மாண வர்களை பாடசாலைக்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சை நாடி வரவேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதே போன்று 5 ஆம் ஆண்டு, 6 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படையிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படியே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமா யின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.