முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு

யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதினெட்டுக் கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை பதினொரு பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளதாகவும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு நிறைவு செய்யப்படாததால், முகமாலை, கிளாலி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் தாமதமாகி வருவதாகவும் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் முகுந்தன், மக்களின் வாழ் வாதார நிலவரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வாவுக்கு எடுத்துரைத்ததுடன், சில பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று நிலைமைகளைக் காண்பித்தார்.

பச்சிலைப்பள்ளியில் வைத்தியசாலை மருந்து வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சாவகச் சேரிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டினர். அதே நேரம், மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலையையும் வைத்தியசாலையையும் பார்வையிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதால், பிரதேச செயலாளர் முகுந்தன், அந்தப் பகுதிகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இந்தப் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லாததால், மரத்துக்குக் கீழ் இருந்து மாணவர்கள் கல்விகற்கும் நிலையைக் காணமுடிந்தது.

அதேநேரம், இந்தப் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்தினால் சிரமங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென மக்கள், ஆணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *