06

06

வவுனியா நலன்புரி முகாம்களில் உளவள ஆலோசனைச் சேவை

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கல்வியமைச்சின் இரண்டாம் கட்ட உளவள ஆலோசனைச் சேவை செயற்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தில் முதலாம் கட்டம் கடந்த மே மாதம் திருகோணமலை மாவட்ட நலன்புரி நிலையங்களில் நடைபெற்றன.

யுத்தச் சூழலிலிருந்து மீண்டும் வந்துள்ள மக்களின் மனோநிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டே இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செயற்திட்டத்திற்கு நாட்டின் அரச பாடசாலைகளில் உளவள ஆலோசனைச் சேவையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும் ஆசிரியர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு செல்லவுள்ளனர்.

முதலீட்டுச்சபை கிளை யாழ்நகரில் திறக்கப்படும்

jaffna.jpgயாழ்.  மாவட்டத்தில் இலங்கை முதலீட்டுச்சபை பணியகக்கிளை நிறுவப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் நிர்வாக நிறைவேற்றுப் பணிப்பாளர் டபிள்யூ.பியசேன தெரிவித்துள்ளார். யாழ்.செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முதலீட்டுச் சபையின் தொழில்நுட்ப நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.பி.எல்.டி.சில்வா, தலைமைச் செயலகப் பணிப்பாளர் திருமதி ரேணுகா வீரக்கோன், சிவாணி பெஞ்ஜமின் ஆகியோரும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷம் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், மருத்துவக் கல்லூரி, ஹோட்டல்கள், தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முதலீட்டுச்சபை அங்கீகாரம் வழங்கவுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 300 தொன் நிவாரண பொருள் – குவைத் அரசு அனுப்பிவைப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்காக குவைத் அரசாங்கம் 300 தொன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குவைத் நாட்டுக்கான பிரதிநிதி இந்நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

குவைத் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களுள் 4 ஆயிரம் கூடாரங்கள், 4 ஆயிரம் போர்வைகள், 4 ஆயிரம் உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமயலறை உபகரணங்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிவாரணப் பொருட்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இலங்கை வந்துள்ள அந்நாட்டுப் பிரதிநிதியினால் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்நகரில் இருநாள் நடமாடும் சேவை அமைச்சுகள், திணைக்களங்கள் பங்கேற்கும்

jaffna_town.jpgநீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, இரு நடமாடும் சேவைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.  கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை நல்லூர் திவ்விய ஜீவன மண்டபத்திலும், யாழ்.பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

இரு நடமாடும் சேவையின் போது விசேட சட்ட ரீதியான பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்களையும், தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான முறைப்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல், மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நடமாடும் சேவையில், நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கே.கம்லத் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச மற்றும் பதிவாளர் நாயகம் மற்றும் உதவிப் பதிவாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச் சேவையில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு, மாகாண காணிகள், பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மத்தியஸ்த சபை, மீன் பிடித்திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களும், அமைச்சுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

இவ்வருடத்தின் 2வது சந்திரகிரகணம் இன்று – சூரிய கிரகணம் 22இல்

இந்த வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று 6ம் திகதி தோன்றும் என்று நவீன தொழில்நுட்ப வியலாளர்களுக்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2.03 மணிக்கு ஆரம்பமாகும் இச்சந்திர கிரகணம் மாலை 4.14 மணி வரை இருக்கும். இது பகல் வேளையில் இடம்பெறுவதால் இக்கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் எதிர்வரும் 22ம் திகதி இலங்கை நேரப்படி சூரிய உதயம் முதல் காலை 7.12 வரையும் சூரியக் கிரகணம் ஏற்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் இவ்வருடத்தில் மேலும் இரண்டு சந்திர கிரணங்கள் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் சீன இந்திய உறவுகள் ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே

18rohitha_bogollagama_.jpgசீனாவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்பால் இந்தியாவுடனான தனித்துவமான உறவுகளுக்குத் தடையில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சீனா,  இந்தியா மற்றும் இலங்கை ஆகிய  3 நாடுகளுக்கும் இடையிலான உறவு சாதகமான முறையில் இருக்கின்றது,  ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே இந்த இரு நாடுகளுடமான இலங்கையின் உறவாகும். மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.

இலங்கையுடன் ஏற்கனவே துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் கேந்திர உறவுகளை சீனா மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம அழைப்பு விடுத்தார்.
 
கேந்திர ரீதியிலும்,  பொருளாதார ரீதியிலும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு விரிவடைந்திருக்கும் நிலையில்,  அமைச்சர் ரோஹித்த போகல்லாகம நான்கு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றிருக்கிறார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 24 கோடி ரூபா கிடைத்தது

schoolgirls-sri-lanka.jpgவடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக அரசு 240.02 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.  யாழ். அரச அதிபர் மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச அதிபர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அரசாங்கம் 240.02 மில்லியன் ரூபாவை ஒடுக்கியுள்ளது.

இதில் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 45 மில்லியன் ரூபாவும் யாழ். பல்கலைக்ககழகத்திற்கு 43 மில்லியன் ரூபாவும் இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளுக்கும் 36.42 மில்லியன் ரூபாவும் கைதடி சித்த வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மற்றும் வடமராட்சி வலயங்களில் தலா 6 பாடசாலைகளும் வலிகாமம் வலயத்தில் 4 பாடசாலைகளும் தென்மராட்சி வலயத்தில் 2 பாடசாலைகளும் தீவக வலயத்தில் ஒரு பாடசாலையும் புனரமைக்கப்படவுள்ளன.  இப் பாடசாலைக் கட்டிட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிதி வசதி இன்மையால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.அதனை முன்னெடுக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மீசாலைவரணி வீதி,புங்குடுதீவு வீதி, சங்கரத்தை குளக்கட்டு வீதி, கெற்பெலிஉசன் வீதி, சுழிபுரம் பறாளாய் வீதி, காரைநகர் பாலாவோடை ஊரி வீதி, கச்சாய்கெற்பெலி வீதி,ஏழாலை கட்டுவன் வீதி, கோண்டாவில் இருபாலை வீதி மற்றும் அல்லைப்பிட்டி வீதி போன்றன புனரமைக்கப்படவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பொது உள்ளக விளையாட்டு அரங்குகளை விருத்தி செய்தல் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்தல் போன்றன மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளிலும் 70 பேருந்துகள் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைதடி சித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் அங்கு மூன்று விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ் வேலைகள் அனைத்தும் மாவட்டச் செயலகத்தின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவுள்ளனவென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.