பல்வேறு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து புலம்பெயர்ந்த தமிழ் அகதிகளால் கனடிய மண்ணில் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழர் வகைதுறைவள நிலையமாகும் (தேடகம்).
1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் வகைதுறைவள நிலையம், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயப்பாட்டை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஆக்க பூர்வமாக விமர்சித்தும் வந்துள்ளது.
இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து மறுத்துவரும் சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் தொடர்ச்சியான வன்முறை அரசியலை மறுத்து சுமூகமான முறையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளோம்.
ஆனால் இன்றுவரை பேரினவாத சிங்கள அரசுகளோ தமிழ் மக்களுக்கான ஆரோக்கியமான தீர்வு எதனையும் வெளிப்படையாக வைக்காமல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் இராணுவத் தீர்வுக்கூடாக கொன்று குவிப்பதிலும் அகதிகளாக்குவதிலும் தான் ஆர்வம் கொண்டு செயற்படுகின்றன. இக்கணம் வரை சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாது தமிழர்களை அழிப்பதிலேயே தீவிரமாக இருந்து வருகிறது.
இந்தியா அரசோ 1983ம் ஆண்டு இலங்கை அரசின் திட்டமிட்டு இனப்படுகொலைக் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியலஅபிலாசைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினால் பெற்றுத்தர முடியாது எனக்கூறி தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தீவிர ஆயுதமயமாக்கியது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற அரசியலை முடிவுக்குக் கொணர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையை இந்திய அரசு முன்தள்ளியது.
தேசிய விடுதலைப் போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுத முறையில் வெற்றிபெற்று பெருன்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகினார்கள்.
இந்தியஅரசு தனக்கு சாதகமான அரசியல் குழுக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் தலைமையில் இல்லையென்ற காரணத்தால் சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது. இயலாமல் போனபோது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாகக்கூறி தனது படைகளை அனுப்பி புலிகளுடன் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றழித்தது.
இன்று தனது கட்டுப்பாடின்றி சுயாதீன வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தனக்கு அச்சுறுத்தலாகக் கருதி இலங்கை பேரினவாத அரசுக்கு முழுமையான இராணுவ ஒத்துழைப்பை நல்கி தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்கு முறையை செயற்படுத்த உதவி வருகிறது.
இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவே உலகளாவிய விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கும், சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த நாடுகள் பின்வாங்குவதற்கு இந்தியாவே பின்னணியிலிருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவுடன் பணம், தள, ஆயுத உதவிகளை வழங்கிய இந்திய அரசு இன்று எமது போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
சிங்கள பேரினவாத யுத்தம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரதேசங்கள் யுத்த களமாக்கப்பட்டு தமிழ் மக்களை அவர்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் இன்று கோரி வருகிறது. அவர்களை பலவந்தமாக வெளியேற்ற கண்மூடித்தனமான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகின்றது.
சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தனது உக்கிரமான அடக்கு முறையை தொடர்ந்து வருகின்றது.
இன்றைய நிலையில் பெரும்பான்மைத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும், தமிழர் சுயநிர்ணயத்துக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பின்தள்ளும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.
சிங்கள பேரினவாத அடக்குமுறை தொடரும்வரை இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது தற்பாதுகாப்புக்காகவும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் போராட உரிமையுடையவர்கள்.
சிங்கள பேரினவாதம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திட்டமிட்ட தமிழர் இன அழிப்பை மிக நேர்த்தியாக தொடர்ந்தே வருகிறது.
இன்று இடம்பெயர்ந்த மக்களை இடைத் தங்கல் முகாம் என்ற போர்வையில் சிறையில் அடைத்து தமிழ் இளையவர்களை பிரித்தெடுத்து படுகொலை செய்தும், இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தாமல் தமிழர் பராம்பரிய நிலங்களில் இராணுவ மயமாக்கல் ஊடாக சிங்கள குடியேற்றத் திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப் படுத்தியதுபோல் வடக்கிலும் ஏற்படுத்த முனைகிறது.
இலங்கை-இந்திய அரசுகள் ஒன்றுபட்டு 1972ல் இலங்கையில் புரட்சி நிகழ்த்த முயன்ற சிங்கள இளைஞர்களை ஆயிரக்கணக்கில் அழித்ததை வரலாற்றில் பார்த்தவர்கள் நாம். இன்று இலங்கை- இந்திய அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இலங்கை தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை கொன்றொழித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த விமர்சனம் எமக்கு இருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்நீத்த ஒவ்வொரு போராளியும் எங்கள் உறவுகள். எங்கள் குடும்பத்தினர். ஒரே குடும்பத்திற்குள்ளேயே வேறு இயக்க ஆதரவு இருந்திருக்கிறது. கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன.
எமது முரண்பாடுகளை தீர்க்க அடக்குமுறையாளர்களை துணைக்கு அழைக்க முடியாது.
அன்று உள்முரண்பாடுகளை சாதகமாக்கிய இந்திய அரசு சகோதரப் படுகொலைகளை திட்டமிட்டு உருவாக்கியது. இன்று எம் உள்முரண்பாடுகளை காரணம் காட்டி இராணுவமயமாக்கல் ஊடாக தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை உருவாக்கி தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க நினைக்கும் இலங்கை இந்திய அரசுகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்.
சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையின் எதிர் வெளிப்பாடே தமிழீழ விடுதலைப் புலிகள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தனது அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தமிழர்களது எதிர்கால இருப்பையும் அழிக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
இலங்கை அரசே! தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து
இலங்கை அரசே! தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் அடைப்பதை நிறுத்து
இலங்கை அரசே! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர தீர்வை பகிரங்கமாகவை
இந்திய அரசே! புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்களின் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்து.
கனடிய அரசே! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு.
கனடிய அரசே! இலங்கையில் நடந்துவரும் தமிழின அழிப்பை கண்டித்து ஐ. நா சபையூடாக அகதிகளை பராமரிக்கவும், மீள் குடியேற்றவும், மனித உரிமைகளை கண்காணிக்கவுமான ஒழுங்குமுறையை உடனடியாக செய்.
கனடிய அரசே! ஐ.நா சாசனத்தின்படி சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூரண சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அரசியல் வழிமுறைகளைச் செய்.
உலக நாடுகளே! இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
– தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)-
ரொரன்டோ,
கனடா