January

January

வன்னியிலிருந்து இடம்பெயர்வோருக்கு சுகாதார வசதி, போசாக்கான உணவு

hospital.jpgவன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் உள்ள மக்களுக்கும் சுகாதாரவசதிகள் மற்றும் போசாக்குள்ள உணவுகள் வழங்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே தெரிவித்தார்.

இங்குள்ள ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இயங்கி வருவதாகவும் அவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார் மருந்துகள், அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வன்னியில் இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது:

மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வட பகுதி மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி எமது அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.  இதன்படி ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் உயர் மட்ட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ஏனைய பகுதிகளுக்கு சமமாக வட பகுதி மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எனது தலைமையிலான உயர் மட்ட சுகாதார அமைச்சின் குழுவொன்று  (19) வவுனியாவுக்கு விஜயம் செய்தது. யுனிசெப், ஐ.சி.ஆர்.சி., உலக சுகாதார ஸ்தாபனம் அடங்கலான சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. வன்னியில் இருந்து வந்துள்ள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள மெனிக்பாம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டோம். வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்குவதற்கென மருத்துவர்கள், தாதிமார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு அம்பியூலன்ஸ், போசாக்கு உணவுகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

 மெனிக் பாம் முகாமுக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் வைத்தியசாலையையும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். நெடுங்குளத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமில் சுகாதார நிலையமொன்றை அமைத்து தேவையான சுகாதார அதிகாரிகள், மருந்துகள், அம்பியூலன்ஸ் என்பன வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வன்னியில் இருந்து வரும் மக்களுக்கென திரீபோசா அடங்கலான போசாக்கு உணவுகள் 40 லொறிகளில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டன.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளின் நிலைமைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளருடன் தினமும் தொடர்புகொண்டு உரையாடி வருகிறோம். அங்குள்ள குறைபாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக ஆஸ்பத்திரி செயற்பாடுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது ‘செல்’ விழுந்து 18 நோயாளிகள் இறந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

செல் தாக்குதலினால் இரு நோயாளிகள் சிறுகாயமடைந்ததாக ஆஸ்பத்திரி மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். இந்த தாக்குதலை யார் செய்தனர் என்று தெரியாது. தாக்குதலில் புலிகள் இறந்ததை சிவிலியன்கள் என பி.பி.சி. தவறாக செய்தி வெளியிட்டிருக்கலாம். செல் விழுந்து சிவிலியன்கள் பலியானதாக தவறான தகவல் வழங்கிய மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள நோயாளிகள் வவினியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு வந்த 34 நோயாளிகள் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் புதுக்குடியிருப்புக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தமது உறவினர்கள் அங்கு இருப்பதால் அவர்கள் புதுக்குடியிருப்பிற்கு திரும்பிச் சென்றனர். மூன்று தினங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் 7 கர்ப்பிணி தாய்மார்களை அழைத்துக்கொண்டு வவுனியா வந்தார்.

ரணிலின் உரை ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பு

ranil-2912.jpgபாராளு மன்றத்தில் தான் ஆற்றிய உரை வானொலியில் ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையின் இடைநடுவே பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி. சிங்கள செய்தி சேவையில் ஒலிபரப்பப்பட்ட போது இடையில் பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் தனது உரைக்கு இடைநடுவில் பாராளுமன்றத்திலேயே பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதா அல்லது இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து ஒலிக்கச் செய்யப்பட்டதா என்று அவர் நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

handcuff.jpgபுத்தளம், மாரவில பகுதியிலிருந்து இயந்திரப் படகொன்றில் அவுஸ்திரேலியா நோக்கி திங்கட்கிழமை மாலை புறப்பட்ட 19 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படகோட்டி ஒருவருக்கு பெருந்தொகை பணம் செலுத்திய 19 பேர் கடந்த 15 ஆம் திகதி மாரவில கரையிலிருந்து படகில் புறப்பட்டனர்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக இவர்கள் சென்ற இயந்திர படகு பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் கரைதிரும்பியது. இதையடுத்து இந்தப் 19 பேரும் கட்டுநேரிப் பகுதியில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டனர். மீண்டும் திங்கட்கிழமை மாலை மாரவில கரையிலிருந்து அந்த இயந்திரப் படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். இவர்களது நடமாட்டத்தை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இது பற்றி மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கவே, இவர்கள் புறப்படும் போது அங்கு வந்து 19 பேரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இதில் 15 பேர் தமிழ் இளைஞர்களெனவும் ஐவர் சிங்கள இளைஞர்களெனவும் தெரியவந்தது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதமாற்ற தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சி – கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

மத மாற்றத் தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மத சுதந்திரத்துக்கான கிறிஸ்தவ அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் இச்செயலுக்கு எதிராக மக்கள் சக்தியை அணிதிரட்ட அந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.  இது தொடர்பில் திங்கட்கிழமை கொழும்பு அளுத்மாவத்தையிலுள்ள இயேசு ஜீவிக்கிறார் பணிமனையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டதோடு விஷேட அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மீண்டும் ஒரு முறை மதமாற்ற தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, சில புத்த பிக்குகள் நினைக்கிறார்கள். இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின், சுவிசேஷம் சொல்ல முடியாது, ஆன்மீகக் கூட்டங்களுக்குத் தடை, ஞானஸ்தானம் கொடுக்க முடியாது, வீட்டுக் கூட்டங்கள், வைத்தியசாலை ஜெபங்கள் செய்ய முடியாது, மதப் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற முறைகளை இந்தச் சட்டம் தடுப்பதால், நற்செய்தி அறிவிப்பது அழுத்தத்துக்குள்ளாகி இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உரிமையும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதால் நாம் இதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இலங்கை அரசியல் யாப்பின் 3 ஆம் அத்தியாயம் 10,12 ஆம் ஷரத்துக்களின்படி ஒவ்வொரு மனிதனும் தனது சுய சிந்தனைக்கு சுதந்திரமானவனென்றும், சுய நினைவின்படி முடிவெடுக்கவும் ஒரு மதத்தின் கொள்கையை பின்பற்றவோ அல்லது ஒரு மதத்தை தழுவவும் அல்லது ஒரு நம்பிக்கையை தன் விருப்பப்படி பின்பற்றவும் சுதந்திரமானவன் என்றும் எந்த பிரஜையும் சாதி, சமயம், மொழி, பால், அரசியல் நோக்கம், பிறந்த இடம் இப்படிப்பட்ட நிலைமைகளில் ஒடுக்கப்படலாகாது என்றும் உள்ளது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தனது சுயவிருப்பத்திற்கமைய எந்த சமயத்தையும் தெரிந்தெடுக்கவும் உரிமை உடையவன்.

2003 ஆம் ஆண்டு  இந்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பல எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. மீண்டும் 2004 ஆம் ஆண்டு இச்சட்டமானது ஹெல உறுமயவினால் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பாராளுமன்ற குழப்ப நிலைமைகளால் கைவிடப்பட்டது. மீண்டும் 3 ஆம் முறையாக இச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே இந்த சட்டத்தை இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் உலகம் வாழ் கிறிஸ்தவர்களும் எதிர்க்கின்றனர். கிறிஸ்தவ நாடுகள் மற்ற சமயங்களிலுள்ளவர்களுக்கு இடையூறு விளைவித்து, சமய நம்பிக்கைகளில் தடைகள் ஏற்படுத்துவதில்லை. சகலருக்கும் மத சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்திக் கேட்பது மீண்டுமொருதடவை மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் சகல இனமக்களும் ஒற்றுமையுடன் வாழும் நிலையை உறுதிப்படுத்துமாறும் கேட்கின்றோம்.  தேசிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் செயலாளர் வணபிதா ரொஷான் டி.எஸ்.ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சமீபகாலமாக கிறிஸ்தவ மக்கள் மிகவும் மோசமாக கணிக்கப்பட்டு வருவதாகவும் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தார். ஒரு ஜனநாயக நாட்டில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. அதுவும் சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் ஜனநாயகம் வலுவிழக்கச் செய்யப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் மத மாற்றத் தடை முயற்சிக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு – இருவர் பலி. 11 பேர் காயம்

batti-town.jpgமட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில்  பொலிஸ்  அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும்  பொலிஸ் துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 2  பொலிஸார்  மற்றும் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக  பொலிஸ் , இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகரப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் – சபாநாயகர்

speaker.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐ. தே. க. சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று (21 ஆம் திகதி) சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணிப் பிரதம கொறடாவும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா இந்த ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலையை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சபையில் கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இச்சமயமே சபாநாயகர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலை தொடர்பாக (நாளை) இன்று சபையில் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை – அமெரிக்க பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகளால் அண்டை நாடுகளுக்கு பாதிப்பில்லை

sl-parlimant.jpgஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகள், அண்டைய நாடுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதென்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைப்பதற்கு இடமளிக்கப் படமாட்டாதென்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர், அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கில் பாடசாலைகளைப் புனரமைக்கவும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இலங்கை வந்ததாகக் கூறினார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பு, சேவை பரிமாற்றம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கு மிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இது குறித்த கலந்துரையாடல்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நோக்கில்தான் மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வந்தார்கள். ஜே. வி. பி.யினர் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அவர்கள் இலங்கை வரவில்லை இவ்வாறு 89 நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

கிழக்கில் சமூக, பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பாதுகாப்புத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார எழுப்பிய கேள்விகளுக்குத் தனித்தனியாகவும் பதில் அளித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதியொருவர் என்ன நோக்கத்திற்காக இலங்கை வந்தார். எப்போது வந்தார், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஆற்றும் பணிகள் யாவை, எப்போது திருப்பிச் செல்வார்? என்றெல்லாம் அனுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேலும் பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தார்கள். 14 ஆம் திகதி மாலைதீவு சென்று மீண்டும் வந்தார்கள். 18 ஆம் திகதி நாடு திரும்பிவிட்டார்கள். வேறு எந்த இராணுவ செயற்பாடுகளுக்கும் அவர்கள் இலங்கைக்கு வரவில்லை. அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு சர்வதேச நாட்டுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.