முல்லைத் தீவிலிருந்து காயமடைந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களை ஏற்றிக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை தான் கப்பல் புறப்படும் என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் இக்கப்பல் நேயாளர்களுடன் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவை நோக்கி கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே பெப்ரவரி, 11, 12, 16 ஆம் திகதிகளில் மூன்று தடவைகளில் 1,212 பொதுமக்கள் கப்பலில் செஞ்சிலுவைச்சங்கத்தினரால் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலர், கந்தளாய், தம்பலகமம், பொலநறுவை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். சிறிய காயங்களுக்குள்ளானவர்கள், ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.