July

July

வவுனியாவில் பாடசாலை அதிபர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் உட்பட இருவர் இன்று வவுனியாவில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிரான புதிய சட்டமூலம்: தண்டம் 4276 முதல் 8553 ஸ்ரேலிங் பவுண்ஸ் வரை விதிப்பு

italy.jpgஇத்தாலிய பாராளுமன்றமானது அந்நாட்டிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையளிக்கும் புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியுள்ளது.  புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.

 கடந்த மே மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி சட்ட மூலம் வியாழக்கிழமை பாராளுமன்ற மேல்சபையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டமாக அமுலாக்கப்படும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த புதிய சட்டமானது சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையாக பெருந்தொகை தண்டப்பணம் விதிப்பதற்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தங்க வைத்திருப்பவர்களுக்கு மூன்று வருடத்துக்கு மேலான சிறைத் தண்டனை வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது.

புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்கான காலமும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்திற்கு மனித உரிமைக் குழுக்களும் வத்திக்கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்; 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை டிசம்பருக்கு பிற்போடுமாறு கோரிக்கை

கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை டிசம்பர் மாதத்துக்கு பிற்போடுமாறு வவுனியா மாவட்ட கல்வி வலய பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஓஸ்வர்ல்ட் பரீட்சை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர் பாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் அடுத்தவாரம் பேசுவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நாடு முழுவதும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களின் சுமார் 6000 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கதிர்காமர், அருணாசலம், இராமநாதன், ஆனந்த குமாரசுவாமி போன்ற முக்கிய நான்கு நிவாரணக் கிராமங்கள் உட்பட சுமார் 20 வலயங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4800 மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எனினும் 5ம் ஆண்டு மாணவர்கள் எல்லா வலயங்களிலும் இருப்பதால் குறுகிய காலத்துள் அவர்களை ஒன்றிணைந்து பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுபற்றியும். வவுனியா மாவட்ட பாடசாலைகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால் வவுனியா மாவட்ட, மன்னார் மாவட்ட மாணவர்களும் உடனடியாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளமை பற்றியும் வலய கல்விப் பணிப்பாளர், பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய வேண்டுகோள் ஒன்றை விடுக்குமாறு இது தொடர்பாக அமைச்சருடன் கலந்தாலோசித்து பதிலளிப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ஏ-9 வீதியூடாக வாரத்தில் 3 தடவை பஸ் சேவை நடைபெற ஏற்பாடு

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் இருந்து ஏ9 வீதி ஊடாக வாரத்தில் மூன்றுதடவைகள் ஐந்து பஸ்கள் சேவையில் ஈடுபட இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆரம்ப நாள்களில் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டாலும் காலப் போக்கில் சேவைகள் வழமைக்கு திரும்பிவிடும்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இத் தகவலைத் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சரிடம் மாணவர்கள் எழுப்பியகேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார். போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் எழுப்பியகேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் அன்றி பொதுமக்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளேன். விரைவில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏ9 பாதையை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. வாரத்தில் மூன்று தடவைகள்  5 பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்று கூறினார்.

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் விரைவில் வரவுள்ளார். அப்போது நீங்கள் அவரைச் சந்திக்க விரும்பினால் அதற்கான வாய்பை நான் ஏற்படுத்தி தருவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார். துணைவேந்தர் ஊடாக விண்ணப்பித்தால் இந்தியத் தூதரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.

சட்டமா அதிபர் மொஹான் இன்று யாழ். சென்றுள்ளார்

சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார் சட்ட உதவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொதுநூலககேட்போர் கூடத்தில் இன்று நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்

நாளை காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட நீதிபதிகளை அவர் சந்தித்து சட்டம், ஒழுங்கு பேணும் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார்.சட்ட உதவி நிறுவனம் நடத்தும் செயல மர்வில் சிறப்புரையாற்ற சிரேஷ்ட சட்டத் தரணிகளான கனகநாயகம் கனகேஸ்வரன், எஸ்.சுமந்திரன், பரிஸ்டர் ராஜபக்ஷ ஆகியோர் ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும்

trincomalee-district.jpgதிருகோண மலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். இப்பணியில் திருகோணமலைக் கல்வி வலயத்தின் ஆக்கத்திறன் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்தார்.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் வலயப் பாடசாலைகளுக்கான 2009 புத்தாக்கக் கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகப் பணிப்பாளர் தண்டாயுதபாணி கலந்துகொண்டு பேசினார். திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இக் கண்காட்சி நடத்தப்பட்டது.

“திருகோணமலையில் அறிஞர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். ஆனால், அவை தொகுக்கப்பட வேண்டும். இத்துறையில் விடப்பட்டிருக்கின்ற இடைவெளியை நிரப்ப வேண்டும். மாவட்டத்தின் கல்வி வரலாறு ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு, புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். அது அவசியமாக செய்யப்பட வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் இதனைச் செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். இப்பணியை திருகோணமலை கல்வி வலய அலுவலகத்தின் ஆக்கத்திறன் மற்றும் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளேன்’ என்றும் பணிப்பாளர் தண்டாயுதபாணி தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களுக்கு அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு

25dallas_alahapperuma.jpgஇலங்கை ரயில்வே சேவையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு ஒன்றை  வழங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்துள்ளார்.

எமது நாட்டில் செயற்திறன்மிக்க ரயில்வே சேவையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காகவும்  மற்றும் ரயில்வே ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் இந்த  விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம்

ltteir-banner-1.jpgவிடு தலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.

இதற்கு துணைபுரியும் வகையிலேல் www.ltteir.org என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மேலும் – மக்களோடு நெருங்கி செயல்படும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக – ‘பத்மநாதன் பக்கங்கள்’ எனும் ஒரு சிறப்புத் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ltteir-banner-1.jpg

செவ்வாய்க்கிழமை மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்

maical-jak.jpgமைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம் வருகிற செவ்வாய்க்கிழமை லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ளது. உடல் அடக்கத்திற்கு முன்னதாக ஜாக்சனின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ரான்டி பிலிப்ஸ் கூறியுள்ளார்.

ஏஇஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலதிகாரியாகவும் இருக்கும் பிலிப்ஸ் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸ் நேரப்படி காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கும். அங்குள்ள ஸ்டேப்பி்ள்ஸ் மையத்தி்ல் ஜாக்சன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறும்.

20 ஆயிரம் பேர் அந்த மையத்தில் அமர முடியும். ஆனால் பெருமளவில் கூட்டம் கூடும் என்பதால், மையத்திற்கு வெளியே பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும். இடம், நேரம் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜாக்சன் குடும்பத்தினருடன் இறுதியாக பேசிய பின்னர் அவையும் தீர்மானிக்கப்பட்டு விடும் என்றார்.

ஜாக்சனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள மையம், கால்பந்து சங்கத்திற்குச் சொந்தமானதாகும். முன்னதாக ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் உடல் அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் சிக்கல்கள் இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

வடக்கில் மீன்பிடித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்!

felixperera.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை மேம்படுத்த மீனவக் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மீன்பிடிää நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று ஜா-எலயில்  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

இத்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்குத் தேவையான படகுகள்,  வலைகள் மற்றும் மீன்பிடிக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன. வடக்கில் மீன்பிடித்தடைகள்; இப்பொழுது அகற்றப்பட்டு  24 மணி நேரமும்  மீன்பிடியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 219 மீனவக் கிராமங்களில் உள்ள 39 ஆயிரத்துக்கும்  அதிகமான மீனவர்கள்; நன்மையடையவுள்ளனர்.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் 67, 500 மெற்றிக் தொன்னையும் விடக் கூடுதலான மீன்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. எனினும் வடக்கின்  கடற்றொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் அதைவிடக் கூடுதலான மீன்களை தெற்கிற்கு கொண்டுவர முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்