July

July

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்பு படைப் பிரிவு கட்டளைத் தளபதி விஜயம்

வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேசங்களிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் படைப் பிரிவைச் சேர்ந்தார்களும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றன.இரு புனர்வாழ்வு நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட வன்னி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியுடன் இராணுவத்தின் 211வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் ஜகத் ரத்நாயக்க, யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். இந்துவிலிருந்து 93 மாணவர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு

jaffna-hindu-college.jpgயாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பொறியியல் பீடத்திற்கு 25 பேரும் மருத்துவபீடத்திற்கு 12 பேரும் உட்பட 93 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி அதிபர் வி.கணேசராஜா தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான “Z”வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே இம்மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கணிதப் பிரிவிலிருந்து பொறியியல்  20, பொறியியல், பொறியியல் 1, கணிய அளவையியல் 2, கணினி விஞ்ஞானம் 4, அளவையியல் விஞ்ஞானம் 1, தகவல் தொழில்நுட்பம்8, பௌதீக விஞ்ஞானம் 5, கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்4 என்ற அடிப்படையில் 49 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

விஞ்ஞான பிரிவிலிருந்து மருத்துவம் 12, மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் 1, உணவு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் 1, உணவு விஞ்ஞானமும் போசாக்கும் 1, விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடியும்1, விவசாயம்7, பிரயோக விஞ்ஞானம்1, உயிரியல் விஞ்ஞானம் 3, யுனானி மருத்துவமும் அறுவை சிகிச்சையும் 1, நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்1, சித்த மருத்துவம் 3 என்ற அடிப்படையில் 32 பேர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் வர்த்தக பிரிவிலிருந்து சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் 1, வணிகவியல் 1 என்ற அடிப்படையில் 2 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். மேலும் கலைப்பிரிவிலிருந்து கலை2, கலை (வெகுஜன ஊடகம்) 4, கலை (அரங்கக்கலை) 4 என்ற அடிப்படையில் 10 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

யாழ், வவுனியா மற்றும் ஊவா தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டை 15இல் அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்ப ஏற்பாடு

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும், ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் எதிர்வரும 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக யாழ். மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 473 விண்ணப்பங்களுள் 335 ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.

சரியான தகவல்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தபால்மூல வாக்களிப்பை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி யாழ். கச்சேரியில் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவிருப் பதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை வவுனியா நகரசபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 197 விண்ணப்பங்களுள் 183 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சரியான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக சுமார் 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் நடாத்தப்படவுள்ளன.  எதிர்வரும் 07ஆம் திகதி சிரேஷ்ட தலைமை அலுவலகர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 8ஆம் திகதி கிராம அலுவலகர்கள் மற்றும் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற் சிகள் நடத்தப்படுமெனவும் 09ஆம் திகதி பிரதம கணக்கீட்டு மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான பயிற் சிகள் வழங்கப்படுமெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.

மேலும் பதுளை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற 17 ஆயிரத்து 418 விண்ணப்பங்களுள் 16 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

மூன்றாவது முறையாக செரீனா சாம்பியன்

shereena.jpgவிம்பிள் டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் செரீனாவும், வீனஸும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் 5 முறை சாம்பியனான வீனஸ் தனது தாக்குதலை தொடங்கினார். முதல் செட்டில் இருவரின் செயல்பாடும் சம பலத்துடன் தெரிந்தது. அதாவது தாங்கள் “செர்வ்’ செய்யும் கேமை மட்டுமே வென்றபடி வந்தனர். இதனால் கடைசி வரை (66) சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் செரீனா, வீனஸின் சவாலை முறியடித்து, அந்த செட்டை தனதாக்கினார்.  ஆனால் 2ஆவது செட்டில் கடுமையான போட்டி இல்லை. இந்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுக்குள் கொண்டு வந்த செரீனா, அதனை எளிதாக வென்று விம்பிள்டன் பட்டத்துக்கும் சொந்தக்காரியானார்.

மொத்தம் 12 “ஏஸ்’ சர்வீஸ்களை வீசியது அவரது இலக்கை சுலபமாக்கியது. 85 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 7-6, (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, விம்பிள்டன் பட்டத்தை 3 ஆவது முறையாக கைப்பற்றினார். முன்னதாக 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டனை முகர்ந்து உள்ளார்.

ஆனால், இந்த மூன்று முறையும் அவர் தனது சகோதரி வீனஸையே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இது செரீனாவின் 11 ஆவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன் 3, அவுஸ்திரேலிய ஓபன் 4, அமெரிக்க ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1) பட்டமாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற செரீனாவுக்கு ரூபா 6 கோடியே 75 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த வீனஸுக்கு ரூபா 3 கோடியே 37 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெற்ற வெற்றியை செரீனா மேலும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். இது தவிர, வில்லியம்ஸ் சகோதரிகள் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

“ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்த அரசு 320 கோடி ரூபா ஒதுக்கு’

ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் 320 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஏ.புத்ததாச தெரிவித்தார்.
ஊவா மாகாணத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;  இன்றைய அரசு நான்கில் மூன்று பங்கு பலத்தைப் பெற்று ஊவாவின் ஆட்சியைக் கைப்பற்றும்.

ஐ.ம.சு.கூ. ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அதேவேளை நாட்டை கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டுள்ளது. எனவே இவ்விரு காரணங்களால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது முறையாகவும் ஊவா மாகாண சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே பெறும் என்பதில் ஐயமில்லை. பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. தலைமை வேட்பாளராக நானும், மொனராகலை தலைமை வேட்பாளராக சசீந்திர ராஜபக்ஷவும் போட்டியிடுவதாலும் நாட்டின் யுத்த வெற்றியை கருத்திற் கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஐ.ம.சு.கூ.வுக்கு ஆதரவாக வாக்களிக்க இணைந்துள்ளனர்.

இன்று ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்தும் முகமாக ரூபா 320 கோடியினை அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிரவும் பதுளை பெரியாஸ்பத்திரியினை முழுமையான வைத்திய உபகரணங்கள் வழங்கி அதனை கொழும்பு வைத்தியசாலையின் தரத்திற்குக் கொண்டு வந்தால் இங்குள்ள 15 இலட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

அதுமாத்திரமின்றி கொழும்பில் இருந்து ஊவா மாகாணத்துக்கு, ஊவா மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் நீண்ட வீதிகளை செப்பனிட்டுள்ளது. இங்குள்ள தோட்ட வீதிகள், கிராமிய வீதிகள் போன்றவை மகநெகும, கமதிரிய வேலைத்திட்டத்தினூடாக மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கொங்கிரீட் இடப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியின் பிரபல பிரதேச சபை உறுப்பினர்கள் அறுவர் உட்பட 6,000 பேர் இணைந்து ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிக்கவுள்ளனர். இதனால் ஜே.வி.பி. மற்றும் தமிழ், முஸ்லிம் பெயர்களைத் தாங்கி வரும் கட்சிகளிலிருந்து ஒரு உறுப்பினராவது ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகுவது சந்தேகமே. இவற்றினை ஊவாவில் வாழும் மக்கள் நன்கு புரிந்துள்ளனர் என்றனர்.

சப்ரகமுவ ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமனம்

sabaragamuwa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவினால் சப்ரகமுவ மாகாண ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ் ஆளுனராக இருந்த மொஹான் சாலிய எல்லாவல உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

வவுனியா நலன்புரி முகாம்களில் உளவள ஆலோசனைச் சேவை

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கல்வியமைச்சின் இரண்டாம் கட்ட உளவள ஆலோசனைச் சேவை செயற்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தில் முதலாம் கட்டம் கடந்த மே மாதம் திருகோணமலை மாவட்ட நலன்புரி நிலையங்களில் நடைபெற்றன.

யுத்தச் சூழலிலிருந்து மீண்டும் வந்துள்ள மக்களின் மனோநிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டே இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செயற்திட்டத்திற்கு நாட்டின் அரச பாடசாலைகளில் உளவள ஆலோசனைச் சேவையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும் ஆசிரியர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு செல்லவுள்ளனர்.

முதலீட்டுச்சபை கிளை யாழ்நகரில் திறக்கப்படும்

jaffna.jpgயாழ்.  மாவட்டத்தில் இலங்கை முதலீட்டுச்சபை பணியகக்கிளை நிறுவப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் நிர்வாக நிறைவேற்றுப் பணிப்பாளர் டபிள்யூ.பியசேன தெரிவித்துள்ளார். யாழ்.செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முதலீட்டுச் சபையின் தொழில்நுட்ப நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.பி.எல்.டி.சில்வா, தலைமைச் செயலகப் பணிப்பாளர் திருமதி ரேணுகா வீரக்கோன், சிவாணி பெஞ்ஜமின் ஆகியோரும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷம் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், மருத்துவக் கல்லூரி, ஹோட்டல்கள், தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முதலீட்டுச்சபை அங்கீகாரம் வழங்கவுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 300 தொன் நிவாரண பொருள் – குவைத் அரசு அனுப்பிவைப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்காக குவைத் அரசாங்கம் 300 தொன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குவைத் நாட்டுக்கான பிரதிநிதி இந்நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

குவைத் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களுள் 4 ஆயிரம் கூடாரங்கள், 4 ஆயிரம் போர்வைகள், 4 ஆயிரம் உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமயலறை உபகரணங்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிவாரணப் பொருட்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இலங்கை வந்துள்ள அந்நாட்டுப் பிரதிநிதியினால் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்நகரில் இருநாள் நடமாடும் சேவை அமைச்சுகள், திணைக்களங்கள் பங்கேற்கும்

jaffna_town.jpgநீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, இரு நடமாடும் சேவைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.  கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை நல்லூர் திவ்விய ஜீவன மண்டபத்திலும், யாழ்.பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

இரு நடமாடும் சேவையின் போது விசேட சட்ட ரீதியான பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்களையும், தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான முறைப்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல், மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நடமாடும் சேவையில், நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கே.கம்லத் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச மற்றும் பதிவாளர் நாயகம் மற்றும் உதவிப் பதிவாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச் சேவையில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு, மாகாண காணிகள், பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மத்தியஸ்த சபை, மீன் பிடித்திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களும், அமைச்சுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.