உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாவில் 25 கிராமங்களில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்

world-bank-01.jpgகிராம மட்டங்களிலான அடிப்படை மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பயனை அம்மக்களுக்கு வழங்குவதன் அவசியம் உணரப்பட்டு வரும் நிலையில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பணிகளை நல்ல முறையில் முன்னெடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி பரவலாக்குவது தொடர்பில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வட மாகாணத்தின் அனைத்து துறைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது இதற்கு கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலின் போது மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உட்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்திற்கு உட்பட்டுள்ள 25 கிராமங்களின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *