24

24

பாடசாலை அனுமதி பெறுவதற்கு கல்வியமைச்சுக்கு வரவேண்டாம் – அமைச்சு செயலர் தெரிவிப்பு

sri-lankan-students.jpgமாண வர்களை பாடசாலைக்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சை நாடி வரவேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதே போன்று 5 ஆம் ஆண்டு, 6 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படையிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படியே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமா யின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் – பசில் ராஜபக்ஷ கூறுகிறார்

basil-raja.jpgஇலங்கை யின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் கொழும்பு, பெய்ஜிங் நிதி ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

“அண்மைய காலங்களில் இலங்கை மீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் சீனா எமக்கு ஆதரவு வழங்கியது’ என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட அனல் மின் உலையின் முதற்கட்ட நிறைவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியில் பிரதான பங்குதாரராக சீனா இருப்பதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான தருணங்களில் இலங்கைக்குச் சீனா உதவமுன்வந்துள்ளது என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அனல் மின் உலைத்திட்டத்திற்காக 455 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்காக பெய்ஜிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்படும் இந்த அனல் மின் உலையின் முதல் கட்டப்பணி பூர்த்தியடைந்திருப்பதுடன் அடுத்த வருடம் முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீதிகள், புகையிரதப் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்ய சீன அரசு நிதி உதவி அளிதிருப்பதாகவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உலை முதற்கட்டப் பணிபூர்த்தியடைந்துள்ளநிலையில் இதன் மூலம் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் 25 சதவீதம் பூர்த்தி செய்யப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சீனாவிலிருந்து புத்தர் சிலையொன்று கொண்டு வரப்பட்டு இந்த அனல் மின் உலை இடத்தில் வைக்கப்படவிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று தெரிவித்தது.

நெலுங்குளம் பிரதேசத்திலிருந்து 16 கிலோ எடையுள்ள நான்கு தற்கொலை அங்கிகள் மீட்பு

nimal_madiwaka.jpgவவுனியா, நெலுங்குளம் பிரதேசத்திலிருந்து 16 கிலோ எடையுள்ள நான்கு தற்கொலை அங்கிகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்று தெரிவித்தார்.

அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட நிலையிலேயே நான்கு தற்கொலை அங்கிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்தே நெலுங்குளம் பொதுமயானத்திற்கு அருகிலிருந்து இத் தற்கொலை அங்கிகளையும் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினர்.

பாதுகாப்பு செயலர், படைத் தளபதிகள் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிப்பு

சப்ரகமுவ மாகாண பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி, பாணந்துறை வீதியிலுள்ள சப்ரகமுவ மகா சமன் தேவாலய முன்றிலில் நடத்திய பேரானந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களின் விபரங்கள்;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முன்னாள் முப்படைகளின் தளபதி ஏர்சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப் படைகளின் கட்டளை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த நாணயக்கார, விமானப்படைத்தளபதி ஏயார் மாஷல் ரொசான் குணதிலக்க, பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரட்ன, சிவில் பாதுகாப்பு படையினரின் கட்டளை அதிகாரி அட்மிரல் சரத் வீரவன்ச ஆகியோருக்கு பேரானந்த விருது வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை இரத்தினபுரி, கேகாலை மாவட்ட அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, மகிந்த ரட்னதிலக்க, பி. ஜயசேகர பவித்ரா வன்னியாராச்சி, எச்.ஆர். மைத்திரிபால, மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத், மாகாண அமைச்சர்களான ஜி.எம். கருணாபால, ஜானக்க வக்கும்புற, ஸ்ரீலால் விக்கிரமசிங்க, ரஞ்சித் டி சொய்சா, தலைவர் அத்துலகுமார ராகுபத்த, உபதலைவர் ரஞ்சித் பண்டார ஆகியோர் வழங்கினர்.

இவர்களுக்கான சன்ளஸ் பத்திரங்களை இம்மாகாண சிரேஷ்ட பௌத்த குருமார்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள்

யாழ். மாவட்டத்தில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் பெண்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுவரும் “ஹலோ ரஸ்ட்’ நிறுவனம் இதற்கான விண்ணப்பங்களையும் உடல்வலிமையையும் ஆண்களைப் போல பணி செய்யக்கூடிய பெண்களிடமிருந்து கோரியுள்ளது.

முதல்கட்டமாக இருபது பெண்களைத் தெரிவு செய்து செப்டெம்பர் மாதம் முதல்வாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்குப் பயிற்சி வழங்கப்படுமென ஹலோரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயிற்சிக் காலத்தில் ஊக்குவிப்புத் தொகை மட்டும் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

பயிற்சி வழங்கப்பட்டவர்களை வெற்றிடம் வரும்போது பணியில் இணைத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சுயவிபரக் கோவையுடன் இம்மாத முடிவுக்குள் செயல்பாட்டாளர் ஹலோ ரஸ்ட் நிறுவனம், 12 நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம் என்று முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக குடாநாட்டில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஆண்களையே ஹலோ ரஸ்ட் நிறுவனமும் டெனிஸ் கண்ணி வெடியகற்றும் நிறுவனமும் ஈடுபடுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் தேர்தல் புகார்கள் முடிவை பாதிக்கலாம் – புகார் ஆணையம்

vote000.jpgஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிபர் தேர்தலின் முடிவுகளை பாதிக்கலாம் என தேர்தல் புகார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த ஆணையத்தின் தலைவர் கிராண்ட் கிப்பன் கூறும்போது, தங்களுக்கு 225 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 35 முக்கியமானவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என முத்திரையிடப்பட்டிருப்பதாக கூறினார்.

அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

20 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

தலவாக்கலை, பெல்கிரேபியா தோட்டக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் அந்த வீடுகளிலிருந்த சகல பொருட்களும் எரிந்து

நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சேதங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளதாகவும் லிந்துல பொலிஸாரும், நகர சபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து பல நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தீக்கிரையான வீடுகளில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருந்துள்ளனர்.

சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு விழா

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் 200வது வருடம், எதிர்வரும் 25 ஆம் திகதி பூர்த்தியடைகிறது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி 200 வருட பூர்த்தி விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக சுங்க திணைக்களப் பணிப்பாளர் எஸ். ஏ. சீ. எஸ். ஜயதிலக தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சேவையாற்றும் 40 முஸ்லிம் சுங்க அதிகாரிகளின் ஏற்பாட்டில் மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய பணிப்பாளர் தகவல் தருகையில், இந்த நாட்டில் தேசிய வருமானத்தில் ஐம்பது வீதத்தை சுங்கத் திணைக்களம் பெற்று வருகின்றது. இது 2009 ஆம் ஆண்டில் 427 பில்லியனும் 2007 ஆம் ஆண்டில் 315 பில்லியனும் 2008 இல் 279 பில்லியனும் வருமானமாகப் பெற்றுள்ளது.200 ஆண்டு விழாவின் போது இருபத்தைந்து ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்த சுங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் சின்னம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தின் போது மருதானைப் பள்ளிவாசல் இமாமினால் துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திஹாரிய அங்கவீன நிலைய த்தின் மாணவர் ஒருவருக்கு முச்சக்கர நாற்காலியும், செவிப்புலன் சாதனங்களும், பாத்திமா அனாதை இல்லத்தில் உள்ள மாணவிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இவ்வைபவம் சுங்கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இஸ்மாயில் சாபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.