அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாரண நேற்றுத் தெரிவித்தார்.
தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை பலவீனமடைந்திருப்பதாலேயே இந்நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது உயரமான மரங்களுக்குக் கீழே இருப்பதையும், திறந்த வெளிகளில் நடமாடுவதையும், விளையாடுவதையும், வீடுகளில் மின்சார பொருட்களைப் பாவிப்பதையும், குளம் மற்றும் ஆறுகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடைப் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் எடுக்கும். அதற்குள் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய காலநிலை தற்போது திடீரென ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி பலவீனமடைந்திருப்பதே பிரதான காரணம்.
இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி கெணியன் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் 66 மி. மீ. அதிக மழை பெய்துள்ளது என்றார்.