கான தாக்கம் என்பதையும் கருத்தில் கொண்டும், இத்தாலி அரசு ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து வந்து தொழில் புரியும் பல்லாயிரக்கணக்கான வீட்டுப் பணியாளர்கள், சேவை புரிவோர் தொடர்ந்தும் தங்குவதற்காக சட்ட ரீதியாக இத்தாலியில் தங்கும் விதத்தில் விசேட வதிவு அனுமதி வழங்கும் விதத்தில் முன்னைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குள் இத்தாலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வீட்டுப் பணியாளர் அல்லது பராமரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர் ஒரு குடும்பம் என்ற வகையில் ஒரு வதிவு அனுமதி பத்திரம் அல்லது தனி நபர் என்ற வகையில் இரண்டு வதிவு அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிப்பவர் 2009 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக சேவையில் அமர்த்தப்பட்டுள்ள மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையர்களின் நன்மை கருதி இத்தாலி ரோமிலுள்ள இலங்கைத் தூதரகத்தை இரவு 10 மணி வரை திறந்து வைக்குமாறும் வெளிநாட்டமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

யாழ். ச.தொ.ச கிளையில் தினமும் 10 இலட்சம் ரூபா வருமானம் – ச.தொ.ச. தலைவர் தகவல்

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பாவனைப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக் கொடுப்பதற்காக அங்கு ஆரம்பிக்கப்பட்ட ச.தொ.ச. கிளையில் நாளொன்றுக்கு பத்து இலட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கின்றதென ச.தொ.ச. தலைவர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ச.தொ.ச. கிளையில் கொழும்பு விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் முன்னர் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கிய யாழ். மக்கள் தற்போது மிக்க உற்சாகத்தோடு பொருட்களைக் கொள்வனவு செய்ய திரண்டு வருகின்றனர். மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதற்கமைய யாழ்ப்பாணம்,  கஸ்தூரியார் வீதியில் உள்ள புதிய கட்டிடத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த ச.தொ.ச. கிளை திறந்து வைக்கப்பட்டது.

வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த யாழ். ச.தொ.ச. கிளையைத் திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் விரைவில் இன்னும் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை குண்டுவெடிப்பு விசாரணை: மூவருக்கு மரண தண்டனை

மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு மும்பையில் இரு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஹனீஃப் சையது, அவரது மனைவி ஃபாமீதா, அஸ்ரத் அன்சாரி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 4ம் திகதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று தண்டனைகளை வாசித்த நீதிபதிகள், குற்ற வாளிகள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் லஷ்கர் இ. தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது

நாடு திரும்பும் இந்திய டாக்டர்கள் குழு

vaccine.jpgஇலங் கையில் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதில் காயமடைந்த தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க 6 மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ டாக்டர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

அவர்கள் திருகோணமலை மாவட்டம் புல்மொட்டையில் தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர் இந்த மருத்துவமனை வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந் நிலையில் தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது இந்தக் குழு இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் வரும் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

26parliament.jpgபாராளு மன்றத்தைப் பார்வை யிட வருகை தரும் மாணவ ர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்கு பண்டார தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தனியார் பால்மா கம்பனியொன்றின் அனுசரணையோடு இத்திட்டம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தரும் சகல மாணவ, மாணவியருக்கும் ஒரு கிளாஸ் பால் வழங்கப்படும்.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் ஒரு தனியார் கம்பனியும் ஏனைய நாட்களில் மற்றொரு கம்பனியும் பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக பால் வழங்க முன் வந்திருப்பதாக இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போது சபாநாயகர் கூறினார். இவ்வைபவத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தும் கலந்துகொண்டார்.

4வது கட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

06-cargo-ship.jpgஇலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசின் 4வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

உணவு பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி-சேலைகள் அடங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலை 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 8ம் தேதி இது கொழும்பு வந்தடையும்.

இந்த நிவாரணப் பொருட்கள் இங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினரால் வன்னிதமிழர்களுக்கு வழங்கப்படும்.

பரீட்சைக் கட்டணங்களை மாகாண சபைகள் மூலம் செலுத்த நடவடிக்கை

மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களினது பரீட்சை கட்டணங்களை இனிவரும் காலங்களில் மாகாண சபை மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் பொருட்டு மத்திய மாகாணத்திலுள்ள 1400 பாடசாலைகளினது மாணவர்கள் நன்மையடையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். மத்திய மாகாண சபையின் 5 வது அமர்வின் போது அமைச்சர்களினது அறிவித்தல் தொடர்பான உரையாடலின் போது முதலமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். மத்திய மாகாண சபை சபையின் தலைவர் சாலிய பண்டார திசாநாயக்க தலைமையில் கடந்த 4ம் திகதி பல்லேகலையில் உள்ள மாகாண சபை மண்டபத்தில் கூடியது.

அமைச்சர் தொடர்ந்து அங்கு கூறுகையில்:- மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களினது பெற்றோர்களின் சுமையை ஓரளவேனும் குறைக்கும் வகையிலும் இன்னும் பல்வேறு நிலைமைகளின் நிமித்தம் இவ்வாறான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தான் தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.

அரசியல் காலங்களில் வெளியிடப்படும் போஸ்டர் விவகாரங்களைப் போன்று பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு வெளியிட முடியாது. அரசியல் வேறு பாடசாலை, கல்வி முறைமை வேறு. தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் போஸ்டர்களில் எவ்வளவு எண்ணிக்கையான தொகைகள் அச்சடிக்கப்படுகின்றதோ அதற்காக செலுத்தப்படும் கட்டணங்களும் குறைக்கப்படுகின்றது.

அவ்வாறு நாம் பரீட்சை வினாத்தாள்களை அச்சடித்து வெளியிட முடியாது. மாறாக மாணவர்களினது பாடம் மற்றும் எண்ணிக்கைகளைப் பொறுத்து வரையறுக்கப்பட்ட ஒரு எண்ணிக்கையிலே நாம் இதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.