20

20

”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன” ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

Wanni_War_Mullivaykkal”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன. இறுதிக்கட்டப் போரில் படையினர் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தினர் நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகினர்”’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும்  தெரிவித்து வருகின்றனர். இவ்வகையில் படையினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமை குறித்தும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனகரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது  கமநல உத்தியோகத்தரான ந. சுந்தரமூர்த்தி என்பவர் தனது சாட்சியத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு புதுமாத்தளன் பகுதியில் கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தியதெனவும் இதனால் பொதுமக்ளுக்கு பெரும் உயிரிழப்புகள் எற்பட்டதெனவும், நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகியதுடன் 1000பேர் வரை காயமுற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கெதிராக இக்குண்டுகளை படையினர் பயன்படுத்தியிருந்தாலும் அவை அப்பாவி பொதுமக்கள் மீதே வீழ்ந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களை தடுப்பதற்காக புலிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை அச்சுறுத்தியுறுத்தியதாகவும், இவ்வாறு செல்ல முயலும் பொதுமக்களை பச்சைமட்டையால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

மீள்பிரசுரம்: கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர் – பிபிசி தமிழோசை (செப்ரம்பர் 19 2010)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட்கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வீடமைப்புப்பணிகள் தாமதமாகும் என்ற அரசஅதிபரின் செய்தியினால் மீள்குடியமர்ந்த மக்கள் கவலை!

Damaged_Houseகிளி நொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும்,  சேதமுற்ற வீடுகளை திருத்திக் கொடுப்பதற்கும் தாமதமாகும் எனவும் இது இது அடுத்த வருடமே ஆரம்பிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதையடுத்து கூடாரங்களிலும் கூரைகளற்ற உடைந்த வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இவ்வேலைத் திட்டங்கள் நடைபெறும் என இம்மக்கள் எதிர்பார்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Damaged_Houseஇது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தேசம்நெற் க்கு கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களின் காணிகள் பலவற்றிற்கு உறுதி, அல்லது அனுமதிப் பத்திரங்கள் இல்லாமை  வீடமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் லுள்ளமைக்காண காரணமாக கூறப்படுககின்றது. ஆனால், காணி அனுமதிப் பதிரங்கள் உள்ளவர்களின் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் உடைந்த, சேதமுற்ற  வீடுகளை திருத்திக் கொடுப்பதிலும் கூட தாமதம் நிலவுகின்றமையை அவர்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

புதிதாக விடுகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டம் கட்டமாகவே அதற்கான பணத்தை வழங்கி வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் வேகமாக செயற்படுகின்ற போதும் குறித்த நிறுவனங்கள் மிக மந்த கதியில் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சேதமுற்ற வீடுகளை திருத்துவதற்காகன பதிவுகள் மேற்கொல்லப்பட்டுள்ள போதும் அதற்கான கொடுப்பனவுக்ள வழங்குவதிலும் தாமதங்கள் காட்டப்படுகின்றன.

அத்துடன் குறைந்த தொகைப் பணத்தில் ஓட்டுக்கூரைகள் அமைத்து வீடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த நிறுவனங்களால் உத்தரவிடப்படுகின்றன. உடைந்த, கூரைகளற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நகைகளை விற்றோ, அல்லது கடன் வாங்கியோ தங்கள் வீடுகளைத் தாங்களே திருத்தியமைத்தால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் வசதியுள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள் எனவும்  உதவி வழங்கும் நிறுவனங்ளைச் சேர்ந்தவர்கள் மக்களை அச்சறுத்தியும் வருகின்றனர். இதனால், மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் அவல வாழ்விற்குள்ளேயே தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

”கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடுத்த வருடமே வீடுகள் கட்டுவது சாத்தியமாகும்” அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

Rubavathy_Ketheeswaran_GAகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் சாத்தியம் உடனடியாக இல்லை எனவும், அது ஜனவரி மாதத்தின் பின்னரே சாத்தியப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் மழைக்காலத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரிடம் விளக்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. பலர் வேறு நபர்களின் காணிகளில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறித்த காலத்தில் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை பொறுப்பேற்காமல் விட்டால் அக்காணிகளில் வசிக்கும் மக்களுக்கு அக்காணிகளிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு டிசெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

கத்திக்குத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் கண்கள் அவரது தாயாரினால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிறிபாகம என்ற இடத்தைச் சேர்ந்த சமீலா என்ற பெண் அவரது காதலனால் குறித்த பெண்ணின் தாயாருக்கு முன்பாக வைத்து கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் குறித்த காதலன் பொலிஸில் சரணடைந்தார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரான மல்காந்தி குணவர்தன தனது மகளின் இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.

இலங்கை கண்தானச் சங்கத்தின் சார்பில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய நிபுணர்களால் கண்கள் அகற்றப்பட்டு பாதுக்கப்பட்டுள்ளன.

கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கைக் கால்களை மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் வழங்குகின்றது.

போரினாலும் விபத்துக்களாலும் தமது கால்களை இழந்த 20 பேருக்கு மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் செயற்கைக் கால்களை வழங்குகின்றது. இன்று திங்கள் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள ஜெயப்பூர் புனர்வாழ்வு நிலையத்தில இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கயின் தலைமையக இந்துமாமன்றத்தின் உபதலைவர், செயலாளர், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மற்றும், ஜெய்ப்பூர் நிறுவனப் பணியாளர்களும்  கலந்து கொண்டு கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

sri-lanka.jpgவவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு

யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதினெட்டுக் கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை பதினொரு பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளதாகவும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு நிறைவு செய்யப்படாததால், முகமாலை, கிளாலி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் தாமதமாகி வருவதாகவும் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் முகுந்தன், மக்களின் வாழ் வாதார நிலவரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வாவுக்கு எடுத்துரைத்ததுடன், சில பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று நிலைமைகளைக் காண்பித்தார்.

பச்சிலைப்பள்ளியில் வைத்தியசாலை மருந்து வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சாவகச் சேரிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டினர். அதே நேரம், மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலையையும் வைத்தியசாலையையும் பார்வையிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதால், பிரதேச செயலாளர் முகுந்தன், அந்தப் பகுதிகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இந்தப் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லாததால், மரத்துக்குக் கீழ் இருந்து மாணவர்கள் கல்விகற்கும் நிலையைக் காணமுடிந்தது.

அதேநேரம், இந்தப் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்தினால் சிரமங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென மக்கள், ஆணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

பாவனைக்கு உதவாத பழங்கள் கொழும்பில்

fruit.jpgகொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர். கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது. நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றிற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.

இரண்டொரு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழை – அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை

lightning-000.jpgஅடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாரண நேற்றுத் தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை பலவீனமடைந்திருப்பதாலேயே இந்நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது உயரமான மரங்களுக்குக் கீழே இருப்பதையும், திறந்த வெளிகளில் நடமாடுவதையும், விளையாடுவதையும், வீடுகளில் மின்சார பொருட்களைப் பாவிப்பதையும், குளம் மற்றும் ஆறுகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடைப் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் எடுக்கும். அதற்குள் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய காலநிலை தற்போது திடீரென ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி பலவீனமடைந்திருப்பதே பிரதான காரணம்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி கெணியன் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் 66 மி. மீ. அதிக மழை பெய்துள்ளது என்றார்.