யாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அரசினர் வைத்திய சாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சிட்டைகளை ஆஸ்பத்திரி மருந்தகத்தில் கொடுத்தால், அந்த மருந்துகள் முடிவடைந்துவிட்டதாகவும், தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருந்து வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். விமான மூலம் மருந்துகளை எடுத்துவருவதால் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடாநாட்டில் உள்ள மருந்து வியாபாரிகள் கப்பல் மூலமே மருந்துகளை எடுத்து வருகின்றனர். விமான மூலம் டாக்டர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மருந்துகளை கொண்டுவரலாம். இதனால் முக்கியமான நோய்களுக்குரிய மருந்துகளை நோயாளிகள் அதிக விலைக்கே வாங்கிப் பாவிக்கின்றனர்.
குடாநாட்டில் தற்போது கடும் பனியும் கடும் வெயிலும் காணப்படுவதால் சளி, இருமல் போன்ற சுவாச நோய்களால் சிறுவர்கள் முதல் முதியோர் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவசர நோயாளர்களுக்குரிய மருந்து வகைகளை எதுவித கட்டணமும் இன்றி விமான மூலம் எடுத்து வந்து யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் மருந்துத் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.