23

23

கிளிநொச்சி விநாயகபுரத்திலும் மக்கள் மீள்குடியமர அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் ஏ-9 பாதையின் மேற்கில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத 16 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கந்தன்குளம் கிராமத்திலுள்ள தாழ்வான நிலப்பகுதியில் வசதிகளற்ற நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

1983ம் அண்டு தொடக்கம் விநாயகபுரம் கிராமத்தில் மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். வீடுகள் கிணறுகளை அமைத்து.  பயன்தரும் மரங்களையும் வளர்த்துள்ளனர்.

இவர்களுக்குச் சொந்தமான 23 ஏக்கரில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளதாக தமக்கு அறிய வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது கிளிநொச்சிப் பிதேசச் செயலரினால் தாங்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தாழ்வான நிலப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் வெள்ளம் எற்பட்டு கடும் சிரமங்களைத் தாங்கள் எதிர்கொண்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சிக் கிராமங்களான சாந்தபரம், இந்துபுரம். பொன்னகர் உட்பட பல கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜி.ரி.இசட் நிறுவனத்தால் யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Jaffna_Libraryயாழ். பொதுநூலகத்திற்கு ஜி.ரி.இசட் நிறுவனம் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கியுள்ளது. இந்த நூல்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

ஜி;ரி.இசட் நிறுவனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் வோல்ரர் ஹெலர் யாழ். நூலக பிரதம நூலகர் எஸ்.தனபாலசிங்கத்திடம் இந்த நூல்களைக் கையளித்தார். ஆங்கில மொழியாற்றலை விருத்தி செய்யக்கூடியதான நவீன நூல்கள் இவற்றிலடங்குகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தேசம்நெற் ‘புக் அப்றோட்’ நிறுவனத்தின் நூல்களைப் பெற்று யாழ் பொது நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை நூலகவியலாளர் என் செல்வராஜா இணைப்பாளராக இருந்து மேற்கொண்டார். மேலும் யாழ் பொதுநூலகத்திற்கான சர்வதேச நூல் வகைப்படுத்தல் கைநூல்களின் பிரதிகளை கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தினர் தேசம்நெற் ஊடாக அனுப்பி வைத்தனர். இதன் பெறுமதி அப்போது 1000 பவுண்களுக்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேற்றம், அபிவிருத்திப் பணிகளில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Sumanthiran_MP_TNAவடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் மீள்குடியேற்றம் மற்றும். அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ள ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சி.சிறிதரன், பொன். செல்வராசா ஆகியோரே நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

தாம் அனுப்பி வைத்த இவ்வுறுப்பினர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

அதற்கேற்பவே தற்போது இதற்காக எழு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக தனியான  பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையினால் வன்னியில் மீள்குடியமர்த்தபட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக வடக்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி. முல்லைத்தீவுப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் கூடாரங்கள் மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது. கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால் தறப்பாள் கூடாரங்கள் பலவும் கிழிந்து சேதமாகியுள்ளன.

கூரைகள் திருத்தப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களும் இம்மழையினால் பாதிப்படைந்துள்ளனர். சில பகுதிகளில் வீடமைப்பு கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தயாரிக்கப்பட்டு வந்த சிமெந்து கற்கள் இம்மழையினால் கரைந்து சேதமாகிப் போனதையும் அவதானிக்க முடிந்தது.

எதிர்வரும் பருவமழைக் காலத்திற்கு முன்னர் வீடமைப்பு பணிகள் முடிவுறாவிட்டால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்புகள் எற்படும் என்பதை கடந்த சில நாட்கள் பெய்த மழையினால் மக்கள் படும் சிரமங்களை வைத்து உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுத்திட்டம் குறித்து ஆராய இந்தியப் பிரதிநிதிகள் குழு யாழ்.விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது. நேற்று மாலை இக்குழுவினர் யாழப்பாணம் வந்து சேர்ந்தனர். இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டம் தொடர்பாக ஆராயவே இக்குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளடங்கிய இக்குழுவினரோடு ஐ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். இக்குழுவினர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள விட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

Aru_ThirumuruganPon_Balasundarampillai_UoJShanmugalingam_N_UoJGanesh_K_GA_Jaffna‘Guillain-Barre’ Syndrome’ என்பது மனிதனின் நரம்புத் தொகுதியின் முடிவுப் புள்ளிகளைத் தாக்குகின்ற ஒருவகை நோயின் அறிகுறி. இது ஆரம்பத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி கால் கைகளில் ஆரம்பித்து உடலை முற்று முழுதாகச் செயலிழக்கச் செய்து மரணத்தையும் விளைவிக்கும். இதன் தாக்கம் வேகமானது. இது மருத்துவரீதியில் உடனடிச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. இந்நோயின் ஆபத்து என்னவெனில், உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்ற நீர்ப்பீடனத் தொகுதியே (Immune System) உடலின் நரம்புத் தொகுதியைத் (Nerve System) தாக்குகின்றது. இது ‘Guillain-Barre’ Syndrome’ பற்றிய மருத்துவக் கட்டுரை அல்ல. இது

‘Tamillain-Barre’ Syndrome’:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ பற்றியது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இச்சமூக நோயை எவ்வாறு கையாளப் போகின்றன என்பது முக்கியமானது. குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. இக்கட்டுரையானது குறிப்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்தியே எழுதப்பட்ட போதும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் சமூகத்தின் நிலையில் பாரிய மாற்றங்கள் இல்லையென்றே கருதலாம்.

தமிழ் சமூகத்தின் இயக்கத்தை அதன் உள்ளிருந்தே அழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ உடனடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அல்லது இந்நோய் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் செயலிழக்கச் (Paralysed) செய்துவிடும்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்கடத்தல் கொலை என்பன நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக, ஊடகங்களில் வெறும் சிறு செய்தியாக இருந்த நிலை போய், இப்போது அவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றதா என்பதை ஊடகங்கள் கண்ணில் எண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான வெளிப்படையான குற்றச்செயல்களும் அரசியல் சலசலப்புகளும் ஏற்படுத்துகின்ற பரபரப்பிலும் ஆர்வத்திலும் சமூகத்தை மெல்ல மெல்ல சிதைக்கின்ற விடயங்கள் அடிபட்டுச் செல்கின்றது.

இன்று வடக்கு கிழக்கில் தமிழ் சமூகத்தை நிர்வகிக்கின்ற கட்டமைப்புகள் மிகமோசமான நிலையை அடைந்துள்ளன. கிராம சேவகர்கள் பற்றி மாதத்திற்கு 1500 (நாளொன்றுக்கு 50) முறைப்பாடுகள் வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இவ்வாரம் தெரிவித்துள்ளார். இதில் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யாமை, லஞ்சம், ஊழல், மதுபோதைக்கு அடிமையாதல் போன்ற முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறைப்பாடுகள் கிராம சேவகர்களிடம் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பரவலாக உள்ளது. ஆனால் இவற்றை எதிர்கொள்ள அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு உள்ள துணிச்சலும் நேர்மையும் ஏனைய துறைசார்ந்த பொறுப்பில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் இல்லை.

Imelda_Sugumar_GA_JaffnaCharles_Mrs_GA_VavuniyaRubavathy_Ketheeswaran_GAஇமெல்டா சுகுமாரைப் போன்றே வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி போன்றவர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கடமைகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஸ்ரீகாந்தலட்சுமி, இமெல்டா சுகுமார், ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் தங்கள் கடமையை மேற்கொண்டவர்கள்.

இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானது என்ற உணர்வு நிலையில் உள்ள தமிழ் சமூகம் அதன் நிர்வாகத்தை தம் கைகளில் கொண்டுள்ளவர்கள், தமக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்சார்ந்து செயற்படுகின்ற போக்கே இங்கு குறிப்பிடப்படும் ‘Tamillain-Barre’ Syndrome’ க்கு தற்போது காரணமாக உள்ளது.

இது விடயத்தில் 1994 முதல் யாழ் மாவட்டத்தின் அதிகாரத் தலைமையைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் மிக முக்கியமானது. வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொறுப்பான பதவிகளை நிரப்புகின்ற விடயத்தில் அமைச்சர் தேவானந்தா அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதனால் எவ்வாறான சமூக உருவாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்த முனைகிறார் என்பதனை போரிற்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகள் நிரூபிக்கும். இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தேவானந்தாவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Tamillain-Barre’ Syndrome’ இன் சில குணம்குறிகள்:

முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸ்:

Ganesh_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், இவர் முன்னர் வவுனியா அரசாங்க அதிபராகவும் இருந்தவர். இவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்பது அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. ஒரு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் என்பது இலங்கை ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி. அவ்வாறான ஒருவர் இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்வது அவருடைய பதவியையும் அவமானப்படுத்துகின்ற ஒரு செயலே. அவர் அவ்வாறு இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்ந்தமைக்குக் காரணம் தன்னுடைய பதவிக் காலத்தை ஆறுமாத காலத்திற்கு நீடிப்பதற்கே எனச் செய்திகள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை 65 வயதாக இருந்த போதும் இவர் எப்படியோ தனது பதவிக்காலத்தை 69 வயதுவரை தக்க வைத்து அதன்பின்பும் இன்னும் சிறிது காலம் வரை அதனை நீடித்துக் கொள்ள முற்பட்டு உள்ளார்.

அவர் தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டது தமிழ் மக்களுக்கோ யாழ் மக்களுக்கோ தனது சேவையை வழங்குவதற்காகவா என்பது சந்தேகத்திற்குரியது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போதும் அரசாங்க அதிபராகப் பணியாற்றியவர். பகைமுரண் கொண்ட அரசியல் அந்தங்களிடையே பணியாற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. இந்த இந்நிலையில் மக்களின் நலன்கள் என்பதிலும் பார்க்க இந்த அரசியல் அந்தங்களில் உள்ளவர்களின் நலன்களையே இவர்கள் திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. இன்று அவ்வாறான நெருக்குவாரம் இல்லாத போதும் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து இயங்குகின்ற உணர்வு நிலையை மீளப் பெறமுடியாத (irreversible) வகையில் இழந்துபோய்விட்டனர்.

வன்னி யுத்தத்தின் முடிவில் நூற்றுக் கணக்காண சிறார்கள் அனாதரவாக்கப்பட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட இச்சிறார்களைப் பொறுப்பேற்று பராமரிக்க லண்டனில் உள்ள ஒரு ஆலயம் முன் வந்தது. அவர்களுக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பொது ஸ்தாபனம் ஒன்றும் உள்ளது. அப்பிள்ளைகளை ஒரு ஸ்தாபனம் பெறுப்பேற்கும் பட்சத்தில் அரசாங்க அதிபர் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்போது அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸிடம் 2010 ஏப்ரல் வரை இது தொடர்பாக பல தடவை முயற்சித்தும், அவர் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளார். முதற்தடவை இவ்விடயமாக பேசுவதற்கு லண்டன் ஆலயத்தின் – இலங்கையில் உள்ள ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர் சென்றிருந்தார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதன் பின் லண்டனில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்ட போது, ‘முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நீங்கள் மட்டகளப்பாள் ஒருத்தரையா அனுப்பி உள்ளீர்கள்’ என்று அரசாங்க அதிபர் கணேஸின் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இது விடயமாக தேசம்நெற் உடன் தொடர்புகொண்ட அவ்வாலயம் அவர் ‘சம்திங்’ எதிர்பார்க்கிறார் என்று தாங்கள் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கே கணேஸ் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கிய போதும் யூலை 01 2010ல் அவருக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்பு யூலை 10 2010ல் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்க இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் கிராம சேவகர்களுக்கு எதிராக மாதம் 1500 குற்றச்சாட்டுகள் வருவதை மூன்று மாதங்களே அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கவனத்திற்கு எடுத்துள்ளார். ஆனால் இதுவரை அப்பொறுப்பில் இருந்த முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸ் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துள்ளார். அல்லது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.  இவ்வாறானவர்களை கௌரவிப்பதன் மூலம் யாழ் பல்கலைக்கழகம் எவ்வாறானவர்களை முன்னுதாரணமாக சமூகத்தின் வரும்கால சந்ததியினருக்கு காட்ட முற்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

சைவத் தமிழ் சொற்பொழிவாளர் ஆறு திருமுருகன்:

Aru_Thirumuruganஆறு திருமுருகன் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தன் பேச்சாற்றலால் பிரபல்யம் அடைந்தவர். தன் பேச்சாற்றலுக்காக ‘செஞ்சொற்செல்வர்’ என்ற பட்டத்தைக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்தில் பல பொது ஸ்தாபனங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தலைவராக உள்ளார். சிவபூமி அறக்கட்டளையிலும் தலைவராக உள்ளார். பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொண்டு கௌரவத்தை ஏற்றுக்கொள்வதுடன் இவர் தனது சமூகக் கடமையை முடித்துக் கொள்கின்றார். இவர் அனாதரவானவர்களை பராமரிக்கின்ற முயற்சியில் கூடிய கரிசனையைக் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும் இவர் மீதான முழுமையான மதிப்பீடு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபராக இருக்கும் ஆறு திருமுருகன் மீது தற்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரியவருகின்றது.

1894ல் ஆரம்பிக்கப்பட்ட யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஒறேற்றர் சுப்பிரமணியம் அதிபராக இருந்த 1961 ஆம் ஆண்டில் 50 மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பியது. அன்றைய காலகட்டத்தில் ஒரே பாடசாலையில் அதிக மாணவர்கள் பல்கலைகழகம் சென்றமையால் யாழ் ஸ்கந்தாவரோதயாக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 3 ஆவது இடமும் யாழ்ப்பாணத்தில் 1 ஆவது இடமும் பெற்று தரத்தின் உச்சியில் இருந்தது. இது ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பொற்காலமாக இருந்தது. கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்களையும் வயது கூடிய மாணவர்களையும் ஏனைய பாடசாலைகள் ஏற்க மறுப்பவர்களையும் கூட இக்கல்லூரி ஏற்றுக் கொண்டது. இது பற்றி அப்போதைய அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்து இருந்த போது “இத்தகைய மாணவர்களால் இக் கல்லூரியை மட்டுமே சிலவேளை சீர்குலைக்க முடியும். அனால் இவர்களை வெளியே விட்டால் சமுதாயமல்லவா அழிந்துவிடும்” என்று பதிலளித்து இருந்தார். ஏனைய பாடசாலைகளில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களையும் உள்வாங்கியே அவ்வதிபர் தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ஆனால் ஆறு திருமுருகன் அதிபராக வந்ததன் பின்னர் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் சராசரி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாணவர்கள் காலத்திற்குக் காலம் திறமையான சித்திகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது உண்மையானாலும் சராசரியாக பாடசாலையின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற ஆறு திருமுருகன் பாடசாலையில் கவனம் கொள்ளவில்லையென பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கருதுகின்றனர். ஆறு திருமுருகன் மீது வழக்குத் தொடுத்துள்ளவரும் இப்பாடசாலை சார்ந்த பெற்றோரில் ஒருவரே.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அதிபராக வருபவர் அதிபர்களுக்கான தரப் பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும். ஆனால் ஆறு திருமுருகன் தனது சேவைக்கால அடிப்படையில் தனக்கு இருந்த சமூக அந்தஸ்தைக் கொண்டு அரசியல் செல்வாக்குடன் அப்பதவியைப் பெற்றுள்ளார். அப்பதவியை ஏற்ற  பின்னும் இவர் அதிபர் பதவிக்கான பரீட்சையை எடுக்கவில்லை. அதனால் அதிபர்கள் மட்டத்தில் இவர் அதிபராகக் கணிக்கப்படுவதில்லை. இதனால் பதவியேற்றது முதல் பாடசாலை அதிபர்களுக்காக வைக்கப்படுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் இவர் கலந்துகொள்வதில்லை. அதனால் பாடசாலை வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விடயங்களில் இவர் பின்தங்கியுள்ளார். ஒரு பாடசாலையை தரமான பாடசாலையாகக் கொண்டுவருவதற்கு அதிபருடைய பிரசித்தி மட்டும் போதாது என்பதனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக தேசம்நெற் பல்வேறு பிரிவினர்களிடமும் விசாரித்ததில் இவ்வாறான அதிபர் நியமனங்கள் யாழ் மாவட்டத்தில் பொதுவாக இருப்பதனையும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளிலேயே இவ்வாறான அதிபர்கள் நியமிக்கப்பட்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அதேசமயம் அதிபருக்கான பரீட்சை எடுக்காமல் கூடிய சேவைக்காலத்தைக் கொண்டு அதிபரான சிலர் தங்கள் பாடசாலையை உயர்வான நிலைக்கு கொண்டுவந்தமையும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பரீட்சைகளிலும் பார்க்க அவர்கள் தங்கள் பதவியைக் கொண்டு எதனைச் சாதித்தனர் என்பது முக்கியமானது. ஆனால் அறு திருமுருகனின் நிலை இரண்டும் கெட்டானாகி உள்ளது.

மேலும் ஆறு திருமுருகனின் சர்ச்சை அதிபர் பதவியுடன் நிற்கவில்லை. ஆறு திருமுருகன் கதாப்பிரசங்கம் செய்வதற்கு யாழ் பல்கலைக்கழகம் ஒன்றும் சைவக் கோயிலும் அல்ல, யாழ் பல்கலைக்கழக கவுன்சில் கோவில் நிர்வாக சபையும் அல்ல. ஆனாலும் தனது அதிபர் பதவிக்கு தகமை பெறாத ஆறு திருமுருகன் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலின் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டு உள்ளார். ஆலயத்தின் அறங்காவல் தலைவர் என்ற அடிப்படையில் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உள்ளடக்கம் பற்றி மாறுப்பட்ட கருத்து இருக்கலாம், ஆனால் ஆறு திருமுருகன் ‘செஞ்சொற்செல்வர்’ சிறந்த சொற்பொழிவாளர். சிறந்த தமிழ் ஆசிரியராகவோ சைவசமய பாடத்திற்கான ஆசிரியராகவோ இருக்கலாம். அவை மட்டும் அவருடைய ஏனைய பொறுப்புகளுக்கான இலவச அனுமதியாக முடியாது. சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் ‘அகலக் கால் வைக்காமல்’ தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பீடு செய்து ஏற்கும் பொறுப்புக்களை பொறுப்புடன் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டும்.

‘உண்மையே உயர் அறம்’ என்ற யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மகுட வாசகத்திற்கு ஒரு அதிபர் என்றளவில் மதிப்பளிக்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் சண்முகலிங்கம்:

Shanmugalingam_N_UoJProf. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார்.

தனிமனித பலவீனங்களை ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவது ஆரோக்கியமல்ல. ஆனால் அதனையே சமூகத்தின் உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கான மறைவிடமாக பயன்படுத்த முனையும் போது அப்பலவீனங்களை அம்பலத்திற்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பாலியல் சுரண்டல்கள் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதில் முன்நிற்கின்றது.

Sri_Pirasanthan_UoSJதற்போது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் ஸ்ரீ பிரசாந்தன் 2003ல் ஞர்னம் சஞ்சிகையில் எழுதிய கவிதையில் விரிவுரையாளரின் பலவீனத்தை விரிவாகவே விபரிக்கிறார் அவர்.

ஆற்றல் விளைச்சல் ‘அறுப்பத’ற்கென்றே
அரியணை
வீற்றிருக்கின்ற விரிவுரையாளரே!

நேற்றொரு பரீட்சை நடந்தது.
நெளிந்த ‘பின்னலி’
கூற்றை ரெண்டு விழிகளில் கொண்டவள்
காற்று வாங்கும் சாட்டையொடு
உம்மிடம் கண்வீச்சு
நீட்டினாள்.
சொல்லுக, நீர் விழவில்லையா?

நேற்றொரு பரீட்சை நடந்தது.
எமக்கும்,
உம் மாற்றம் உறுகிற
மனச்சாட்சிக்குமே
நேற்றொரு பரீட்சை நடந்தது.

நீர் ஒடிந்த மனதினுள்
ஓங்கி வளர்கிற ஓர்மத்தில்
பிடித்த கூரிய பேனை இருந்தது.
நானும்,
பரீட்சை எழுதினேன், விரிவுரையாளரே!

இக்கவிதைக்கு ஸ்ரீ பிரசாந்தன் கொடுத்த விலை பெரியது. யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரிலும் அதிக திறமை இருந்தும் ஸ்ரீ பிரசாந்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ‘இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். (தேசம்நெற் க்கு தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது. இவை தெரிந்து இருந்தும் என் சண்முகலிங்கம் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆக்கப்பட்டார். இதனால் அவர் உபவேந்தர் ஆனதன் பின்னர் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலை உருவானது.

இந்த நிலையிலேயே சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் சில விரிவுரையாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மொட்டைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட விரிவுரையாளர்(கள்) பொன் பாலசுந்தரம்பிள்ளை, எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள். பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கு ஸ்தாபனமயப்பட்டு உள்ளது என்பதனை இது வெளிப்படுத்துகிறது.

Kampavaruthy_Jeyarajஅதற்கும் முன்னதாக கம்பவாரிதி ஜெயராஜ் தனது பொன் விழா நூலிலும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் வருமாறு குறிப்பிடுகிறார்

‘‘மாதுக் கோளாறுகளும் இருக்கவே செய்தன.
தம் கல்வி அதிகாரத்தைப் பயன்படுத்தி,
பட்டங்களுக்குப் பரிசாக,
மாணவிகளின் பண்பினை விலைபேசிய,
அவ் அழுக்குகளை,
இப்போதைக்கு இங்கு எழுதவிரும்பவில்லை.

ஒழுக்கநிலை இதுவென்றால்,
அறிவுநிலையைப் பொறுத்தவரை, …
தம் வெற்றிக்காய் ஒரு இனத்தின் புலமையைப் பலியிட்ட,
அவர்தம் வஞ்சனைச் செயல்கள்,
இன்றும் எம் கல்வியுலகைப் பாதித்து நிற்கின்றன.

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 1 : கம்பவாருதி ஜெயராஜ்

இத்தோடு இவை நிற்கவில்லை. அண்மையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இணையம் ‘விரிவுரையாளர்களினால் விபச்சாரவிடுதியாக மாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தட்டிக் கேட்பது யார்?’ தலைப்பிட்டு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 18 2009ல் பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை துருவியன் என்பவரால் எழுதப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒரு பகுதி,

‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர்.

இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’

பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்துள்ளனர். ‘பெண் விரிவுரையாளர்களே தனியாக இவருடைய அறைக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்’ என தேசம்நெற் உடன் யாழில் இருந்து தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் சிலர் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக தனது மூன்றாண்டு கால ‘சேவை’யை இவ்வாண்டு டிசம்பருடன் நிறைவு செய்யும் பேராசிரியர் என் சண்முகலிங்கம் மற்றுமொரு மூன்றாண்டுக்கு தன் ‘சேவை’யை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கத் தயாராகி வருகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை:

Pon_Balasundarampillai_UoJபேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி முதல் 2003 ஏப்ரல் வரை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இன்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இன்றுள்ள கீழ்நிலைக்கு திடீரென வரவில்லை. காலம்காலமாக அப்பல்கலைக்கழகத்தை நிர்வகித்தவர்களின் பொறுப்பின்மையே அதனை இந்நிலைக்கு கொண்டு வந்தள்ளது. அதில் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மிக முக்கியமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஸ்தாபனமயப்பட்டது இவரது காலத்திலேயே. இவருக்குப் பின் வந்த உபவேந்தர்களான எஸ் மோகனதாஸ் என் சண்முகலிங்கம் ஆகியோருடன் ஒப்பிடுகையில் இவருக்கு ஆங்கிலப் புலமை இருந்த போதும் இவர் தனது அறிவுத்தரத்தால் அறியப்பட்ட ஒரு உபவேந்தரல்ல.

தற்போது லண்டனில் வாழ்கின்ற, பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் அங்கு கற்று துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற் உடன் இதுதொடர்பாக தொடர்பு கொண்டார். அவர் தகவல் தருகையில் ‘பொன் பாலசுந்தரம்பிள்ளை விரும்பாதவர்கள், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், எவ்விதத்திலும் அவர்களுக்கு பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்’ என்கிறார். ‘தனக்கு உதவி விரிவுரையாளர் பதவியை வழங்காமல் தடுக்க எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்’ என்றார் அம்முன்னாள் விரிவுரையாளர். ‘ஆனால் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் அத்துறையை கற்பிக்க விரிவுரையாளர்களே இல்லையென்ற போது என்னையும் என் போன்ற சிலரையும் உள்ளெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்றார் அவர். ‘யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கதையே தனிக்கதை’ என்றார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத அம்முன்னாள் உதவி விரிவுரையாளர்.

கம்பவாருதி ஜெயராஜ் தனது கம்பன் கழக இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் எவ்வாறு பழிவாங்கப்பட்டனர் என்பதனை ‘பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். இக்கட்டுரை ‘ஜெயராஜ்ஜியம்’ என்ற கம்பவாருதியின் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

‘எங்களைப் (கம்பன் கழகத்தை) பிடிக்காத அவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறைக்கு)
கழகத்தில் வளர்ந்த இளைஞர்கள் எவரையும் பிடிக்கவில்லை.
என்னென்னவோ காரணம் சொல்லி,
அறிவுலகில் புகாமல் அவர்களைத் தடுத்தார்கள்.
பொய், என்றேனும் உண்மையை வெல்லுமா?
கழகத்தில் வளர்ந்த
க இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன், ச முகுந்தன், த ஜெயசீலன், த சிவசஞ்கர் ஆகியோர்,
ஏதோ விதத்தில்,
தமிழுழகில் இன்று தம் பெயர் பதித்து நிற்கின்றனர்.’

கம்பவாருதி ஜெயராஜ் முன்வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.

‘எங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்,
பகிரங்கமாய் பிரதேசவாதம் பேசப்படுகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்திற்குள்,
தீவு, வடமராட்சி என இருபெரும் பிரிவுகள்.
மாணவர்களுக்குள் அல்ல,
விரிவுரையாளர்களுக்குள்.
இப்பிரிவுகள் பற்றியே,
பெரும் பதவிகள் தீர்மானிக்கப்படுகின்றனவாம்.
நம் இனமே தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடு.
தீவுப் பேராசிரியரின் துறைக்குள்,
தீவு மாணவர்கள் தலைதூக்குவதும்,
வடமராட்சிப் பேராசிரியரின் துறைக்குள்,
அவ்வூர் மாணவர்கள் தலைதூக்குவதும்,
யாழ் பல்கலைக்கழகத்துள் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
நியதியாய்ச் சொல்லப்படுகிறது..
கெட்டித்தனமாய்,
பேராசிரியர்களைத் தம் வலைக்குள் வீழ்த்தக்கூடிய,
ஒரு சில வேற்றூர் மாணவர்களும் வெல்வாராம்.
பல்கலைக்கழகத்தில்
அனைவருக்கும் பகிரங்கமாய்த் தெரிந்த இரகசியம் இது.
என்னே இழிவு.’

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3 : கம்பவாருதி ஜெயராஜ்

யாழ் பல்கலைக்கழகம் மீதான இக்குற்றச்சாட்டுகளை அது தொடர்பாக யாழ் பத்திரிகைகளில் வெளியான சில செய்திக் கட்டுரைகளும் உறுதிப்படுத்தி இருந்தன.

விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அல்லது அவருடன் விவாதித்தால் ‘கையில் தருவினம்’ (ஃபெயில்ஆக்குவீனம்) – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 13 2004

‘பாகுபாடு பார்த்து புள்ளி போடுறது. மாக்ஸ் வெட்டுறது எல்லாம் ஒட்டுமொத்தமாகவே இங்கை இருக்குதெண்டு இப்பதான் தெரியுது.’ – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 11 2004

‘விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.’ – வலம்புரி மே 27 2004

தங்களை வரும்பாதவர்களை பழிவாங்க முற்படும் இப்பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை இப்படியும் கவனிக்கிறார்கள். பொன் பாலசுந்தரம்பிள்ளையின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இவ்வாண்டு ஜனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. தமிழ் பிரதேசங்களின் மீள்புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மாநாடு ஜனவரி 12 2010ல் இடம்பெற்றது. இதில் லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஒருவரை பொன் பாலசுந்தரம்பிள்ளை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். லண்டனில் இருந்து சென்றவர் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்த முற்பட பாலசுந்தரம்பிள்ளை ‘உம்மைப் பற்றிய விபரம் எல்லாம் நான் ஒன்லைனில் செக் பண்ணிணனான்’ என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் ‘என்னுடைய மகனும் லண்டனில் பினர் (ஒரு இடம்)இல் இருக்கிறார். நீர் அவரை கவனித்துக் கொள்ளும், நான் உம்மை யாழ்பாணத்தில் ராசா ஆக்குகிறன்’ என்று கூறி உள்ளார். யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் உச்சத்தில் உள்ள ஒருவர் முன் அறிமுகமில்லாத ‘ஒன்லைனில்” மட்டும் தகவல் அறிந்த ஒருவருடன் மேற்கொண்ட உரையாடல் இது. ‘‘பேராசிரியர் ஒன்லைனில் சரியாக ‘’செக் பண்ணி’ இருந்தால் எனக்குக் கிட்டக்கூட வந்திருக்க மாட்டார். என்னுடைய ஒரு பக்கத்தை மட்டும்தான் அவர் ஒன்லைனில் பார்த்திருக்கிறார்’’ என தேசம்நெற்க்குத் தெரிவித்த அவர், ‘‘இப்போதைக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார்.

ஊடகங்களின் அச்சமும் மௌனமும்:

உபவேந்தர் என் சண்முகலிங்கம் உட்பட ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவையாக இருந்த போதும் ஒரு மிகப்பலமான நிறுவனத்தின் அதிகாரம் இவர்களது கையில் இருப்பதும் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இவர்களுக்கு உள்ளதும் பாதிக்கப்பட்டவர்களை அச்சமூட்டுகின்றன. முதாலாளித்துவ சமூகமுறைக்கே வளர்ச்சியடையாத ஆண் ஆதிக்க சமூகம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் முன்வைக்கப்படும் போது அது அப்பெண்ணின் மீதே திருப்பப்படுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீதான பாலியல் அதிகார துஸ்பிரயோகங்களை வெளிக்கொண்டு வர தயங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இக்குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணராத போது அதனை வெளிக்கொண்டு வர வேண்டிய ஊடகங்களும் எழுதப்படாத சமூக, அரசியல், சட்டக் காரணங்களுக்காக அவற்றை சுயதணிக்கை செய்கின்றன. அதனால் குற்றங்களை இழைப்பவர்கள் இப்போதும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாட முடிகின்றது.

அதுமட்டுமல்ல இலங்கைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த சமூக பாதுகாப்பிற்கான விழுமியங்கள் துர்ந்து போய் பிறழ்வான நடத்தைகளையும் பிறழ்வான மனிதர்களையும் அணுசரித்துப் போகின்ற சகிப்புத்தன்மை மேலோங்கி உள்ளது. மேலும் இப்படியானவர்கள் கல்வி, பதவி, நிதி வளம் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சுயரூபத்தை திரையிட்டு மறைக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும் தமிழ் சமூகம் மிக இறுக்கமான மூடிய சமூகமாக இருப்பதும் இவ்வாறானவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் : கூட்டும் கூத்தும்:

Balasundarampillai_Aruthirumurugan_Shanmugalingam_Friendshipஇது தமிழ் கல்விச் சமூகத்தின் மிக ஆபத்தான கூட்டு. இனவாரியான தரப்படுத்தல் ஓரிரு ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அதனை அடுத்து பிரதேச ரீதியிலான தரப்படுத்தல் வந்தது. அதனையும் தமிழ் மக்களுக்கு  எதிரானது என்று முழங்கி ஆயுதம் ஏந்துவதற்கு வித்திட்ட காரணிகளில் இந்தப் பிரதேச ரீதியான தரப்படுத்தலும் ஒன்றானது. (ஆனால் உண்மையில் நூற்றுக்கும் குறைவான யாழப்பான மாணவர்களே இத்தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பத்தை இது வழங்கி இருந்தது.)

ஆனால் அவ்வாறு கல்வித் தரத்தின் உச்சியில் இருந்த யாழ் மாவட்டம் அந்தத் தரப்படுத்தலை எதிர்த்து ஆயுதம் தாங்கிய மாணவர் சமூகம் கால்நூற்றாண்டுக்குப் பின் அதே தரப்படுத்தலினால் நன்மை பெறுகின்றது. இவ்வீழ்ச்சிக்கு தனியான ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட முடியாது. பல்வேறு அம்சங்கள் காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஏனைய தமிழ் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சி கணிசமானது. சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் போன்றவர்கள் கூட்டாக யாழ் கல்விச் சமூகத்தை வழிநடத்தும் போது இவ்வாறான கணிசமான வீழ்ச்சியில் மேற்குறிப்பிட்டவர்கள் போன்றோரின் பங்கினை நிராகரிக்க முடியாது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் இடையே உள்ள இந்த நட்பு சாதாரண நட்புஅல்ல. விசுவாசம், நன்றிக் கடனுடன் கூடிய நட்பு. யாழ்ப்பாணத்தில் குறிப்பிடக் கூடிய விழாக்களில் இம்மூவரையும் காணலாம். ‘buy one get two free – பை வன் கெற் ரூ பிறி’ என்ற வகையில் ஒருவரை அழைத்தால் மூவரும் வந்து சேர்வார்கள்.

இந்த நட்பின் பின்னணி முக்கியமானது. கலாநிதிப் பட்டம் பெற வெளிநாடு சென்வர் வெறும்கையோடு வந்தார். அவர் ஆறு திருமுருகன் நெருக்கமாக இருந்த தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி ‘சமய சமூகவியல் ஆய்வு’ ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வு அவ்வாலய மலரில் பிரசுரிக்கவும்பட்டது. இவ்வாறு அன்றைய யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பொன் பாலசுந்தரம்பிள்ளையால் பேராசிரியராக்கப்பட்டவர் தான் இன்றைய உபவேந்தர் என் சண்முகலிங்கம். சண்முகலிங்கத்திற்கு முன் உபவேந்தராக இருந்த எஸ் மோகனதாசும் பொன் பாலசுந்தரம்பிள்ளையால் உருவாக்கப்பட்டவரே.

இன்றைய இந்த உபவேந்தர் மீண்டும் உபவேந்தர் ஆக்கப்பட வேண்டும் என்பதில் தீவரமாக உள்ளவரும் பொன் பாலசுந்தரம்பிள்ளையே. ‘ஏன் பொன் பாலசுந்தரம்பிள்ளை என் சண்முகலிங்கத்தை உபவேந்தராக ஆக்க விரும்பிகிறார்?’ என்பதற்கான விடையை அவேரே அண்மையில் இடம்பெற்ற விழா ஒன்றின் போது தனக்கு நெருக்கமான ஒருவருக்குக் கூறியுள்ளார். ‘சண்முகலிங்கம் இருக்கிற வரைக்கும் நான் தான் விசி’ என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார். காரணம் எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோர் செயற்திறன் அற்றவர்கள். முடிவெடுக்கும் ஆளுமையற்றவர்கள். வடக்குக்கு வெளியே இருந்து வருகின்ற ஆங்கிலக் கடிதங்களுக்கு பதிலளிக்க முடியாதவர். இவற்றுக்கெல்லாம் இவர்களுக்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை தேவை. குருவை மீஞ்ச முடியாத சிஸ்யர்கள். இவர்களின் இக்குறைபாடுகளால் இவர்களுக்கு பின்னால் சிலர் பலமானவர்களாக உள்ளனர். இவர்களது பலவீனங்கள் இவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு தக்க சூழலை வழங்குகிறது.

இந்த விசுவாசத்திற்கு மற்றுமொரு காரணம் பொன் பாலசுந்தரம்பிள்ளை பிலிப்பைன்ஸ் மாணவியின் விடயத்தில் என் சண்முகலிங்கத்தை கண்டும் காணாமல் விட்டது. அந்த நன்றிக்கடனும் என் சண்முகலிங்கத்திற்கு உண்டு.

Putin_Medvedev_Relationshipரஸ்ய ஆட்சித் தலைவர் (ஜனாதிபதி) டமிர்ரி மெட்வெடெவ் க்கும் ரஸ்யாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் விளாடிமீர் புட்டீனுக்கும் உள்ள உறவு உலகறிந்தது. அதுவே யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம் அவர்களுக்கும் முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கும் உள்ள உறவு. என் சண்முகலிங்கத்தை யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் அரசனாக பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆக்கி உள்ளார். ஆட்டுவிக்கிறார்.

இப்போது ஆறு திருமுருகன் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவர் மட்டுமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் கூட. என் சண்முகலிங்கம் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஆவதற்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை மட்டும் போதாது, ஆறு திருமுருகன் அருள்பாலிக்க வேண்டும்.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – அறுதிருமுருகன் கூட்டினால் மட்டும் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ் கல்விச் சமூகத்தின் அறிவு மையமான யாழ் பல்கலைக்கழத்தை தம் வயப்படுத்த முடியாது. பல்கலைக்கழகத்தின் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவராக இருக்க வேண்டும். பின் அந்த மூவரில் ஒருவராக என் சண்முகலிங்கம் வருவதற்கு அரசியல் செல்வாக்கு வேண்டும். அதற்கு விரிக்கப்பட்ட வலை,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கலாநிதிப் பட்டம்:

Douglas_DevanandaGraduation_Logoஓகஸ்ட் 6 2010ல் நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஓய்வுபெற்ற யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸிற்கும் கலாநிதிப் பட்டங்களை வழங்க தற்போதைய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் என் சண்முகலிங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பருடன் முடிவுக்கு வருவதால் ஒக்ரோபரில் இப்பதவிக்கான தேர்தலுக்கான விண்ணப்பம் கவுன்சிலால் கோரப்பட இருக்கின்றது. தேர்தல்கள் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற மூவரில் ஒருவரை (வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல) ஜனாதிபதி யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்வார்.

யாழ் பல்கலைக்கழக கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களே இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இவர்களில் 12 பேர் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் நியமிக்கப்பட்டவர்கள். இது யாழ் பல்கலைக்கழகமாதலால் இந்த நியமனங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலின் பல்கலைக்கழக அங்கத்தவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் மீறிச் செயற்படுவார்கள் என்றில்லை.

அவர்கள் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பது அவர்கள் கடத்தப்படுவார்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அல்ல. அவ்வாறான ஒரு அச்சம் இல்லையென்பதும் செனட்சபை உறுப்பினர்களுக்கு மிகத்தெளிவாகவே தெரியும். கடத்தல், கொலை என்ற கதைகள் தங்களை நியாயப்படுத்தவும் மக்களை ஏமாற்றவும் மட்டுமே. அப்படி என்றால் எதற்காக அவர்கள் அமைச்சரின் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பதற்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வே சாட்சி. யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சந்திப்பை ஏற்பபாடு செய்திருந்தார். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் தேவானந்தா ‘என்னிடம் உதவிக்கு வராதவர்கள், உதவி பெறாதவர்கள் இருக்கிறீர்களா?’ எனக் கேட்டார். அங்கிருந்தவர்களில் அப்படி யாரும் இருக்கவில்லை. இதுவே அவர்கள் அமைச்சரின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதற்குக் காரணம்.

இதே துருப்புச் சீட்டையே தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் அமைச்சர் தேவானந்தாவில் பயன்படுத்த முற்படுகிறார். அமைச்சருக்கு கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்து மீண்டும் தன்னை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக்கும்படி கேட்கின்றார். இன்று அமைச்சர் முன்னுள்ள கேள்வி, அவர் இந்த வலையில் வீழ்வாரா? பட்டத்தைப் பெற்றதால் நா இழப்பாரா?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு பார்வை

Douglas_Devanandaஅமைச்சர் டக்ளஸ் தேவானந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு நாடா பத்திரிகையின் ஆசிரியரான தோழர் கதிரவேலு – யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை மகேஸ்வரியின் நான்கு ஆண் பிள்ளைகளில் இரண்டாமவர். தனது ஆறு வயதிலேயே தாயை இழந்த இவர், உறவினரும் தொழிற்சங்கவாதியுமான கெ சி நித்தியானந்த வின் அரசியல் சிந்தனையில் வளர்ந்தவர். தந்தையினதும் தன்னை வழிநடத்திய தந்தையைப் போன்றவரினதும் வழியைத் தனயன் பின்பற்றி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனது 13வாது வயதிலேயே குரல்கொடுக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தவர், ஈழமாணவர் பொது மன்றத்திலும் அங்கம் வகித்தவர். 1975ல் தனது 18வது வயதில் ஈழப் புரட்சிகர அமைப்பை (ஈரோஸ்) உருவாக்கியவர்களில் ஒருவர். இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சிக்காக 1978ல் பாலஸ்தீனம் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல் பற்றா அமைப்பில் பயிற்சி எடுத்தவர். அதன் பின் ஈரோஸ் பிளவுபட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை (ஈபிஆர்எல்எப்) பத்மநாபாவுடன் இணைந்து உருவாக்கினார். அதில் ஏற்பட்ட பிளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இல் இருந்து பிரிந்து வந்த பரந்தன் ராஜனுடன் இணைந்து ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்)யை உருவாக்கினார். இறுதியாக 1987ல் இப்போதுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உருவாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் பிரபல்யமான சிறைக்கூடங்களில் எல்லாம் அடைக்கப்பட்ட இவர் 1983 யூலை 25 – 27 வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளில் உயிர் தப்பியவர். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரருக்கு அவ்வாறு உயிர்தப்பிக்க முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தவின் சகோதரர் பிரோமானந்தா மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரும் ஈபிடிபி உறுப்பினரே.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அரசியல் நீரோட்டத்திற்கு வந்த ஈபிடிபி 1994 முதல் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்து வருகின்றது. 2000 ஆண்டு முதல் பெரும்பாலும் அமைச்சுப் பதவியில் இருந்து வருகின்றார் அமைச்சர் தேவானந்தா. இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் இவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டமே தடம்புரண்ட போது அமைச்சர் தேவானந்தாவால் தன் தந்தை வழியைத் தொடர முடியவில்லை. அனைத்து இயக்கங்களிலும் இடம்பெற்ற ஆயுதக்கலாச்சாரத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அவர் தலைமைதாங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினையும் பாதிக்கவே செய்தது.

‘‘ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை ….

….. தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப் பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.’’ எனக் கூறி அமைச்சர் தேவானந்த கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
(‘’கற்றுக் கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத் தரும்!” என்று அமைச்சர் தேவானந்தா கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன் செப்ரம்பர் 03 2010ல் அளித்த சாட்சியத்தில் இருந்து.)

அனைத்து ஆயுத அமைப்புகள் மீதும் அதன் தலைமைகள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் ஈபிடிபி கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. அதே போன்று ஆயுதம் ஏந்தாத அமைப்புகளும் இந்த ஆயுதக் கலாச்சாரத்தை ஆதரித்து, ஆயுத அமைப்புகள் மேற்கொண்ட அதே தவறை அவர்களும் செய்துள்ளனர். ஆனாலும் என்றுமே தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க முன்வராத பல தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் அமைச்சர் தேவானந்தாவின் சாட்சியம் வரவேற்பைப் பெற்றமைக்குக் காரணம் அவர் தன்னுடைய அரசியலுக்கு பகிரங்கமாக பொறுப்பெற்றுக் கொண்டது.

மே 18 2009ற்கு முன் மிகக் கூடுதலான தடவைகள் (13 தடவைகள்) தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைக்கப்பட்ட போதும் உயிர் தப்பிய தலைவர் என்ற பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு உரியது. ஆனால் அவருடைய நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அவ்வாறு உயிர் தப்பிக்கும் வாய்ப்பு எட்டவல்லை. அதனால் மே 18 2009ற்கு முன்பாக ஈபிடிபி கட்சிக்கு ஆயுதம் ஏந்துவதற்கான – வன்முறையைப் பயன்படுத்தவதற்கான (அவை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.) காரணங்கள் – தேவை இருந்ததுள்ளது. ஆனால் மே 18 2009ற்குப் பின்பாக அதற்கான அவசியம் இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Douglas_in_IndianBusஇன்றைய இந்த அரசியல் மாற்றத்தை ஈபிடிபி யும் அதன் தலைமையும் விளங்கிக் கொண்டு புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். அன்று தொடர முடியாது போன தந்தையின் வழித் தடங்களை தனயன் மீள்மதிப்பீடு செய்வதற்கான நேரம் இது. அன்றைய பல கொம்யூனிஸ்ட் தோழர்கள் மக்களுக்காக உழைத்து பென்சனும் இல்லாத நிலையில் இருந்த போது அமைச்சர் தேவானந்தாவின் உதவிக்கரம் அவர்களுக்கு வாழ்வழித்தது. இன்னும் அவ்வாறன சிலருக்கு வாழ்வழிப்பதாக தெரிகிறது.

இன்றும் இவர் மீதுள்ள நம்பிக்கைக்குக் காரணம் எளிமை, எப்போதும் மக்களால் அணுகக் கூடியவராக இருப்பது, எப்போதும் எந்நேரத்திலும், விவாதிக்க தயாராக இருப்பது, மற்றையவர்கள் கருத்தையும் ஏற்று பரசீலிக்கும் பண்பு.

பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஆளுமையுள்ள ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதிகப்படியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டமைக்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம். ‘கற்றுக் கொண்ட பாடங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்!” என்ற ஃபிடல் கஸ்ரோவின் வாக்கியத்தை அமைச்சர் தேவானந்தா நம்பினால் முன்னைய அரசியல் கலச்சாரத்தில் இருந்து தன்னையும் கட்சியையும் விடுவித்துக்கொள்ள வேண்டும். (பஸ் வண்டிகளையல்ல) தமிழ் சமூகத்தை புதிய அரசியல் கலாச்சாரம் நோக்கி ஓட்டிச் செல்கின்ற சாரதியாக அமைச்சர் தேவானந்த தன்னை மறுசீரமைக்க வேண்டும்.

வாங்காதே வாங்கவல்லாய்:

முன்னைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதும் ஒருவகைப் போராட்டமே. இன்று அமைச்சர் தேவானந்தாவைச் சுற்றி வருபவர்கள் (கட்சித் தோழர்கள் அல்ல) தம் தேவைக்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டவர்கள். சுயலாபம் கருதிச் செயற்படுகின்றவர்கள். 13 தடவைகள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய ஒருவருக்கு, இவர்களை இனம்காண்பதில் எவ்வித கஸ்டமும் இருக்காது. ஒருவருடைய நுண்ணிய அசைவுகளையும் கணித்து மதிப்பீடு செய்கின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதுவே அவரது உயிரையும் அரசியலையும் காப்பாற்றி வந்துள்ளது.

அதனாலேயே எதிர்காலத்தில் தம் வாழ்வை உய்விக்க வேண்டும் என்ற விருப்பில் ஆயிரம் ஆயிரம் விருப்பு வாக்குகளைத் தந்த மக்களுக்காக, கலாநிதி விருது ‘வாங்காதே வாங்கவல்லாய்’ என்று கூற வேண்டியுள்ளது. ‘கோயிற் சுண்டல் போல் பட்டங்களை அளிக்கொடுக்கின்றனர்’ என யாழ்பாணப் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை நிராகரித்தார். பல்கலைக்கழகம் ஒன்று கலாநிதிப் பட்டம் வழங்குதற்கான ஆளுமையும் தகமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உண்டு. ஆனால் உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஏன் இந்தப் பட்டத்தை வழங்குகிறார் என்று கணக்குப் பார்க்க ‘கல்குலேற்றர்’ தேவையில்லை.

இக்கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்தா ஏற்றுக் கொள்வாரானால் அது அவரையும் கேவலப்படுத்தி, யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தையும் கேவலப்படுத்துவதாக அமையும். அதனால் மக்கள் தலைவனாக மக்கள் தந்த கௌரவத்தை ஏற்று யாழ் பல்கலைக்கழகம் வழங்க முன்வரும் கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்த நிராகரிப்பதன் மூலம் இவ்வாறான சுயலாப கொடுக்கல் வாங்கல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

‘Tamillain-Barre’ Syndrom’ ற்கு அவசர சிகிச்சை அவசியம்:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ இங்கு தெளிவாகவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் கெ கணேஸ், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம், முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரின் நியமனங்களில் அமைச்சர் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அரச நியமனங்களுக்கு தம் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற முறை இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகி உள்ளது. ஆனால் அந்த நியமனங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பாக மக்களின் அறிவியல் மையமான பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்படுபவர் தகுதியுடன் பொறுப்புணர்வு உடையவராக இருக்க வேண்டியதும் அவசியமானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே சீரழிக்கக் கூடியவர்களை சமூகப் பொறுப்பற்றவர்களை, ஆளுமையற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதன் மூலம் தமிழ் சமூகத்திற்கு ‘தனது அரசியல் வாழ்வில் அமைச்சர் தேவானந்த எதனை விட்டுச் செல்ல விரும்புகின்றார்?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அண்மைக் காலங்களில் சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் பெரும்பாலும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. இவ்வாறு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் பலர் சமூகப் பொறுப்புணர்வோடு தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஈபிடிபி கட்சிக்கு நெருக்கமான ஒரு அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொறுப்புணர்வற்றவர்கள் சார்பில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். அப்பொறுப்பற்ற அதிபர் சட்டப்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பொறுப்புள்ளவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அமைச்சர் தேவானந்த தடைவிதிப்பதில்லை என்பதனை யாழ்ப்பாணத்தின் காட்சியகமாகப் பேணப்பட்ட தொழில்நுட்ப பூங்காவிற்கு பொறுப்பாக இருந்த தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன் அப்போது தேசம் சஞ்சிகைக்குத் தெரிவித்து இருந்தார். ஈபிடிபி கட்சியுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த மார்க்ஸிய கருத்துடைய இவர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கத்தில் முக்கிய பங்கேற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அமைச்சர் தேவானந்த தனது அரசியல் வாழ்வில் குறைந்தபட்சம் நம்பிக்கையான எதிர்காலத்தை தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. அதனால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது.

தகுதியற்ற, பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்கள் ‘கலாநிதிப் பட்டம் தந்தும்’, ‘நண்டுக் கறி தந்தும்’, ‘காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்’ பெற்றும் தம் காரியத்தைச் சாதிக்க முயல்வார்கள். ஆனால் அமைச்சர் தேவானந்தாவுக்கு விருப்பு வாக்கும் கட்சிக்கு வாக்கும் அளித்த அந்த மக்களை இவர்கள் மிதிக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சருக்குமே விசுவாசமற்றவர்கள்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கும் அமைச்சர் தேவானந்தாவும் அழைக்கப்பட்டு இருந்தார். வந்திருந்தார். அவரின் பாதுகாப்பிற்காக சில தோழர்களும் வந்திருந்தனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அணிந்துவந்த ஆடைகளும் நடந்துகொண்ட முறைகளும் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்ததாக தேசம்நெற் தொடர்புகொண்ட சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். தங்கள் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் இவ்வாறன குறைகளைக் கண்டிக்கவோ எடுத்துச் சொல்லவோ முன்வருவதில்லை. ஆனால் வெளியே புறமுதுகில் குற்றம் சொல்லவும் தயங்குவதில்லை. அண்மையில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவிற்கு அமைச்சரையும் அழையுங்கள் என்று கேட்கப்பட்ட போது சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் கூட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இவர்கள் பின் கதவால் செய்கின்ற நேர்மையற்ற அரசியல் மிக ஆபத்தானது. இது அமைச்சர் தேவானந்தாவுக்கு ஒரு அரசியல் முள்ளிவாய்க்காலுக்கே கொண்டு செல்லும்.

இலங்கையில் குறிப்பாக தேசிய சிறுபான்மை சமூகங்கள் இரட்டிப்பு ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. தேசிய சிறுபான்மை சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகம் இலங்கை அரசை எதிர்நிலை அரசாக உணர்ந்து ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்து இருந்தது. அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்த போதும் தமிழ் மக்களின் உணர்வுநிலையில் இலங்கை அரசு எதிர்நிலையான அரசு என்பதிலும் அது சிங்கள அரசு என்பதிலும் பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான சூழலையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தவில்லை. அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்படும்படியாக இல்லை. ஆனால் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 30 மாதங்களும் ஆகாத நிலையில் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.

இன்றுள்ள சூழலில் தமிழ் சமூகம் தன்னைத் தானே மீள்கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் சமூகத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற குறிப்பாக தமிழர்கள் சுயநல, சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லாதவர்களை அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இது தமிழ் சமூகத்தின் நலன்சார்ந்தவர்களது கடமையும் ஆகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் திருப்தி – ராதிகா குமாரசுவாமி

radhika-coomaraswamy.jpgஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக்கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தரம் – 5 புலமைப்பரிசில் பெறுபேறு – இன்று நண்பகல் முதல் www.doenets.lk

subatha.jpgஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதன்படி தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

192 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை கண்டி கலஹா இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மாணவன் மொஹமட் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். 190 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை மன்னார் புனித சேவியர் கல்லூரி மாணவன் ஜுட் நிதுஷனும், வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியகேசனும் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 15,000 மாணவர்கள் தோற்றியுள்ளனர். மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று காலை பெறுபேறுகள் வழங்கப்படுவதுடன் இன்று பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக ஏனைய பிரதேச மாணவரின் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்ஹார எதிரிசிங்க 196 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

இம்முறை முதற்தடவையாக பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் 9 தினங்களில் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளன. சுமார் 5000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகள்

5ஆம் ஆண்டு புலமைப் பிரிவில் பரீட்சை மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் தமிழ்மொழி மூலம். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் 145 புள்ளிகள்.

நுவரெலியா 140 புள்ளிகள், அம்பாந்தோட்டை- 137, கிளிநொச்சி-139, மன்னார்- 141, வவுனியா- 143, முல்லைத்தீவு-139, மட்டக்களப்பு- 142, அம்பாறை- 143, திருமலை- 142, புத்தளம்- 141, அனுராதபரம்- 140, பொலன்னறுவை- 138, பதுளை- 141, மொனராகலை- 143.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை – நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

norway.jpgவடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – உட்பட பொலிஸார் இடைநிறுத்தம்

புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்டத்தில் தனியாக விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.

பொலன்னறுவை, புராதன ரஜமஹா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 10 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்ட பொலிஸ் திணைக்கத்தில் விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.