05

05

மெனிக்பாம் பகுதியில் நிரந்தர கட்டுமானங்கள்?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் பேரில் 80 சதவீதமானோர் வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள போதும் இந்த அகதிகளுக்கு நிரந்தர முகாம்களையே வீடுகளாக நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக தோன்றுவதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மெனிக்பாம் பகுதியில் நிரந்தரமான கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் ரைம்ஸுக்கு கூறியுள்ளனர். மெனிக் பாமில் 6 வலயங்களில் 4 வலயங்களுக்கு தங்களால் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் இரு வலயங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூன்ய வலயமென மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதியும் அடங்கும் என்றும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் பணிபுரிய எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கையிலுள்ள “ரிலீவ்’ இன்ர நெஷனல் அமைப்பின் தலைவர் ராஜித ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், கட்டிடங்கள் எழுப்பப்படுவதை வெளியிலிருந்து பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பிற்குப் பின்னர் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இந்தப்பகுதி உருவாகிவருவதாக சில நிவாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர். பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள் என்று பாரிய நகரமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இங்கு வங்கிகளில் அகதிகள் 100 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இந்த வலயங்களில் அரசாங்கம் நிரந்தர புகலிடங்களுக்கான வேலைகளை மேற்கொள்கின்றது. சீமெந்து தரைகள், மரக்கட்டமைப்புகள், இரும்புக் கூரைகள் என்பன அமைக்கப்படுகின்றன என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். தன்னை அடையாளங் காட்டவேண்டாமென அவர் கேட்டுக்கொண்டதாக ரைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

திருமலையில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை

trincomalee-district.jpgதிருகோ ணமலையில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை ஒன்றை அமைக்க சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் செல்முறைப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் பிரதேச மக்களின் தேகாரோக்கியத்தை கருத்தில் கொண்டும் இந்த சித்த வைத்திய போதனா வைத்தியசாலை அமைக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நாளை 6 ஆம் திகதி  திறந்து வைப்பார் என சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது

தப்பியோடி கைதான படையினருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்

தப்பியோடிய படையினரை கைது செய்து குற்றவாளிகளுடன் சிறையில் வைத்திருப்பது சிறந்தல்லவென ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் அவசியமெனவும் வலியுறுத்தினர்.

புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பேசப்படும் நிலையில் தப்பியோடி கைதான படையினருக்கும் அதனை வழங்கி சுமுக வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;  படையிலிருந்து விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பாத சுமார் 40 ஆயிரம் படையினர் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தப்பிச் சென்றுள்ளவர்களில் 4500 பேரளவில் கைது செய்யப்பட்டு குற்றச்செயல் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, பணியின் போதான பிரச்சினை போன்ற காரணங்களால் இவர்கள் தவறிழைத்த போதும் படையில் சில வருடங்களாவது பணியாற்றியுள்ளனர். இந் நிலையில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இவர்கள் தடுத்து வைக்கப்படுவதானது சிறந்ததல்ல. அதாவது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இருந்து வெளியே வரும் போது இவர்களால் பிரச்சினையேற்படுவதற்கு வழிவகுக்கும். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கு பயன்படுத்த முடியாதென்பதால் குற்றம் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்காது அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அல்லது தப்பியுள்ளவர்கள் சுமுகமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும். பொசன் மற்றும் வெசாக் தினங்களில் ஜனாதிபதி விடுதலை வழங்குவது போல் ஜனாதிபதி முப்படைகளின் தளபதியென்ற வகையில் இதனை செய்ய முன்வரவேண்டும். இது தொடர்பில் படைவீரரது குடும்பத்தினர் எம்முடன் கதைத்துள்ளனர்.

புலிகளுக்கு தற்போது பொது மன்னிப்பு குறித்து பேசுகின்ற நிலையில் படையினருக்கும் இதனை வழங்க வேண்டுமென நாம் கேட்கின்றோம்.

இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை இழந்துள்ளது

schoolgirls-sri-lanka.jpgநூறாண் டுகளுக்கு மேலாக ஆங்கில ஆட்சியாளரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் திறனை இழந்து நிற்பதாக கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் நடத்திய புத்தாக்கக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வினைத் தொடக்கி வைத்துப் பேசும்போது குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் சீனாவில் உயர் கல்வி பெறுவதற்காக செல்லும் நமது மாணவர்கள் அங்கு ரஷ்ய, சீன மொழிகளில் ஆறு மாதகால பயிற்சி பெற்ற பின்னரே உயர்கல்வியைத் தொடர முடிகின்றது. நமது நாட்டில் இருக்கும் போது ஆங்கில மொழியையும் கற்க ஏன் முன்வருகிறார்களில்லை. ஆங்கில மொழியை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம் என்றும் பிரதம செயலாளர் பாலசிங்கம் கூறினார்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வர் என். நகேந்திரகுமார் பேசும்போது;

உயர்கல்வி பெறும் மாணவர்கள் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, விஞ்ஞானத்துறையில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. திருமலை வளாகத்தில் விஞ்ஞானத்துறைக் கல்விக்குரிய வசதிகள் அனைத்தும் உள்ளன. மாணவர் எண்ணிக்கைதான் குறைவு என்று கூறினார்.

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி வீரவர்தன பேசும்போது;

ஆசிரியர் பற்றாக்குறை பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பற்றாக்குறை நிலவுகிறது. கணிதபாடம் போதிக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் கற்கும் மாணவர்களை குறைந்தது அப்பாடத்தில் சாதாரண சித்தி எடுக்கக்கூடியதாக பயிற்றுவிக்க வேண்டும். பாடங்களில் மாணவர்கள் சித்திபெறவில்லை என்ற நிலையை அப்பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறினார். வலயக்கல்விப் பணிப்பாளர் அ. விஜயானந்த மூர்த்தி தலைமை வகித்தார்.

சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை பேச்சுகளில் ஈடுபடுவோர் வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்கவில்லை.

இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு ஐ.தே.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.