தப்பியோடிய படையினரை கைது செய்து குற்றவாளிகளுடன் சிறையில் வைத்திருப்பது சிறந்தல்லவென ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் அவசியமெனவும் வலியுறுத்தினர்.
புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பேசப்படும் நிலையில் தப்பியோடி கைதான படையினருக்கும் அதனை வழங்கி சுமுக வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்; படையிலிருந்து விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பாத சுமார் 40 ஆயிரம் படையினர் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தப்பிச் சென்றுள்ளவர்களில் 4500 பேரளவில் கைது செய்யப்பட்டு குற்றச்செயல் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, பணியின் போதான பிரச்சினை போன்ற காரணங்களால் இவர்கள் தவறிழைத்த போதும் படையில் சில வருடங்களாவது பணியாற்றியுள்ளனர். இந் நிலையில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இவர்கள் தடுத்து வைக்கப்படுவதானது சிறந்ததல்ல. அதாவது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இருந்து வெளியே வரும் போது இவர்களால் பிரச்சினையேற்படுவதற்கு வழிவகுக்கும். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கு பயன்படுத்த முடியாதென்பதால் குற்றம் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்காது அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அல்லது தப்பியுள்ளவர்கள் சுமுகமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும். பொசன் மற்றும் வெசாக் தினங்களில் ஜனாதிபதி விடுதலை வழங்குவது போல் ஜனாதிபதி முப்படைகளின் தளபதியென்ற வகையில் இதனை செய்ய முன்வரவேண்டும். இது தொடர்பில் படைவீரரது குடும்பத்தினர் எம்முடன் கதைத்துள்ளனர்.
புலிகளுக்கு தற்போது பொது மன்னிப்பு குறித்து பேசுகின்ற நிலையில் படையினருக்கும் இதனை வழங்க வேண்டுமென நாம் கேட்கின்றோம்.