February

February

புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக தாலிபான்கள் செயல்படுகின்றனர்: அமெரிக்க சிறப்புத் தூதர்

holbrooke_.jpgபாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாவில் 25 கிராமங்களில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்

world-bank-01.jpgகிராம மட்டங்களிலான அடிப்படை மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பயனை அம்மக்களுக்கு வழங்குவதன் அவசியம் உணரப்பட்டு வரும் நிலையில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பணிகளை நல்ல முறையில் முன்னெடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி பரவலாக்குவது தொடர்பில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வட மாகாணத்தின் அனைத்து துறைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது இதற்கு கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலின் போது மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உட்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்திற்கு உட்பட்டுள்ள 25 கிராமங்களின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் புதிய முகங்கள்; முன்னாள் உறுப்பினர்கள் பலர் தோல்வி

election_ballot_.jpgமத்திய மாகாண சபைக்கு இம்முறை பல புது முகங்கள் தெரிவாகியுள்ள அதேவேளையில் முன்னாள் உறுப்பினர்களுள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் பேசும் உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட துரை மதியுகராஜா (இ. தொ. கா), எஸ். செல்லமுத்து (இ. தொ. கா.), கந்தசாமி யோகராஜா ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்களாவர். இக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான றிஸ்வி பாரூக், ஏ. எல். எம். உவைஸ், எம். நிஸார் ஆகியோரும் குறைந்த விருப்பு வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். சிவஞானம் இ. தொ. கா., மாத்தளை மேயர் ஹில்மி கரீம் ஆகியோரும் தோல்வி கண்டுள்ளனர்.

ஐ. தே. கட்சி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட எம். எச். எம். இப்ராஹிம், எம். சுதாகரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் வெற்றியீட்டிய அதேவேளை முன்னாள் அமைச்சரான எஸ். அருள்சாமி, திருமதி அனுஷா சிவராஜா, புதிய வேட்பாளர்களான பழனி சத்யவேல், எல். பாரதிதாஸன், மயில்வாகனம் வேலு, கனகரத்தினம், கருப்பையா பிள்ளை, ஏ. கே. கல்யாண குமார் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

இதே மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட மருதபாண்டிய ரமேஷ், இராமசாமி முத்தையா ஆகிய இருவர் முதன் முறையாக மாகாண சபைக்குத் தெரிவாகி உள்ளனர்.

ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். சதாசிவம், கணபதி கனகராஜ், பீ. ஈ. திகாம்பரம் ஆகியோரும் புதிய முகம்களான பிரகாஷ் கணேஷ், உதயகுமார் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக மாகாண சபைக்கு வருகிறார்கள்.

எஸ். முருகையா, முரளி ரகுநாதன், எல். ஆர். நேருஜி, எம். ஆர். எம். ஹில்மி, எஸ். கிருஷ்ணகுமார், ஏ. ஏ. ஹரிச்சந்திரன் ஆகிய புதிய வேட்பாளர்களும் ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர். இதேவேளை ஐ. ம. சு. சார்பில் ஒரு பெண் உறுப்பினர் தெரிவாகி உள்ளார். இவர் திருமதி கேஷலா ஜயவர்த்னா என்பவர் ஆவார்.

ஐ. தே. கட்சி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான சித்ரா மன்திலக்க, ஷாந்தினி கோங்கஹகே ஆகியோரும் மீண்டும் தெரிவாகி உள்ளனர். ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் உறுப்பினர்களான எஸ். இராஜரட்ணம் எம். ஆர். எம். அம்ஜாத், எஸ். எம். எம். மர்ஜான், எம். எஸ். எம். ஷாபி ஆகியோர் தெரிவாகி இருப்பதுடன் புதிய உறுப்பினராக ஜெயினுலாப்தீன் லாபீர் தெரிவாகி இருக்கிறார். முன்னாள் உறுப்பினர் எம். நைமுல்லா இம்முறை தோல்விகண்டுள்ளார்.

சிவிலியன்களை பாதுகாப்பாக குடியமர்த்த செட்டிக்குளத்தில் மேலும் 100 ஏக்கர் காணி

vanni.jpgவன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் சிவிலியன்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு நேற்று அமைச்சர் ரிஷாட் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள், படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அதிகரிப்பு

justice.jpgஅடிப் படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 156 மனுக்கள் கூடுதலாக தாக்கல்செய்யப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2007 இல் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக 456 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ள அதேசமயம் 2008 இல் 621 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 398 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 2008 இல் உயர்நீதிமன்றத்துக்கு தாக்கல்செய்யப்பட்ட சில மனுக்கள் மீது சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதையும் சட்டத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தில் இந்தமாதம் ஆறாம் திகதிவரை அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக 84 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில் அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர் பாதிப்பு

medicine.jpgயாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அரசினர் வைத்திய சாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சிட்டைகளை ஆஸ்பத்திரி மருந்தகத்தில் கொடுத்தால், அந்த மருந்துகள் முடிவடைந்துவிட்டதாகவும், தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருந்து வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். விமான மூலம் மருந்துகளை எடுத்துவருவதால் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் உள்ள மருந்து வியாபாரிகள் கப்பல் மூலமே மருந்துகளை எடுத்து வருகின்றனர். விமான மூலம் டாக்டர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மருந்துகளை கொண்டுவரலாம். இதனால் முக்கியமான நோய்களுக்குரிய மருந்துகளை நோயாளிகள் அதிக விலைக்கே வாங்கிப் பாவிக்கின்றனர்.

குடாநாட்டில் தற்போது கடும் பனியும் கடும் வெயிலும் காணப்படுவதால் சளி, இருமல் போன்ற சுவாச நோய்களால் சிறுவர்கள் முதல் முதியோர் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவசர நோயாளர்களுக்குரிய மருந்து வகைகளை எதுவித கட்டணமும் இன்றி விமான மூலம் எடுத்து வந்து யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் மருந்துத் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ajmal.jpgமும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை  ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான

சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.

அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.

மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.

நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.